Friday 6 October 2023

அமுதா ஆர்த்தி: சமகால பெண் எழுத்தின் புது வசீகரம்

2019 – இல் அழகிய பெரியவனின் அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார்என்னும் சிறுகதைத் தொகுப்புக்கான மதிப்புரையை பேசும் புதிய சக்தியில் எழுதியிருந்தேன். அந்த இதழில் தான் அமுதா ஆர்த்தியைத் தெரியும்.

அமுதா ஆர்த்தி

அதில் சைக்கிள் சவுட்டுஎன்ற கதையை எழுதியிருந்தார். நாடோடி இளைஞன், அவன் மீது காதல் கொள்ளும் உள்ளூர் பெண். அவனை ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லும் திருநங்கை என்று மூவருக்குமான உணர்வுச் சிக்கலை நுட்பமாக விவரித்த கதை அது.  மார்ச் 2020 இல் அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும்கதையை காலச்சுவடில் வாசித்தேன். 2022 – இல் அம்ருதாவில் வெற்றுடல் குளம்வாசித்தேன். 2023 ஜனவரியில் காலச்சுவடில்ரயிலைத் துரத்தும் இரவுவாசித்தேன். இப்படித்தான் அமுதா ஆர்த்தி கதைகளோடு எனது பயணம் தொடங்கியது. அவரது கதைகளின் களம் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை தான் என்றாலும் அவரது ஒவ்வொரு கதைக்கும் அவர் காட்டுகிற வேறுபாடு தான் அவரது கதையின் தனித்துவம்பெண், தனிமை, வெறுமை, முடிந்தவரை தனிமைக்குள்ளும் கொண்டாட்டத்தைத் தேடுதல், தேடுதல் கைகூடாத போது விரக்தி என்பதாக பல கதைகள் அமைந்திருக்கின்றன. தன்னிலை பேசும் கதைகளாக இருந்தாலும் மூன்றாம் நபரின் புறநிலையை தன்னிலையோடு இணைத்து இரண்டையும் இயக்க விதியாக்கும் சித்திரிப்பில் அமுதா ஆர்த்தி தேர்ந்து கொண்டே வருகிறார்.


ஜனவரி 2023 – இல் எதிர் வெளியீடாக வந்த பருந்து கதைத் தொகுதியில் இருக்கும் பதினான்கு கதைகளும் ஒரே தன்னிலையை வேறுவேறு புறநிலையோடு எழுதிப் பார்த்த கதைகள் தான். குறிப்பாக ஆடையும் ஒரு அடையாளமாக இருக்கும் சமூகத்தில் ஆடை துறந்து அடையாளம் இழக்கும் மனிதனின் நிச்சயமற்ற இருந்தலைப் பேசியஅடையாளம் அற்றவனின் ஆடைஇந்தத் தொகுப்பில் குறிப்பிடத்தக்க கதை. ‘இரவை வெளிச்சமிடும் வானம்கதையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் தனிமையைசோப்பின் கவரைப் போலவே கவனிக்கப்படாமல் போகும் தனிமைஎன்கிறார். புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் வலியை நுணுக்கமாக எழுதிவிட முடியும் என்பதற்கு இக்கதை சிறந்த உதாரணம். ‘நெகிழிக் கனவுகதையில் மலம் கழிப்பதிலும் தூங்குவதிலும் சிக்கலைச் சந்திப்பவனின் உலகை அவனது விமர்சனப்பூர்வமாகவே வாசகனுக்குக் கடத்துகிறார் அமுதா ஆர்த்திஆகஸ்ட் 2023 இல்கடலுக்கு பறவையின் குரல்கவிதைத் தொகுதி வேரல் வெளியீடாக வந்துள்ளது.

கதையைப் போலவே இதிலும் தனிமை, ஏகாந்தம் ஆகியவற்றை எழுதிப் பார்த்திருக்கிறார். ‘செல்லும் வழியெல்லாம் / முட்களை பரப்பிச் சென்றான் / அவளின் காயங்களைக் காயப்படுத்த’, ‘பிடிக்க முயல்கையில் / காற்றோடு காற்றாய் / கரைந்து போகிறாய்’, ‘எண்ணங்களால் நிரம்பியது / எனது நாள்காட்டிஎன்று தன்னை வைத்து தனது தனிமையை அதன் சகல குணாதிசயங்களும் நீர்த்துப்போய்விடாத படி எழுதியிருக்கிறார். ‘துளிர்விடவும் / உதிரவும் காரணம் / கேட்காத காற்று / அதன் இஷ்டத்திற்கு / ஆட்டிவிட்டுச் செல்கிறது / கிளையைஎன்று தன்னை ஒரு தனி மரமாகவும் சூழலால் தான் கேட்பாரற்று இம்சிக்கப்படுவதையும் காதலாகவும் தாபமாகவும் தொனிக்கும்படி எழுதியிருப்பது அமுதா ஆர்த்தியின் எழுத்துகள் மீது வசீகரத்தை உண்டாக்கிவிடுகிறது. இதை அவரது அடையாளமாக எடுத்துச்செல்வாரேயானால் சமகால பெண் எழுத்தில் தவிர்க்க முடியாதவராக இருப்பார். நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துக்கள்.

.......


Sunday 1 October 2023

லி.ராம்ராஜின் கு.அழகிரிசாமி குறித்த நாடகம் : சில புரிதல்கள்

நண்பர் ராம்ராஜ் சமகால தமிழ் நாடகத்தில் முக்கியமானவரத் தெரிகிறார். Campus Theatre என்ற வகைமையை நேர்த்தியாகவும் தொடர்ச்சியாகவும் செய்து கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு 2018 வாக்கில் திண்டுக்கல்லில் அர்ஷியாவின் படைப்புகள் குறித்த ஆய்வரங்கில் ஒரு நாடகத்தை நிகழ்த்தினார். அந்நிகழ்வில் எனது உரையை முடித்துவிட்டு அந்த நாடகத்தைப் பார்த்தேன். ஒரு விசயத்தைப் பேசுவதற்கும் நிகழ்த்துவதற்குமான பாரதூர வேறுபாட்டை அன்று தான் கண்டு உணர்ந்தேன். அது முதலே ராம்ராஜின் அரங்கச் செயல்பாட்டின் மீது எனது பார்வையை வைத்துக் கொண்டே வந்திருக்கிறேன்.

ஐரோப்பிய நாடுகளின் அரசியல், பண்பாட்டு மாற்றங்களில் Campus Theatre முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. அதற்குப் பல முகங்கள் இருந்தாலும் எளியோர்களின் முகங்களைச் சுமந்து வரும்போதெல்லாம் பாசிஸ்ட்டுகளின் தூக்கத்தைக் கெடுக்காமல் அவை இருந்ததில்லை. அதனால் தான் கல்விப் புலத்துக்குள் அதிலும் குறிப்பாக நிறுவனப்படுத்தப்பட்ட அதிகாரம் இருக்குமிடத்தில் நாடகம் என்பது எப்போதும் அச்சத்துடனே அணுகப்படுகிறது.

சமீபத்தில் அருள் ஆனந்தர் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த கு.அழகிரிசாமி குறித்த கருத்தரங்கில் அவரது படைப்புகளை மையப்படுத்தி நாடகம் ஒன்றை நிகழ்த்தினார். கதை, கட்டுரை, கடிதம் என்று கலந்துகட்டி அது ஒருவகையிலான Colace Type Ply என்று சொல்லும் வகையில் இருந்தது. அழகிரிசாமி பசி, வறுமை, துரோகம், ஏமாற்றம், இழப்பு, வலி என்று எழுதிய கதைகளை நேர்கோடற்ற தன்மையில் இணைத்து நிகழ்த்தினார் ராம்ராஜ்.



ஒருவரின் ஒரு பிரதியை நடிப்புக்கு உகந்த வகையில் மாற்றியதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. ஆனால் ஒரு படைப்பாளியின் பல பிரதிகளைக் களைத்துப் போட்டு ஒரு நாடகமாக்குதல் என்பது அந்தப் படைப்பாளியை அவரது கருத்தியல் அடிப்படையில் உட்கிரகித்துக் கொள்ள உதவக் கூடும் என்பதை ராம்ராஜ் தனது அசாத்திய நடிப்பு, இயக்கத்தின் வழி பார்வையாளர்களுக்குக் கடத்தினார். ராம்ராஜ் வெற்றி பெற்ற இடம் இது தான் என்பேன்.

ராம்ராஜோடு ரிதன்யா சாருமதி, ஜாக்குலின் பாய் ரம்யா என்னும் இரு மாணவிகள் நடித்தனர். இருவருமே தங்களது உடல்மொழியை வகிபாகமாக்கிக் கொள்ளும் வகையில் உரையாடல் அமைக்கப்பட்டு இருந்தது. அது நாடகத்தை அழகாக்கியது. Dominate Acting இல்லாமல் சம அளவிலான நடிப்பைச் சக நடிகர்களுக்குப் பகிர்ந்து கொடுத்ததன் வழி தனது ‘இயக்குநர்’ பொறுப்பை உன்னதப்படுத்தி இருந்தார். எல்லோருக்கும் இந்த மனம் வாய்க்காது. பெண்கள் இருவரும் அனுபவ முதிர்ச்சியோடு நடித்தார்கள். அவர்களுக்கு இது முதல் நாடகமாக இருக்கும் பட்சத்தில் அளவுக்கு அதிகமான திறமையை வெளிப்படுத்தினார்கள் என்றே சொல்வேன். நிகழ்வை முழுமையாகப் பார்த்த அழகிரிசாமியின் மகன் சாரங்கன் தனது தந்தையை, தந்தையின் படைப்பை இந்தக் கோணத்தில் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். உணர்ச்சிப் பெருக்கில் உட்கார்ந்து இருந்தார்.

இது ராம்ராஜூக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும். புதியதாய் முயன்று பார்க்கும் எல்லா கலைஞனுக்கும் நேரக்கூடிய அனைத்தும் ராம்ராஜூக்கும் நேரும். அவர் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. வழக்கம் போல தமிழ்ச் சூழலுக்குப் புதியதான நாடகங்களைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும். சமூகத்தின் பைத்தியகாரத் தன்மையை ஒரு கலைஞன் மட்டுமே நேர் செய்ய முடியும். ராம்ராஜ் அதைச் செய்வார் என்று நம்புகிறேன். அவருக்கும் அவரது குழுவினருக்கும் அன்பும் பாராட்டும்.

...........