Friday 15 September 2017

பண்பாட்டை முன்னெடுத்தலில் இளைஞர்களுக்கான வெளி



ண்பாட்டை முன்னெடுத்தலில் இளைஞர்களுக்கான வெளி
ஞா.குருசாமி,
அரசுக்கும் மக்களுக்குமான வெளி சிறுகச் சிறுக அதிகரித்து இன்று உச்சத்தை எட்டியிருக்கிறது. ஆட்சியாளர்களின் சிந்தனையும் செயல்பாடும் அவர்களின் உள்மனவெளியின் பாசாங்குத் தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. மக்கள் எல்லாவற்றையும் சகிக்கப் பழகிவிட்டிருப்பதுதான் காலத்தின் பேரவலம். ‘கறுப்பாக இருப்பவர்கள் இந்தியர்கள் அல்ல’, ‘சிறுபான்மையினர் தேசத் துரோகிகள’;, ‘லெக்கின்ஸ் அணியும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள’; என்றெல்லாம் ஆட்சியாளர்களிடம் இருந்து வெளிப்பட்ட ஆபத்தான பேச்சுகளுக்கும் பண்பாட்டோடு தொடர்புடைய பிற்போக்கான கருத்துக்களுக்கும் மக்கள்திரள் போதுமான எதிர்வினையைக் காட்டாதது சமுதாய அக்கறையுள்ளவர்களைக் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. தேசியச் சூழல் இப்படியிருக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்படுத்தும் உளவியல் நெருக்கடிகள் ஏராளம். இவைகளுக்கு இடையில் எல்லாவற்றுக்கும் ஏங்கித் தவிக்கும் சமூகம் ஒன்றும் உருவாக்கப்பட்டுவிட்டது.
வாழ்தலுக்கான இருத்தலுக்கே ஏங்கித் தவிக்கும் சூழலில் பண்பாட்டை முன்னெடுக்கும் சாத்தியப்பாடுகள் குறித்தும் அவதானிக்க வேண்டிருக்கிறது. சர்வதேசிய மற்றும் இந்தியத் தேசியத்திற்கான பண்பாட்டுக் கூறுகளில் சில, பிராந்திய பண்பாடுகளுக்கும் பொருந்துவதுண்டு. அந்தவகையில் சர்வதேசிய, இந்தியப் பண்பாட்டுக்கேயுரிய வேளாண்மையை மையமிட்ட தன்மை தமிழ்ப்பண்பாட்டுக்கும் பொருந்தும். தமிழ்ப் பண்பாடும் வேளாண்மையோடு பின்னிக்கிடப்பது. சடங்கு, விழா, வழிபாடு முதலிய எல்லாமும் வேளாண்மையில் இருந்தே உருவாக்கப்பட்டு மக்களுக்குக் கிடைத்தவை. இதனால் தான் பழந்தமிழ் இலக்கியங்களும் காப்பியங்களும் வேளாண்மையையும் அதோடு தொடர்புடைய நீர், நிலம், காடு, மலை என எல்லாவற்றையும் கொண்டாடி இருக்கின்றன. இப்போக்கை கிரேக்க காவியங்களிலும் வட இந்தியப் பழங்கதைகளிலும் காணமுடியும்.
வேளாண்மை உயிர்ப்போடு இருந்தவரையில் பண்பாடும் உயிர்ப்போடு இருந்தது. சமுதாயம் இயற்கையில் இருந்து அந்நியப்பட்டதன் விளைவு வேளாண்மையை இழந்திருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் வேளாண்மைக்கு ஏற்பட்ட பின்னடைவில் குடும்பங்கள் உடைந்திருக்கின்றன. களத்துமேட்டில் வாரக் கணக்கில் குடியிருந்து கதிரடித்து அங்கேயே பச்சை நெல்லைக் குத்திச் சமைத்து உண்டு பெருங்கூட்டமாய் வாழ்ந்த குடும்பத்தின் சிதைவுக்குப் பின,; எஞ்சி நின்ற உறவுச் சொற்களும் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, அத்தை, மாமா என்னும் இரண்டாம் மூன்றாம் நிலை உறவுச் சொற்களைக் குடும்பங்கள் உச்சரிக்கும் சூழல் வெகுவாகக் குறைந்துவிட்டிருக்கிறது.
சர்வதேசிய மற்றும் தேசியக் கொள்கைகள் கூடி வாழும் வாழ்வியல் முறையைச் சிதைத்தமைக்குப் பின் புதிதாக உருவான தனிக்குடும்ப வாழ்வியல் முறையும் இன்றைக்குக் கடைசி மூச்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கல்வி, வேலை, திருமணம் முதலியவைகளின் பொருட்டு ஒவ்வொருவரும் சிதறடிக்கப்பட்டுவிட்டனர். நான்கு உறுப்பினர்களைக் கொண்ட மத்தியதரக் குடும்பத்தில் நால்வரும் சந்தித்துக் கொள்ளும் தருணங்கள் அருகி வருகின்றன. திருவிழா காலங்களிலும் தொடர் விடுமுறை நாட்களிலும் விமானம், இரயில், பேருந்துகளில் நிரம்பி வழிகின்ற மக்கள் கூட்டம் பூர்வீக வாழ்விடத்தில் இருந்து சிதறடிக்கப்பட்டிருக்கும் மக்கள் திரளின் அளவுகோள்.
இவ்வளவு சூழ்நிலைகளையும் கடந்து படித்து முடிக்கும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் தீராத பிரச்சினை வேலையின்மை. அமைப்பு சாரா தொழிலாளர்கள் சம்பாதிப்பதற்கு இருக்கும் சூழல் கூட படித்த இளைஞர்களுக்கு இல்லை. இதனால் இளைஞர்களுக்குத் தக்க வயதில் கிடைக்க வேண்டிய நிரந்தர வருமானம், திருமணம் முதலிய யாவும் தள்ளிப் போகின்றன. இவற்றால் இளைஞர்களுக்கு நேரும் உளவியல் சிக்கல் கொடூரமானது. அதுவும் முதல் தலைமுறையில் இருந்து படித்துவந்த இளைஞர்களெனில் அவர்களுக்கு முன்னால் விரியும் வெறுமை சூழ்ந்த உலகம் இருக்கிறதே அது சொல்லில் அடங்காதது.
இந்நிலையில் இன்று உருவாக்கப்பட்டிருக்கும் நவீன நுகர்வுக் கலாச்சாரம் பணம் படைத்தவர்களுக்கான உலகத்தை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. முன்பெல்லாம் பழுதான பொருள்களைப் பழுது நீக்கிப் பயன்படுத்துகிற பழக்கம் இருந்தது. இன்று தூக்கி எறிந்துவிட்டு புதிதாக வாங்க வேண்டிய மனநிலை அனைவருக்குள்ளும் கட்டமைக்கப்பட்டுவிட்டது. வாரம் ஒருமுறையேனும் உயர்தர உணவகங்களுக்குச் செல்வது அவசியமாக்கப்பட்டுவிட்டது. நண்பனொருவன் இருபதாயிரம் மதிப்புள்ள செல்போன் வைத்திருக்கும் இடத்தில் ஐந்தாயிரம் மதிப்புள்ள செல்போனை வைத்திருப்பவனின் நிலை அவமானத்திற்குரியதாக மாற்றப்பட்டுவிட்டது. நண்பன் வீட்டில் கார் நிற்கும் போது தனது வீட்டில் பைக் கூட இல்லையே என ஏங்குவோரும் இல்லாமல் இல்லை. வசதி படைத்த ஆண் நண்பனைக் கொண்டிருக்கும் சக பெண்ணின் வாழ்வியல் சூழல், அது அமையாத பெண்ணுக்குக் கௌரவப் பிரச்சினையாக ஆகியிருக்கிறது. வரதட்சனை என்ற ஒற்றைக் காரணத்திற்காகத் தள்ளிப் போகும் திருமணத்தாலும் மாப்பிள்ளை வீட்டார் நிராகரிப்பதற்காகச் சொல்லும் அற்பக் காரணங்களாலும் மனம் வெதும்பிப் போயிருக்கிற இளைஞிகள் எக்கச்சக்கம்.
பெருநகரங்களில் படித்த வேலையில்லா இளைஞர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுக் கைதாகின்ற செய்திகளின் வரத்தும் இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது. இதற்கான காரணம் இன்று நேற்று உருவானதல்ல. வேளாண்மையைச் சிதைக்கத்; தொடங்கியபோதே ஆரம்பித்து விட்டது. மக்களின் வாசிப்பிடத்திலேயே அவர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்துக்கொண்டிருந்த வேளாண்மை அழிக்கப்பட்டதால் உருவான பிரச்சினை அது.
இந்தச் சூழலில் இளைஞர்கள் பண்பாட்டை முன்னெடுக்க வேண்டும். பண்பாடு பேணப்பட வேண்டும். தமிழ்ப் பண்பாட்டுக்கான தனித்தன்மையை இழந்து விடக்கூடாது என்பதான முன்னெடுப்புகள் சவால் நிறைந்தது. மக்கள் யாரும் இப்பொழுது கூட்டாக இல்லை. ஒவ்வொருவரும் தனித்தனி மனிதராக ஆக்கப்பட்டுவிட்டார்கள். எல்லாருடைய கைகளிலும் இருக்கின்ற வசதிகள் நிரைந்த செல்போன்களே அவர்களின் உலகத்தைத் தீர்மானிக்கின்றன. அரைமணி நேரப் பயணம் என்றாலும் கூட பக்கத்தில் அமர்ந்திருப்பவரோடு பல கதைகளைப் பேசி பயணம் செய்த காலத்தின் சுகம் இனி சாத்தியம் இல்லை. பத்துமணி நேரப் பயணம் என்றாலும் பக்கத்தில் இருப்பவரை அறியாமல் வாழ்தல் தான் வாழ்வாக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தனித்தனியாகச் சிதைந்திருக்கும் மனிதர்கள் தமது பண்பாட்டைக் காப்பாற்ற முடியுமா? தனி மனிதர்களால் பண்பாட்டு நீட்சி சாத்தியமானதா? இதுவரை கைக்கொண்டு வந்த, மேன்மையானதாக நம்பப்படுகின்ற பண்பாடு இனி அதே வடிவத்தில் தொடர்ந்து வருமா? தற்போதைய பண்பாட்டின் வடிவம் உண்மையிலேயே மிகப் பழமையானதா? உலகம் ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் போது பிராந்தியப் பண்பாட்டைச் சுமந்துகொண்டிருக்க முடியுமா? என்பதான கேள்விகளையும் அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளி விடமுடியாது. காலந்தோறும் காலத்திற்கேற்றவாறு தகவமைப்பட்டே வந்திருக்கும் பண்பாடு, டிஜிட்டல் யுகத்திலும் டிஜிட்டலாக மாற்றப்படும். ஏனெனில் பண்பாடு ஆவதல்ல ஆக்கப்படுவது. பண்பாட்டு முன்னெடுப்பு இளைஞர்களால் மட்டுமே ஆகக்கூடியதும் அல்ல. அது ஒரு கூட்டு மனநிலைச் செயல்பாடு. அது நிகழ்ந்தேற இளைஞர்களோடு அனைத்துத் தரப்பினரும் கைகோர்க்க வேண்டும். அரசியலையும் ஆட்சியையும் இளைஞர்களுக்குக் கொடுத்தாக வேண்டும். செய்யத் தவறும் பட்சத்தில் காலம் அவர்களின் கைகளில் ஆயுதங்களைத் தந்துவிட்டுப் போகும்.
.....

Tuesday 12 September 2017

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள்



அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள்
ஞா. குருசாமி,
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர் ரோகித் வெமுலா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்ணைப் பெற்று மருத்துவப் படிப்பை எதிர்நோக்கி இருந்த அனிதா என ஆராய்ச்சிலும் கல்வியிலும் தனித்திறன் பெற்ற திறமைசாலிகளை அரசு எந்திரம் குறிவைத்து தற்கொலைக்கு உள்ளாக்கும் போக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த தேசத்தில் வருணாசிரமத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் சதிக்கொடுமை ஒன்றும் புதியதல்ல. ஏகலைவர் காலம் தொடங்கி நடத்து வருகிறது. ஏகலைவர், நந்தர் என்னும் மிக நீண்ட வரிசையில் இன்றைக்கு அனிதாவை இழந்திருக்கிறது இந்த சமுதாயம் என்று மிகவும் மொன்னையான சமாதானத்தைத் தற்காலிகமாகக் கூடத் தேடிக்கொள்ள மனம் மறுக்கிறது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் முக்கியக் கவனம் பெற்ற நிகழ்வு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரிய போராட்டம். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் ஒருங்கிணைந்து களம் கண்டனர். அது தமிழர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போய் உறங்கிக் கிடந்த வீரத்தின் வெளிப்பாடு என்றெல்லாம் பேசப்பட்டது. அந்தளவுக்கு பண்பாடு முக்கியம் என்பதாய் மாட்டுக்காகப் போராடிய சமுதாயம், நீட் தேர்வால் உண்டாகும் பாதிப்பை பேசத் தயங்குவது புதிராக இருக்கிறது. ஆங்காங்கு நீட் தேர்வுக்குத் தடை கோரி கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் பொதுமக்களுக்கான பங்களிப்பு ஜல்லிக்கட்டுக்கு இருந்ததைப் போன்று இல்லை.
ஏற்றத்தாழ்வுக்குக் குறைவில்லாத இந்தத் தேசத்தில் மந்திரிகள், அரசியல்வாதிகள், வருவாய்த் துறையினர், ஆசிரியர்கள், சுமைதூக்குவோர், தூய்மைப்பணியாளர்கள், சமையல்காரர்கள், பிச்சைக்காரர்கள், திருநங்கைகள், பாலியல் தொழிலாளிகள், வேட்டையாடிகள், வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் என பலப்பல தரப்பினருக்கும் ஒவ்வொரு உலகம் இருக்கின்றது. ஒவ்வொரு உலகத்திற்குள்ளும் ஒவ்வொரு சிறு உலகங்கள் இருக்கின்றன. இவர்கள் எல்லோருக்கும் பொருளாதாரத்தில், வாழ்விடச் சூழலில், கல்வியில் எப்போதும் சமத்துவம் இருந்ததில்லை. ஒவ்வொரு உலகமும் இன்னொன்றைச் சார்ந்தோ, சுரண்டியோ வாழ வேண்டிய நிர்பந்தங்கள் சுயநலத்தின் பேரில் வலுவாகக் கட்டப்பட்டுள்ளன.
இந்த உலகங்களின் எதிர்கால அபிலாசைகளுக்காக அவரவர் வசதிகளைப் பொறுத்து வகைவகையாய் பள்ளிகள் உருவாக்கப்பட்டு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஒரே பள்ளிக்குள்ளும் விதவிதமான கற்பித்தல் முறைகள் வழக்கத்தில் உள்ளன. தேர்வு முடிவுகளிலும் வேறுபாடுகள் ஏராளம். இந்தச் சூழலில் படித்து வருகிறவர்களுக்குத் தேசிய அளவில் பொதுத் தகுதித் தேர்வு நடத்துதல் எந்த வகையிலும் ஏற்புடையதன்று. பத்துத் தலைமுறைகளாகக் கல்விப் பின்புலமுள்ளவருக்கும் முதல் தலைமுறையைச் சார்ந்தவருக்கும் ஒரே மாதிரியான தேர்வை நடத்துதல் துரோகமன்றி வேறெதுவுமில்லை.
அறிவாளிகளாகத் தங்களைக் கருதிக்கொள்கிறவர்கள் மருத்துவப் படிப்பு கிடைக்காவிட்டால் வேறு படிப்பில் சேரலாம் என்று யாருக்குமே தெரியாத, யார் சிந்தனையிலும் உதிக்காத, அறிவுச்சுடர் பிரகாசிக்கும் படியான கருத்தைச் சொல்கிறார்கள். அதிகபட்ச மதிப்பெண் பெற்றவர் கேட்கும் படிப்பை அவர்களுக்கு வழங்குவதில் அரசுக்கு என்ன பிரச்சினை? அவர்களுக்கு மறுக்கப்படும் வாய்ப்பு யாருக்குக் கொடுக்கப்படுகிறது? நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உண்மையிலேயே திறமைசாலிகளா? அவர்களுக்காக வரையறுக்கும் திறமைக்கான அளவுகோள் என்ன? என்பது பற்றியயெல்லாம் மாற்றுப் படிப்பை முன்வைக்கும் அறிவாளிகள் சிந்திப்பதாகத் தெரியவில்லை. இன்னொரு புறம் அரசின் கொள்கை முடிவுகளும் நகை முரணாக இருக்கின்றன.
அரசுதான் பள்ளிகளை நடத்துகிறது. ஆசிரியர்களை நியமிக்கிறது. பாடத்திட்டத்தை வரையறுக்கிறது. வினாத்தாள் தயாரிக்கிறது. தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடுகிறது. அதில் அதிகபட்ச மதிப்பெண் எடுத்தவர், தாம் விரும்பிய படிப்பைக் கேட்கும் போது அதற்கு அவர் தகுதி இல்லை என்றால் அதற்கு ‘அரசுக்குத் தகுதி இல்லை’ என்பது தானே பொருளாக இருக்க முடியும்? நீட் தேர்வு எழுதினாலே மருத்துவப் படிப்பில் சேர முடியுமென்றால் அத்தேர்வைக் கட்டாயமாக்கும் முன் அது குறித்து கற்றலில் பின் தங்கிய, கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு அரசு முறையான வழிகாட்டலைச் செய்யாதது ஏன்? திடீரென புதிய விதியைக் கொண்டு வந்து அதற்கு தயார் ஆகச்சொல்வது மடமை அன்றி வேறென்ன?
ஆட்சியாளர்கள் மக்களுக்கானவர்கள் என்று மக்கள் இன்னும் நம்பிக்கொண்டு இருப்பதுதான் பேரபத்தம். ஆட்சியாளர்கள் எப்போதும் பெரும்பணக்காரர்களின் காவலர்கள், மக்களுக்கானவர்களாகக் காட்டிக்கொள்வதில் தேர்ந்த நடிகர்கள். ஆட்சியையும் பதவியையும் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சியில் சிறிதளவாவது நீட் தேர்வுக்கு எதிராக எடுத்திருந்தால் அனிதாவை இழந்திருக்க வேண்டியிருக்காது. அதிகபட்ச மதிப்பெண் எடுத்த அனைவரும் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பார்கள். ஆனால் ஆட்சியாளர்களுக்கு மருத்துவம், அரசுத்துறைகள், இட ஒதுக்கீடு, சமூகநீதி முதலியன பறிபோவது பற்றிய கவலை கொஞ்சமும் இல்லை. அதற்கான தேவையும் அவர்களுக்கு இருந்ததில்லை. அதனால் தான் வெமுலாவையும் முத்துக்கிருஷ்ணனையும் அனிதாவையும் பலி கொடுக்க வேண்டியிருக்கிறது.
இதையெல்லாம் மிக இயல்பாகக் கடந்து, தேசத்தில் எல்லா மக்களும் செல்வத்தில் சிறந்தோங்கி இருப்பது போலவும் மக்களின் தேவையை மக்களே பார்த்துக்கொள்வதற்கான திராணி அவர்களுக்கு இருப்பதாகவும் அரசுக்கு வேறு வேலை எதுவும் இல்லை என்பதால் சும்மா இருக்க மனம் ஒப்பாமல் குப்பையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. சிலர் அதை ‘தூய்மை பாரதம’; என்கிறார்கள். அவர்கள் சொல்லும் பாரதத்தின் ‘தூய்மை’ எது? என்பது தான் நம் முன் நிற்கும் முக்கியமான கேள்வி. தூய்மை என்பது மனுவின் கோட்பாட்டுக்குள் வராதவர்களைக் கொன்ற பின் ஏற்படுகின்ற தூய்மையா? ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் தேசத்தில் எல்லோரும் சமம் எனக் கூறி ஒற்றைச் சட்டத்தைப் புகுத்தி ஏழைகளைச் சாகடித்த பின் ஏற்படுகின்ற தூய்மையா? மனுஸ்மிருதிக்கு ‘தகுதித்தேர்வு’ என்று புதிய பெயர் சூட்டி வர்ணக் கோட்பாட்டை வலுப்படுத்திய பின் ஏற்படுகின்ற தூய்மையா? பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்த பின் ஏற்படுகின்ற தூய்மையா? கார்ப்பரேட்களுக்கு வேளாண் நிலங்களைத் தரை வார்த்தபின் ஏற்படுகின்ற தூய்மையா? என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

Wednesday 6 September 2017

சமுதாய வலைத்தளங்களின் உள்ளும் புறமும்




சமுதாய வலைத்தளங்களின் உள்ளும் புறமும்

ஞா.குருசாமி
பத்தாண்டுகளுக்கு முன்னால் அலைபேசி, கணினி, மடிக்கணினி, மின்னஞ்சல்;, வாட்ஸ்ஆப், ட்வீட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்;டாகிராம் என்பன இந்தியாவுக்குள் நுழைந்துகொண்டிருந்த நேரம். வெகுஜனமக்களைச் சென்றடையாத காலம். இதனால் பல நூறு நபர்களின் முகவரிகளும், தொலைபேசி எண்களும் நினைவில் இருந்தன. இன்று மேற்கூறிய எல்லாமும் பரவலாகிவிட்டன. விளைவு இன்று மனிதனின் நினைவில் ஒன்றுமில்லை. பள்ளி மாணவர்களின் மனனம் செய்யும் திறனே முன்னெப்போதையும் விட இப்பொழுது குறைந்திருப்பதைக் காணலாம். மிகப் பெரிய பெருக்கல் வகுத்தல்களை மனதுக்குள்ளேயே நிகழ்த்தி விடை சொன்ன காலம் போய் இன்று சிறு கணக்குகளுக்கும் கால்குலேட்டரை நம்பும் தலைமுறை உருவாகிவிட்டது. ஐயாயிரம் பக்கத்திற்கு மேலுள்ள மருத்துவச் சுவடிகளின் செய்திகளைக் கூட செவிவழியாக கடத்தி மனப்பாடம் செய்த தலைமுறையின் வாரிசுகள் இன்று அனைத்தையும் தட்டச்சு செய்து கணினியில் சேமிக்கிறார்கள். ஒரு மனிதரின் அலைபேசி தொலைந்து போகுமெனில் அவர் இழப்பது அலைபேசி மட்டுமல்ல. வங்கிக் கணக்கு எண், மின் இணைப்பு எண், உறவுகளின், பணியிடத்தின் தொலைபேசி எண், மிக முக்கிய சம்பவங்களின் புகைப்படங்கள் என பலவற்றையும் இழக்கிறார். அதாவது மின்னணு ஊடகப் பெருக்கத்தின் விளைவு என்பது மனிதன் தன் மீது இருக்கும் நம்பிக்கையை இழந்து எந்திரங்களை நம்பும்படியாக மாறியிருக்கிறான் என்பதே ஆகும்;. பொதுவான பார்வையில் இது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் உண்மை வேறொன்றாக இருக்கிறது. இன்று மின்னணு ஊடகங்கள் பன்னாட்டு முதலாளிகளின் லாப வேட்கையின் விளைநிலம் என்பதையும் தாண்டி, சர்வதேச வல்லரசுகளின் உளவு காணும் நடவடிக்கையாகவும், தகவல் வங்கியாகவும் மாறியிருக்கின்றன.
‘உலகம் ஒரு குடையின் கீழ்” என்னும் கூவலால் இணையத்தின் மூலம் மனிதக்கூட்டம் இணைக்கப்படுகிறது. இணையவழி இயக்கம் என்பது அத்தியாவசிய தேவையாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. அதில் இருக்கும் வசதிகள் மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தியிருப்பது உண்மைதான் என்றாலும் அதன்வழி தனிமனிதனின் அந்தரங்கம் உள்பட எல்லாத் தகவல்களும் திரட்டப்படுகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சான்றுக்குச் சில… ‘திருமணம் ஆகவில்லை’ என்னும் தகவலைத் தந்து மின்னஞ்சல் முகவரி தொடங்கப்படுமானால் மாட்ரிமெனி விளம்பரங்கள் வந்து குவிகின்றன. ‘திருமணம் நிச்சயமாகிவிட்டது’ என்னும் தகவலைத் தந்தால் வண்ணமயமான வேலைப்பாடுகளுடன் கூடிய ‘இரவு உடைகளை உங்கள் இணையருக்குப் பரிசாகக் கொடுங்கள்’ என்று விளம்பரங்கள் வருகின்றன. உங்களுக்கு பிடித்த பொழுபோக்கு என்ன? என்னும் கேள்விக்கு ‘பெண்களோடு ஊர் சுற்ற பிடிக்கும்’ என பதில் கொடுத்து மின்னஞ்சல் தொடங்குவோமேயானால் ஜொலிக்கும் படுக்கையறைகளை மையப்படுத்திய கேலிக்கை விடுதிகள், கருத்தடைச் சாதனங்கள், தனிமைக்கு ஏற்ற சுற்றுலா தளங்கள் பற்றிய விளம்பரங்கள் வந்து விழுகின்றன. ஸ்போட்ஸில் விருப்பம் என்றால் அது தொடர்பான தகவல்கள் குப்பை குப்பையாகக் கொட்டுகின்றன. அப்படியென்றால் நம்மை யாரோ கவனிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்! ஆம், கவனிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். மாய வலைக்குள் மூழ்கி இருக்கும் நாம் எல்லாவற்றையும் மிக எளிதாக நினைத்து கடந்து விடுகிறோம். ஆனால் தனிமனிதனைப் பற்றிய தகவல்களைப் பெருநிறுவனங்கள் திரட்டுவதை எப்படி சாதாரணமானதாக நினைக்க முடியும்? நினைக்கக் கூடாது.
மூன்றாம் உலகப் போரும் சேகரிக்கப்பட்ட தகவல்களும்
இணையத்தை சந்தைப்படுத்துவதிலோ தண்ணீரை மையமிட்டோ மூன்றாம் உலகப் போருக்கான சூழல் உருவாகுமெனில் அதில் இணைய நிறுவனங்கள் திரட்டிய தகவல்கள்; முக்கியப்பங்காற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஒருவேளை இணைய நிறுவனங்கள் சேகரித்த தகவல்கள் தீவிரவாத அமைப்புகளின் கைகளுக்கு மாறுமானல் நிலைமை என்ன ஆகும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் மதுபோதையை விட இணையதளப் போதை ஆபத்தானது என்னும் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டிய தேவை உருவாகிவிட்டது. நடப்பு வலைத்தள இணைய நிறுவனங்கள் அனைத்தும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தவை. அவை போட்டி போட்டுக்கொண்டு மக்கள் அடர்த்தி அதிகமுள்ள ஆசியக் கண்டத்தில் கடை விரிக்கின்றன. சீனா சில நிறுவனங்களுக்கு முற்றாகத் தடை விதித்துள்ள நிலையில் அந்நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் கால்கொண்டுவிட்டன. ஐரோப்பிய நாடுகளுக்கு நம்மைப் பற்றிய விபரங்கள் போய்விடக்கூடாது என்பதில் சீனா விழிப்படைந்து விட்டதால் ஐரோப்பிய நாடுகளின் ஏகோபித்த இலக்கு இந்தியாவாக மாறிவிட்டிருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு ஐந்து கோடி மக்களை இணையப் பயன்பாட்டாளராகக் கொண்டுவர வேண்டுமென்று இலக்கு நிர்ணயித்து இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.
2014 ஆம் ஆண்டு மே மாத நிலவரப்படி உலகில் பேஸ்புக் உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா 108.9 மில்லியன் உறுப்பினர்களோடு இரண்டாமிடம் வகிக்கிறது. அதாவது 108.9 மில்லியன் இந்தியர்களின் சுயவிரவக் குறிப்புகள் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்கின் கைகளில் இருக்கிறது என்பது பொருள். இதைப் போல கூகுல், யாகூ முதலியவைகளிடமும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. பேஸ்புக்கில் மட்டும் தினமும் 6 லட்சம் முறை திருட்டுத்தனமாக நுழைவதற்கு முயற்சி செய்கிறார்கள் எனவும் 8.7 சதவிகிதம் பேர் போலி கணக்கு வைத்திருக்கிறார்கள் என்றும் அந்நிறுவனமே தெரிவித்திருக்கிறது. இன்றைய முக்கிய ஊடகமான ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவரின் நடமாட்டமும் வலைத்தள நிறுவனங்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நவீன மின்னுணு ஊடங்கள் வழி; குற்றச் செயல்களில் ஈடுபாடும் நபர் கைது செய்யப்படுவாரெனில்; அவர் பயன்படுத்திய ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களே நீதிமன்றத்தில் முக்கிய ஆவணமாகக் கருதப்படுகின்றன. முறையான கோரிக்கையின் பேரில் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தகவல்களைத் தந்துதவுகின்றன. அதற்கு வசதியாக மக்களின் ஒவ்வொரு தகவல் பரிமாற்ற நடவடிக்கைகளும் அந்தந்த நிறுவனங்களில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அதனால் ரகசியங்கள் அற்றவனாக மனிதன் மாற்றப்படுகிறான். அவ்வாறு மாற்றப்படுதல் ஒருவகையான அழிப்பு முறை என்பதைக் கூட நாம் இன்னும் உணரத் தொடங்கவில்லை என்பதுதான் காலத்தின் பேரவலம். ரகசியங்களை இழக்கும் மனிதன் உள்ளத்தளவில் பலவீனம் அடைகிறான். இந்த பலவீனம் தான் மனிதனை மாற்ற எல்லாவற்றையும் விட கீழ்நோக்கி அழுத்துகிறது.
வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து Child Play Roll  என்னும் பெயரில் பெரிய சூதாட்டச் சந்தை உருவாகியிருப்பதையும் பெண்களின் படங்கள் மார்பிங் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவருக்கே அனுப்பி பயமுறுத்தி பணம் சம்பாதிக்கும் செய்திகளையும் ஊடகங்கள் வழி கேள்விப்படுகிறோம். செல்ஃபி மோகம் வந்த பின் இணையப் பயன்பாட்டில் ஆண்களை விட பெண்கள் பத்து சதவிகிதம் கூடியிருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிபரம். மேலும் செல்ஃபி மோகத்தால் முகப்பூச்சு சாயங்கள், ஒப்பனைப் பொருள்களின் சந்தைப் பரிவர்த்னையின் அளவும் கூடியிருக்கிறது.


கருத்துக்களைக் சிதைக்கும் துர்க்குணம்
மனிதனை ஆட்சி செய்வதில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் அதிகார மையம் மனிதன் உருவாக்கிய கருத்துக்களே. தன்னுடைய கருத்துக்களே தன்னை ஆளவேண்டுமென்று மனிதனும் விரும்புகிறான். கருத்துக்கள் தான் ஆட்சியும் செய்து வருகின்றன. இந்நிலையில் மனிதனை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு கருத்து உருவாக்கத்தில் ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. அதன் விளைவு, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் மத்தியில் ஊடகத்தில் வரும் செய்திகள் உண்மையானவை என்ற கருத்தியல் உருவாக்கப்பட்டது. அச்சு, ஒலி, ஒளி வடிவ ஊடகங்களை மக்கள் நம்பினர். இந்த மனநிலையை நவீன ஊடகங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு காலங்காலமாக பொதுக் கருத்தை உருவாக்கி வந்தன. அதே ஊடகம் இன்று மக்களிடம் நிலைத்த கருத்துகள் உருவாகி அவர்கள் திடம்கொண்டுவிடக் கூடாது என்னும் நோக்கில் பரப்பப்படும் தவறான கருத்துக்களின் தளமாகவும் இருக்கின்றன. கருத்துக்கள் அல்லது செய்திகளின் உண்மை தன்மையை அறியாமலேயே பல செய்திகள் பரப்படுவதினால் தவறான பொதுக்கருத்து உருவாக்கப்படுவதும், உண்மையான கருத்துக்களின் வழி உண்டாக்கப்படும் கருத்துக்கள் வலுவிழப்பது நிகழ்ந்துவருகிறது. அதாவது ஊடகச் செய்திகளின் மீதிருந்த மக்களின் நம்பிக்கைகளை ஊடகங்களே சிதறடிக்கின்றன. பொதுவெளியில் கருத்து நிலைபெறுமானால் அங்கு ஊடகத்திற்கு இடமில்லை. கருத்துக்கள் மாறிக்கொண்டே இருக்குமிடத்தில் தான் ஊடகங்களும் உயிர்ப்புடன் தொழிற்பட முடியும். அதற்காகவே உலக முழுவதும் மனிதனின் திடமான கருத்துக்கள் ஊடகங்களால் பொய் கலந்து அழிக்கப்படுகின்றன. இதன் விளைவு மனிதனை எதன்மீதும் நம்பிக்கை கொள்ளாமல் செய்துவிடுவதே ஆகும். அப்படிச் செய்வதன் மூலம் ஊடகங்கள் தனக்கான சந்தையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.
வலைத்தளங்கள் பொதுத் தொடர்புமொழியாக ஆங்கிலத்தை முன்வைத்து வெற்றியும் பெற்றுவிட்டன. பிராந்திய மொழிகளில் புதிதுபுதிதாக செயலிகள் உருவாக்கப்பட்டாலும் அவை ஆங்கில பயன்பாட்டு செயலியை விட குறைவான வசதிகள் கொண்டனவாக இருப்பதை தற்செயல் நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது. அதற்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது. மிகக் குறைவான ஆங்கில அறிவு இருந்தாலே போதும் வலைத்தளத்தில் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில் வலைத்தளங்கள் நம்மை முழுமையாக கைக்கொண்டு விட்டன. மதுபோதைக்கு அடிமையான ஒருவர் போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட எடுக்கும் முயற்சியை விட பல மடங்கு முயற்சி எடுத்தாலும் வலைத்தளப் பயன்பாட்டிலிருந்து ஒருவர் விடுபட முடியாத நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. காரணம் மனிதனின் மூளை தலைக்கு வெளியை கணினி வடிவில் மாற்றியமைக்கப்பட்டுவிட்டது தான். இன்று மிகவும் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல், முகநூல் முதலியன குறைந்த டேட்டா செலவில் கிடைப்பதாக நினைக்கிறோம். ஆனால் அவற்றிற்கு விளம்பர நிறுவனங்கள் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கின்றன. அவை அனைத்தையும் உற்பத்திப் பொருளின் மீது ஏற்றி விலை நிர்ணயம் செய்யப்பட்டு நுகர்வோர்கள் தலையில் கட்டப்படுகிறது. நாம் மறைமுகமாக உறிஞ்சப்படுகிறறோம்.
அடுத்ததாக விக்கிப்பீடியா. இது பல மொழிகளில் கிடைக்கிறது. எளிமையாக அணுக முடிகிறது. எவரும் தகவலை பதிவேற்றம் செய்யவோ பதிவுகளைத் திருத்தம் செய்யவோ முடிகிறது. குறைகள் இருப்பினும் தவிர்க்க முடியாத தகவல் களஞ்சியமாக உருக்கொண்டுவிட்டது.  அவற்றில் நிரம்பியிருக்கும் அனைத்தும் மக்களின் முயற்சியில் உருவான தகவல் குவியல்கள். வரும் காலங்களில் போதுமான தகவல் சேகரிக்கப்பட்டு, தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்த பின் பணம் செலுத்துபவர்களே விக்கிபீடியாவை பயன்கொள்ள முடியும் என்ற நிலை உருவாகுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. அவ்வாறான நிலை உருவாகுமெனில் ஒவ்வொரு தனிமனிதனின் உழைப்பும் விக்கிபீடியா நிறுவனத்தின் வழி வணிகமாக்கப்படும். இது நவீன வடிவச் சுரண்டலாகப் பரிணமிக்கும். இதுவரை இணையத்தின் வழியான உழைப்புச் சுரண்டல் அடையாளம் காணப்படவில்லை எனினும் அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுக்கொண்டு வருவதை மறுப்பதற்கில்லை.
சமுதாய அமைப்பிற்கு விழுந்த பலத்த அடி
முன்னேறிய நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் கணிசமான அளவு அமெரிக்க - ஆப்பிரிக்கர்கள் செனட் உறுப்பினர்களாக இருந்தபோதிலும், அரசியல் அதிகாரத்தில் நுழைந்த பின்னும் 1990கள் வரை ஊடகத்தில் அவர்களால் கோலோச்ச முடியவில்லை. வெள்ளையர்களின் பிடியிலிருந்த ஊடகங்களில் கறுப்பர்களின் இடம் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. இதே நிலை இந்தியாவிலும் இருந்தது. வருணாசிராம கோட்டுக்கு வெளியே தள்ளப்பட்டிருந்த மக்கள் உரிமைக்கே வாய்ப்பின்றி இருந்த போது பார்ப்பன ஊடகங்களுக்குள் நுழைய முடியவில்லை. மணிக்கொடி, எழுத்து, கல்கி முதலிய பத்திரிகைகளில் இது அப்பட்டமாக பிரதிபலித்தது. வடக்கே தாகூர், திலகர் நடத்திய பத்திரிகைகளிலும் இதே நிலைதான். இந்நிலைக்கு இன்றைய நவீன ஊடகங்கள் பலத்த அடி கொடுத்திருப்பதையும் மறுப்பதற்கில்லை.
உலகில் பண்பாடு என்ற கருத்துருவாக்கம் பிராந்திய எல்லைகளை முன்வைத்து இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தேவையான மாற்றங்களுடன் வலுப்பெற்றது. கென்யாவின் மேற்கு மலைத்தொடரை வாழ்விடமாகக் கொண்ட கிகியுயு, ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டலக்காடுகளில் வாழும் பம்பூத்தி, பத்துவா, பாபிங்கா, ஐரோப்பியாவின் தெற்குப் பகுதியில் பரவியுள்ள அம்ஹாரா, கல்லா முதலிய இறுக்கமான பண்பாட்டைக் கொண்ட பழங்குடிகள் கூட தங்களது பண்பாட்டுக்கூறுகளை மறுகட்டுமானம் செய்ய வேண்டிய தேவை உருவானது. இந்தியாவிலும் மேற்குலகின் பண்பாட்டு பிரதிபலிப்புகள் ஐரோப்பியர் வழியாக நுழைந்தபோது திலகர் போன்ற பிற்போக்கர்களால் பண்பாடு என்னும் பிரஞ்ஞை புதிய வடிவம் பெற்றது. சமூக அமைப்பில் மேற்குலகில் இருந்து பெரிதும் வேறுபடும் இந்தியாவைப் பொறுத்த மட்டில் பண்பாடு என்பது சாதியமைப்பை முன்னிருத்தியை உருவாக்கப்பட்டுள்ளதால் இந்தியச் சூழலில் பண்பாட்டுச் சிதைவு என்றாலே சாதியச் சிதைவு என்றுதான்; பொருள்கொள்ளப்பட்டு வந்திருகிறது. இந்நிலையில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து வலைத்தளத்தின் பரப்பு மிக விரிவாக இருப்பதாலும் செய்திப் பரிமாற்றத்தின் விரைவாலும் பிராந்திய பண்பாடுகள் சிதைவுக்குள்ளாகி வருகின்றன. இந்தியப் பிராந்தியங்களில் யார் என்ன உடுக்க வேண்டும், உண்ண வேண்டும், என்ன மாதிரியான பெயர்கள் வைக்க வேண்டும் என்றெல்லாம் இருந்த பண்பாட்டு கட்டுப்பாடுகள் இன்று சிதிலமாக்கப்பட்டுவிட்டன. சர்வதேச உணவு வகைகளில் இருந்து சாதாரண பென்சில் வரை சகலமும் வலைத்தளங்களின் வழி சந்தைப்படுத்தப்படுகின்றன. அதன்வழி பேதமின்றி மனிதர்கள் வாழ நவீன ஊடகங்கள் ஓரளவு வழி சமைத்துக்கொடுத்திருக்கின்றன. இது இந்தியா போன்ற நாடுகளில் மாற்றுச் சிந்தனையாளர்களால் முன்வக்கப்பட்ட விஷயங்களில் குறிப்பாக சாதிய ஒடுக்குமுறைகள் உள்ளிட்டவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆகப்பெரும் பங்களிப்பினை நல்கி இருப்பதும் வரவேற்கத்தக்கதாகும். அதேபோன்று பேச்சுரிமையும், கருத்துரிமையும் மறுக்கப்படும் சமூக அமைப்பில் வலைத்தளங்களின் தங்குதடையற்ற வெளியில் அனைவருமே கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கான சூழல் உருவாகி இருப்பதனால் ஒவ்வொருவரும் தமக்கென ஊடகக்குழுவை உருவாக்கி செயல்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பிராந்திய வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் சர்வதேச நவீன மின்னணு ஊடகத்தின் பொதுவெளியில் இல்லாமல் ஆகியிருப்பதும் பெருமைப்படத் தக்க விஷயமாகும்.

அரசுப் பள்ளி மாணவர்களின் புதிய எதிர்கொள்ளல்…



அரசுப் பள்ளி மாணவர்களின் புதிய எதிர்கொள்ளல்…
ஞா.குருசாமி

          மக்களின் பொறியியல் குறித்த எதிர்மறை எண்ணம் கடந்த ஆண்டை விட இப்பொழுது அதிகரித்திருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிக்குச் செலவிடும் தொகையில் சிறுபகுதியைத் தனியார் பள்ளியில் செலவளித்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குத் தம் பிள்ளைகளைத் தயார் படுத்துவதே நிரந்தர வருவாயுள்ள, நடுத்தர மக்களின் பெருங்கனவாக இருக்கிறது. அது சாத்தியப் படாத பொழுது அவர்களின் அடுத்த இலக்கு பொறியியல். போதிய வேலை வாய்ப்பின்மை, தற்போதைய சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் பொறியியல் இலக்கை மாற்றி இன்று கலை அறிவியல் கல்லூரிகளை நாடத் தொடங்கி விட்டனர். அறிவியலில் இயற்பியல், கணிதப் பட்டப்படிப்புகளுக்கும் கலையியலில் ஆங்கில இலக்கியப் படிப்புக்கும், வணிகவியலுக்கும் மிகுந்த போட்டி ஏற்பட்டிருக்கிறது.
       அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கணிசமான பேரளவில் வெற்றி பெற்று பணிவாய்ப்பு பெற்றுவிடுகின்றனர். கல்வியியல் முடித்த பலர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி இருபத்தைந்து வயதுக்குள் அரசுப் பள்ளியில் ஆசிரியராகி விடுகின்றனர். தனியார் பள்ளிகளிலும் பணி வாய்ப்பு நிரம்ப இருக்கின்றன. இச்சூழலோடு பொறியியலை ஒப்பிடும் மக்களின் மனப்போக்கு கலை அறிவியல் கல்லூரிகளில் அவர்களைத் திருப்பி விட்டிருக்கிறது. அனைத்துக் கலை அறிவியல் கல்லூரிகளிலும் தற்போது விண்ணப்பம் வாங்கவும், சமர்ப்பிக்கவும் நீண்ட வரிசையைக் காண முடிகிறது. நான்காயிரம் இடங்களைக் கொண்டுள்ள பிரபலமான கலை அறிவியல் கல்லூரிகள் சிலவற்றில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் இருபத்தைந்தாயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
    பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் விழுக்காட்டு அடிப்படையில் தனியார் பள்ளி மாணவர்களில் பெரும்பாலும் ஆயிரத்திற்குக் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் குறைவு. அதே போல அரசுப் பள்ளி மாணவர்களில் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களும் மிகமிகக் குறைவு. இந்த வேறுபாடு பாடவாரியாக இருப்பதும் மறுப்பதற்கில்லை. மாநில முழுவதும் பாடவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த 54 மாணவர்களில் அரசுப் பள்ளியில் பயின்றவர்கள் மூவர் மட்டுமே. கன்டோண்மெண்ட் போர்டு பள்ளிகள் 99.20 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் அரசுப் பள்ளிகளில் குறிப்பாக பழங்குடியினர் பள்ளிகள், நகராட்சி, சமூக நலப் பள்ளிகள், வனத்துறை, ஆதி திராடவிடர் நலத்துறைப் பள்ளிகள் 86 விழுக்காட்டிற்கும் குறைவான தேர்ச்சி விகிதங்களையை பெற்றிருக்கின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையில் மதிப்பெண் பெறுவதிலும் தேர்ச்சி விகிதத்திலும் உள்ள இடைவெளி, தொடர்ந்து இருந்துவரும் விஷயம் தான் என்றாலும் அது தற்பொழுது புதியதொரு கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.
    தனியார் பள்ளியில் படித்து மருத்துவம் கிடைக்காத நிலையில் பொறியியல் விருப்பமில்லாமல் இருக்கும் மாணவர்களின் வரவு கலை அறிவியல் கல்லூரிகளில் அதிகரித்துள்ளதால், அதை மட்டுமே நம்பியிருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு மிகவும் பின்னுக்குத் தள்ளப்படுகின்ற சூழல் உருவாகி வருகிறது. கலை அறிவியல் கல்லூரிகள் நிர்ணயிக்கும் கட்ஆஃப் மதிப்பெண் விகிதம் தனியார் பள்ளி மாணவர்களிடமே இருப்பதால் அவர்களே அதிக வாய்ப்பு பெறுகிறார்கள். அறுநூறுக்கும் எண்ணூறுக்கும் இடைப்பட்ட மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களால் உயர்ந்துள்ள கட்ஆஃப் மதிப்பெண்ணைக் கல்லூரியின் அறிவிப்புப் பலகையில் பார்த்து கூசுகின்றனர். ஐநூறுக்கும் அறுநூறுக்கும் இடைப்பட்ட மதிப்பெண் பெற்ற பின்தங்கிய கிராமப்புற அரசுப்பள்ளி ஏழை மாணவர்கள் உயர்கல்வியை நினைத்துக்கூட பார்க்கமுடியாத நிலை உருவாகி வருகிறது. இதனால் சராசரி மற்றும் சராசரிக்கும் குறைவான மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் நிலை கவனப்படுத்த வேண்டியதாக இருக்கிறது.
           அரசுப் பள்ளி மாணவர்களும் உயர்கல்வி பெற ஏதுவாக குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் அவர்களுக்கென்று இடஒதுக்கீடு செய்ய வேண்டியது அரசின் கடமையாக இருக்கிறது. அது இல்லாத பொழுது தனியார் பள்ளி மாணவர்களின் கலை அறிவியல் கல்லூரிக்கான வரவு அரசுப் பள்ளி மாணவர்களைத் துரத்தியடிக்கும் என்பதே நம் கண்முன் நிற்கும் உண்மை.
      பொறியியலை இலக்காகக் கொண்டவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளை நாடுவதாலும், ஓரிடத்திற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களிடையை போட்டி உருவாகியிருப்பதாலும் பெரும்பாலான சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் இவ்வாண்டு கட்டணங்களை உயர்த்தியுள்ளன. இந்தக் கட்டண உயர்வும் தனியார் பள்ளிகளில் இலட்சங்களைக் கொட்டி படித்தவர்களை விட அரசுப் பள்ளிகளில் இலவசமாகப் படித்துத் தேறிய மாணவர்களைப் பாதிக்கும் காரணியாக மாறியுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு தீர்வு காணாவிடில் அரசுப் பள்ளிகள் மீது இருந்து வரும் குறைந்த பட்ச நம்பிக்கையையும் கொன்றொழிக்கத் துணை போவதாகிவிடும்.