Thursday 6 October 2022

பெண் – பதிவிரதை X தடிக்கழுதை

 

பெண் – பதிவிரதை X தடிக்கழுதை

ஞா.குருசாமி

‘தடிக்கழுதை பாட்டு என்று ஒரு நூல். இதில் ஆண்பிள்ளை வீண்பிள்ளை’, விலைமாதர் கும்மி என்ற நூலும் உள்ளடங்கி இருக்கிறது. 1914 ஆம் வருடம் மதறாஸ் என்.சி,கோள்டன் (கோல்டன்?) அச்சியந்திர சாலையில் திருப்போரூர் டி கோபால் நாயகர் இந்த மூன்று நூல்களையும் ஒருங்கே பதிப்பித்திருக்கிறார்.  அதற்கு முன்னால் 1905 வருடம் மயிலம் சுப்பிரமணியசுவாமிகளால் பார்வையிடப்பட்டு பார்த்தசாரதி நாயுடுவின் அச்சகத்தில் அச்சிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சிறுமணவூர் முனியசாமி முதலியார் இந்த நூல்களை எழுதியதாகத் தெரிகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 19 ஆம் நூற்றாண்டில் மத்திய பகுதி வரை தனியொரு மனிதனாக ஏராளமான நூல்களை எழுதியவராகவும் பதிப்பித்தவராகவும் தெரிகிறார். சிறுமணவூர் முனியசாமி முதலியார் (இனி முனியசாமி எனச் சுட்டலாம்). இவர் குறித்து வீ.அரசு கட்டுரை ஒன்றைக் கூட எழுதியிருக்கிறார். அச்சு பண்பாட்டில் முனியசாமியின் பங்களிப்பை பதிவு செய்வதாக அந்த கட்டுரை அமைந்திருக்கிறது. நிற்க.

18 ,19 ஆம் நூற்றாண்டுகளில் உருவான தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமானவரான முனியசாமியின் தடிக்கழுதைப்பாட்டு நூல் பற்றி சில குறிப்புகளை பகிர்வதென்பது அவசியமாகப்பட்டது. அந்நூலில் 24 பாடல்களில் பதிவிரதை x டிக்கழுதை என்று பெண்களை இரண்டு வகையாகப் பகுத்து பதிவிரதைக்கும் தடிக்கழுதைக்கும் இலக்கணம் (?) தருகிறார். பதிவிரதைக்கு அவர் தரும் இலக்கணம் கீழ்வருமாறு

1.    அன்னை தந்தையை தினமும் அன்பால் உபசரிப்பவள்

2.    மோசமான கணவனாக இருந்தாலும் அவனை வணக்கம் செய்பவள்

3.    மூடனாக கணவன் இருந்த போதும் அவனை தன்மையுடன் நடத்துபவள்

4.    மாமியார் அடித்தாலும் மௌனமாய் இருப்பவள்

5.    கணவன் சம்பாத்தியம் அறிந்து செலவு செய்பவள்

6.    தலை குனிந்து நடப்பவள்

7.    அந்நிய ஆண்கள் மீது ஆசை கொள்ளாதவள்

8.    பூ வைத்துக் கொண்டு தெருவில் போகக் கூச்சப்படுபவள்

9.    கணவன், மாமியார், மாமனார் அடித்தாலும் அமைதியாக இருப்பவள்

10. காலையில் எழுந்து கணவன் பாதம் தொழுபவள்

11. பசித்து வருவோருக்கு அன்னமிடுபவள்

12. அண்டை, எதிர் வீட்டுக்குப் போகாதவள்

13. தங்கமின்றி கயிறாக மட்டுமே தாலி கட்டி இருந்தாலும் கணவனை வெறுக்காதவள்

14. வாசப்படி கடந்தால் குற்றமாகும் எனக் கருதுபவள்

15. குடும்பம் சிதையாமல் இருக்க வேண்டும் என நினைப்பவள்

16. கணவன் அழகில்லாமல் இருந்தாலும் அவனை நேசிக்கிறவள்

17. கணவனுக்கு முன் எழுபவள்

18. அறம் செய்பவள்

19. உண்டி சுருக்குபவள்

20. ஊரை பகைக்காதவள்

21. சக்காளத்தி பிள்ளையையும் தன் பிள்ளைபோல் சமமாகப் பார்ப்பவள்

22. பிச்சை கேட்பவனுக்கு பிச்சை தருபவள்

23. அணிகலன் அணிந்து தெருவில் நடக்காதவள்

24. முனியசாமி என்னும் எனது வார்த்தைக்கு ஏற்ப நடப்பவள் பதிவிரதை 

 

‘தடிக்கழுதை’ யாவள்? என்பதற்கு சில இலக்கணம் தருகிறார். அவை கீழ்வருமாறு

1.    துரோகி என்னும் பெயரை ஏற்றுக் கொள்பவள்

2.    கணவனோடு சண்டை செய்பவள்

3.    மன்னனாக இருந்தால் கூட மதிக்காமல் பேசுபவள்

4.    யாரையும் அறியாமல் இருப்பவள்

5.    கணவனை கடனாளியாக்குபவள்

6.    தெரு சண்டை செய்பவள்

7.    எல்லா சாதி ஆண்கள் மீதும் இச்சை கொண்டு அலைபவள்

8.    பூ முடித்து வம்பு செய்பவள்

9.    கணவன் மாமி மாமியாரை சண்டைக்கிழுத்து மானம் கெடுப்பவள்

10. வேலை செய்யாமல் பாயில் சோம்பலாய்க் கிடப்பவள்

11. பசித்து வருவோருக்கு அன்னம் இடாதவள்

12. கண்ட கண்ட இடம் திரிந்து சண்டை இழுத்து வருபவள்

13. கணவன் இயலாமையை சுட்டுபவள்

14. எல்லா வீடுகளிலும் பேசி சண்டை செய்பவள்

15. குடும்பத்தைச் சிதைப்பவள்

16. அழகாய் வரும் எந்த ஆணோடும் சேர்கிறவள்

17. கணவனுக்கு பின் எழுபவள்

18. அறம் செய்கிறவரை தடுப்பவள்

19. கண்ட பாட்டுக்களையும் ஆட்டங்களையும் பார்த்து கைவீசித் திரிகிறவள்

20. அனைவரிடமும் வம்பு வளர்ப்பவள்

21. ஒழுக்கம் உடைய பிள்ளையையும் மிரட்டுகிறவள்

22. பிச்சை கேட்டு வருகிறவரை ஏசி விரட்டுகிறவள்

23. அலங்கரித்துக் கொண்டு தெருவில் நடக்கிறவள்

24. இதெல்லாம் ஒரு  புத்தகமென்று எழுதி இருக்கிறாரே முனியசாமி  என்று பரிகசிப்பவள் தடிக்கழுதை

என்று தடிக்கழுதை பற்றிய இலக்கணத்தை தருகிறார்.

பெண் தனக்கெதிரான வன்முறைகளை எதிர்க்காதவளாக இருப்பவளும், வீட்டைத் தாண்டி வெளியே வராமல் இருப்பவளும் பதிவிரதை. கணவன், மாமி, மாமனாராக இருந்தபோதும் அவர்களுக்கு எதிராக இருப்பவள், தன்னை அலங்கரித்துக் கொண்டு வீதியில் வலம் வருகிறவள் தடிக்கழுதை என்கிறார் முனியசாமி. இது முனியசாமியின் படைப்புகளுள் ஒன்று பற்றிய சிறிய அறிமுகம் மட்டுமே. மற்றொரு சூழலில் விரிவாக ஆய்வு செய்து பேசலாம். தடிக்கழுதைப் பாட்டு நூலிம் முதல் பக்கம் கீழே…


தடிக்கழுதைப் பாட்டு நூலின் முதல் பக்கம் 

பதிவிரதை - தடிக்கழுதை படங்கள்




Tuesday 4 October 2022

ஆ.இரா.வேங்கடாசலபதி, எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா ஆகியோர்களின் இரண்டு நூல்களும் எனது பார்வையும்

 

.இரா.வேங்கடாசலபதி, எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா ஆகியோர்களின் இரண்டு நூல்களும் எனது பார்வையும்

    .இரா.வேங்கடாசலபதி பதிப்பித்த ‘வ.உ.சி.யின் சிவஞானபோத உரை’யை ஒரு தேவையின் பொருட்டு வாசிக்க நேர்ந்தது. அந்த நூலின் வழியாக அறிமுகமான அவரே எழுதிய திராவிட இயக்கமும் வேளாளரும் என்று ஒரு நூலை வாசித்தேன். அதில் வரும் விவரணைகளை விட அடிகுறிப்புகள் எனக்கு முக்கியமாகப்பட்டன.தனூடாகத் தேடிக் கண்டைந்த நூல்தான் தினமணி பார்ப்பனியத்தின் முகமூடி ஒரு விவாதம்  இந்நூலின் பழைய பெயர் ‘திராவிட தினமணியின் பார்ப்பனியம்’. இதை எஸ்.வி. ராஜதுரை, வி.கீதா ஆகியோர் இணைந்து தொகுத்திருக்கிறார் . இது 1990களில் தினமணியில் இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ஆர்.என்.சத்யா, தமிழவன் x எஸ்.வி.ராஜதுரை,.கீதா ஆகியோர்களுக்கு இடையே நடந்த விவாதமாக இருக்கிறது.


பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் தொடக்கப் புள்ளியாக வேளாளர்களான (சைவர்கள்) பேராசிரியர் பெ.சுந்தரனார், பி.கனகசபை, ஜே.எம்.நல்லசாமி முதலியோர் இருந்த போதும் 1927 - 29 கால கட்டத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் நீட்சியான திராவிட இயக்கம் பெரியார் கைக்கு வந்ததும் சைவர்கள் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டதாக  கூறும் ஆ.இரா.வே, 1940களில் பிற்பட்ட சாதியினரை சமூக அடித்தளமாகக் கொள்ள முற்பட்டு விட்ட திராவிட இயக்கத்திற்கும் சைவருக்கும் எந்த உறவும் இல்லாமல் போய்விட்டது’ என்கிறார்.  இந்த நூலின் நோக்கமே திராவிட இயக்கத்திற்கும் சைவருக்கும் (வேளாளருக்கும்) 1940க்கு பிறகு தொடர்பு இல்லை என்பதை நிறுவுவது தான்.

அதிமுகவில் எம்ஜிஆரின் மரணத்திற்குப் பிறகு எழுந்த அரசியல் குழப்பங்களை நீந்தி கடந்து பெருமூச்சு விட்டபடி முதன் முதலில் முதல்வராக பொறுப்பு வகித்த ஜெயலலிதாவின் ஆட்சிக்காலமான 1994 இல் இந்த நூல் வெளிவந்திருக்கிறது. அந்தக் காலத்தில் பரவலாக திமுகவின் மீது ‘வெள்ளாளர் கட்சி’ என்றொரு முத்திரை விழுந்திருந்தது. அந்த முத்திரையை மறுத்து திராவிட இயக்கத்தின் குறிப்பாக திமுகவின் மீது புத்தொளி பாய்ச்சுவதற்கு முயன்ற நூலாக இதைப் பார்க்க முடிகிறது. நூலாசிரியர் ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தில் வேளாளர் கை ஓங்கி இருந்தது என்பதை ஒத்துக் கொள்ளாமல் இல்லை.



‘தினமணி பார்ப்பனியத்தின் முகமூடிகள் ஒரு விவாதம்’  எனும் நூலில் இடம் பெற்ற ‘இரு சக்திகளும் (பார்ப்பனர், வேளாளர்) தங்களுக்குள் பங்காளி சண்டை போட ஆரம்பித்தது தான் ஆரிய திராவிட போட்டின்ற தமிழவனின் கூற்றை ஆ.இரா.வே. மேற்கோள் காட்டுவதன் வழி அதே காலத்தில் திராவிட இயக்கத்தின் மீது வெள்ளாளர் முத்திரை விழுந்துவிட்டதை உறுதிப்படுத்தலாம்.  இதை மறுப்பது தான் திராவிட இயக்கமும் வேளாளரும் நூலின் உள்ளடக்கம். ஆ.இரா.வே.யின் கூற்றுக்கு வலுச்சேர்க்கும் விதமாகவே நீதி கட்சியும் கூட ஒரு சில வேளாளர்கள் தமது சொந்த நலனுக்காக உருவாக்கிக் கொண்ட கட்சி அல்ல என்னும் எஸ்.வி.ராஜதுரை& வ.கீதா ஆகியோரின் கூற்று அமைந்திருக்கிறது.(‘தினமணி பார்ப்பனியத்தின் முகமூடி ஒரு விவாதம் (ப.95)

அதாவது, பார்ப்பனர்கள் அல்லாதார் இயக்கத்தில் இருந்து முகிழ்த்த திராவிட இயக்கம் வேளாளர்கள் இயக்கமா? இல்லையா? என்கிற விவாதம் 1990களில் ஏதோ ஒரு தேவையின் பொருட்டு உருவாகியிருக்கிறது. எனது நிலைப்பாடு என்னவென்றால் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் 19,20 ஆம் நூற்றாண்டில் மட்டுமல்ல 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே  இந்தியா முழுமையும் இருந்து வந்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் பிராமணர் அல்லாதார் இயக்கத்தில் வேளாளர்கள் உட்பட்டு பல சூத்திர சாதியினரும் இருந்திருக்கிறார்கள் என்ற போதிலும் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியினுடையகாராஷ்டிர அரசியல், அதை உருவாகிய அறிவுஜீவிக் குழுக்கள், பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழக மராட்டிய அரசியல் என்பதன் வழியாக பயணித்து 20ஆம் நூற்றாண்டு திராவிட இயக்கம் என வந்து நிற்கிறபோது திராவிட இயக்கம் வேளாளர்களுக்கானது தான் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

இரண்டாம் நிலை ஆதாரங்களாக நின்று எனது நிலைப்பாட்டிற்கு வலுச் சேர்க்கும் விதத்தில் இந்த இரண்டு நூல்களும் முக்கியமானவை என்பது என் எண்ணம்.

ஞா.குருசாமி