Wednesday 13 March 2024

தலித் அல்லாத குரலில் தலித் எழுத்து

 


தலித் எழுத்துக்களைப் பொறுத்த மட்டில் பழைய தத்துவம், கொள்கை, கோட்பாடு முதலிய வஸ்துகளை இனி கறாராகக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. உலக அளவிலான பிராந்திய எழுத்துக்களில் அப்படி யாரும் கடைப்பிடித்ததாகவும் நம்பிக்கைக்குரிய தரவுகள் இல்லை. அந்தப் பொழுதுக்கு எது சரியோ அதை நியாயப்படுத்தும் மனம் தான் எல்லோருக்கும் வாய்த்திருக்கிறது. இலக்கியமும் இலக்கியத்திலும் அப்படித்தான். நடப்புக்காலத்தில் எப்படிப்பட்ட எழுத்து சமூகத்தின் இயங்கியலைத் தீர்மானிக்கிறதோ அதே மாதிரியான எழுத்தை எழுதிவிட வேண்டும். அது தான் அன்றைய பொழுதுக்குப் பயனளிக்கும் விஷயம். இலக்கியம் ஒரு மாயவாத புளகாங்கிதச் செயல்பாடு என்பதைப் புரிந்துகொள்ளும் அதேசமயம் அதற்கு ஏற்கனவே இருக்கும் சட்டகத்தை மாற்றிவிடக் கூடிய தீர்க்கமான வல்லமை உண்டு என்பதையும் கணக்கில் கொண்டு புதிய எழுத்து முறைமைக்கு அணியமாக வேண்டும்.

பாபாசாகேப் அம்பேத்கர்

இன்று தலித் இலக்கியத்தைப் பொறுத்தவரை தலித் அல்லாத குரலில் தலித் எழுத்தை ஒரு தலித் எழுத வேண்டும். தலித் குரலே இல்லாமல் தலித் இலக்கியம் இருக்க முடியுமா என்றால் இருக்க முடியும் என்பதே எனது பதில். அதில் தலித்துகளின் விழுமியம், வீரம் இடம் பெற வேண்டும். கருணை மிக்கவர்கள், இரக்கம் கொண்டவர்கள், விட்டுக் கொடுப்பவர்கள் என்று எழுதிப் பெறுகிற இலக்கிய மோஸ்தர் இனி வேலைக்கு உதவாது.  

இலக்கியக் கம்பீரங்களுக்கு எப்போதும் ஒரு சமூக மதிப்பு உண்டு. வை தான் இலக்கியத்தின் வழி உருவான சகல பெருமிதங்களுக்கும் காரணமாக இருந்திருக்கின்றன. அப்படியான எழுத்து தலித்துகளிடமிருந்து வர வேண்டும். அதற்கு மிகுந்த வலிமை உண்டு. உதாரணமாக,

அவனுக்கு இவ்வளவு மிருகத்தனம் இருக்கும்ணு என்னால கணிக்க முடியல. வந்தான் நின்னது தெரியல. அடிச்சுப் போட்டுட்டு போயிட்டான். அவனப் பார்க்கவே பயமா இருந்துச்சு. கண்ணுல தெரிஞ்ச கம்பீரத்தைப் பாத்தியாநம்மள்ல ஒருத்தனுக்குக் கூட அந்தக் கம்பீரம் இல்ல

என்று தலித் அல்லாத குரலில் தலித்தின் கம்பீரம் தலித்தால் எழுதப்பட வேண்டும். இதில் உள்ள ‘மிருகத்தனம்’, ‘பாக்கவே பயம்’, ‘கம்பீரம்என்பதைப் போன்ற வார்த்தைகள் முக்கியமானவை. இதை விட முக்கியம் தலித் அல்லாத குரலில் நம்மிடம் அந்த கம்பீரம் இல்லைஎன்று தலித்தின் கம்பீரத்தைப் பார்த்து பிரமித்து சொல்வது. இவை மாதிரியான திட்டமிட்ட சொற்குவியலும் மொழிக் கட்டமைப்பும் தலித் இலக்கியத்தின் அடுத்த நகர்வுக்கு அவசியமெனலாம்.

கவனத்தில் கொள்ளவேண்டிய மற்றொரு விஷயம், ஒரு புனைவை எழுதும் போது அவற்றில் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் வாசகனுக்குள் கடத்துகிற நவீன அதிர்வு ஏற்பையும் கலாவதியான அதிர்வு விலக்கலையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டால் இலக்கியங்கள் உருவாக்கி வைத்திருக்கும் கம்பீரத்தை இலக்கியங்களைக் கொண்டே தனது பக்கம் திருப்பிக்கொள்ளும் அதிசயம் தலித் இலக்கியத்தில் நிகழும். தலித் இலக்கியத்தில் புதியதாக ‘தன் பக்கம் திருப்பிக் கொள்ளுதல்’ நிகழ வேண்டும் என்றால் தலித்துகளிடம் இதுவரைகம்பீரம்இல்லை என்பது பொருளல்ல. இருப்பதை ஏற்கனவே இருக்கும் சட்டகத்திற்குள் மூழ்கடிக்கும் வேலையை இனியும் செய்யக் கூடாது என்பது பொருள். அதாவது, தலித் புனைவில் வரும் தலித் பாத்திரம் மேலே நின்று கீழே பார்ப்பதாக, எதிர்நிலைப் பாத்திரத்தை சப்பென்று அடித்து விட்டு இனி இந்தப்பக்கம் நீ வரவே கூடாது என்கிற தொனியில் அமைக்கப்பட வேண்டும். அது நிகழுமானால் சாதியத்தமிழர்களின் சகல பம்மாத்துக்களும் தலித் மீதான வன்மங்களும் புதிய வெளிச்சத்தில் தானே அம்பலப்படும்.

 

Saturday 13 January 2024

தமிழர் பண்பாட்டு, வீரவிளையாட்டென்னும் ஜல்லிக்கட்டு – சில விவாதக் குறிப்புகள் - ஞா,குருசாமி

 

16.01.2013 அன்று மதியம் முகநூலை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது ஜல்லிக்கட்டு பற்றி லிவிங் ஸ்மைல் வித்யா வினவியிருந்த வினா ஒன்று கண்ணில் பட்டது. தமிழர்களின் விளையாட்டுகள் பற்றி நிறைய யோசிக்க வைப்பதாக அந்தக் கேள்வி அமைந்திருந்தது.ஆண்களால் மட்டுமே விளையாடப்படும் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த, குறிப்பிட்ட சாதியினரால், சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விளையாடப்படும் ஒரு விளையாட்டு எப்படித் தமிழர் விளையாட்டாகும்?’ என்பதுதான் அந்தக் கேள்வி. தமிழர் யார்? என்று வரையறுப்பதில் ஏராளமான சிக்கல்கள் உண்டு. வரையறைகள் முன்வைக்கப்படும் போது வரையறைக்கு வெளியில் இருப்பவர்களுக்கு அது ஆத்திரம் ஊட்டுவதாகவே அமையும். தர்மபுரி கலவரத்திற்குப் பிறகு சாதி குறித்த பார்வைகள் சில மட்டங்களில் கூர் தீட்டப்படும் வேளையில் தமிழர் பற்றிய வரையறை உருவாக்கம் எளிதானதல்ல. வரும்காலம் வரையறையை அவசியப்படுத்துவதாகவும் அமையலாம்.

தமிழ்த்தேசியம் வேகமடைந்திருக்கும் இன்று அதற்குள் நின்று ஆதாயம் தேடுகின்ற ஒவ்வொருவரும் தம்மை தமிழர் என்கின்றனர். ஆதாயம், பாதுகாப்பு, அரசியல் முன்னகர்வு, பண்பாட்டு மீட்டெடுப்பு என்கிற நிலைகளில் விரியும் தமிழ்த்தேசியம், இந்திய இறையாண்மைக்கு எதிரான ஒன்றாக சிலநேரம் கருத்துருவாக்கம் செய்யப்படும் போது இறையாண்மை பேசுகிறவர்கள் தமிழர் என்னும் வரையறைக்கு வெளியிலே நிற்கிறார்கள. தமிழ்த்தேசியம் ஒ அல்தமிழ்த்தேசியம் என்னும் முரண்படு கருத்துருவாக்கங்கள் மோதிக்கொள்கின்ற பின்னணியிலும் தமிழர் பற்றிய வரையறைக்குச் சிலந்தி வலைச் சிக்கல் உண்டு. என்றாலும் தனிக்குழுப் பண்பாட்டைப் பொதுப்பண்பாடாக்கும் வேலைகள் சத்தமில்லாமல் அரசுத் துணையுடன் நிகழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தமிழர் பண்பாட்டு, வீரவிளையாட்டு என்கிற பொத்தாம் பொதுவான அடையாளத்துடன் நிகழ்த்தப்பெறும் ஜல்லிக்கட்டு பற்றிய சில குறிப்புகளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது அவசியமாகிறது.



தமிழர் பண்பாடு, தமிழர் விளையாட்டு, ஜல்லிக்கட்டு பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், ஜல்லிக்கட்டில் முனைப்புக் காட்டிய சாதிக்குழுக்கள், ஜல்லிக்கட்டில் இருந்து விலகி இருந்த சாதிக் குழுக்கள், தமிழர் பண்பாட்டில் ஜல்லிக்கட்டு உள்ளடங்கிப் போன விவரணைகள், அதனூடான அரசியல் நகர்வுகள் முதலானவற்றைக் கலைத்துப் போட்டு விவாதிக்கும் போது சில முடிவுகளை எட்டக்கூடும்.

பண்பாட்டுக்குள் ஆண், பெண், சிறியவர், பெரியவர், முதலாளி, தொழிலாளி, மூன்றாம் பாலினர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், பாலியல் தொழிலாளிகள், பிச்சைக்காரர்கள் என்கிற தனிமனித இருப்புகள் பிறப்பு, வயது, தொழில், சமூக நிலைப்பாடு எனப் பல தளங்களில் விரிந்துகொண்டே செல்வது உலகின் அனைத்துப் பண்பாடுகளிலும் உண்டு. ஒவ்வொருவருக்கும் அவர்களது வாழ்வெளி தனித்ததாக இருக்கிறது. இறப்பு நிகழ்வுகளில் சில சடங்குகள் விதவைகளே செய்ய வேண்டுமென்பதாக இருக்கிறது. நல்ல நிகழ்வுகளில் ஒதுக்கப்படும் விதவை சக விதவைப் பெண்னோடு தன் மனச்சுமையைப் பகிர்ந்து கொள்கிறாள். இறந்தவருக்கு இடைவழித் தண்ணீர்வைக்கச் செல்லும் போது உடன் எடுத்துச் செல்லும் கொள்ளியை விதவைதான் வீட்டிற்குள் இருந்து எடுத்து வந்து தருகிறார். இப்படி அவர்கள் அறியாமலேயே அவர்களுக்கான வெளி உருவாக்கப்படுகிறது. பாலியல் தொழிலாளிகளுக்கு இடையே பணம், ஆறுதல் மொழி, வாடிக்கையாளர்களின் பண்பு குறித்த தகவல் பரிமாற்றங்கள், ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்கு மூத்த தொழிலாளியின் அனுசரனைத் தேவைகள், புதிய ஒருவரை தொழிலில் பயன்படுத்தும்முன் அவருக்குச் செய்யப்படும் மூளைச் சலவை, தொழில் செய்யும் இடங்களில் பாதுகாப்பை உருவாக்கிக் கொள்ளும் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், எதிர்ப்பாலினரின் பலவீனங்களைச் சக தொழிலாளியிடம் பகிர்ந்து பகடி செய்யும் குதுகுலங்கள் முதலின அவர்களுக்கான வெளியாக விரிந்து கிடக்கின்றது. பிச்சைக்காரர்களின் வாழ்க்கைகளும் அவர்களுக்கான வெளிகளைக் கொண்டுள்ளது. பணம், பொருள், உணவு போன்றவை குறித்த பங்கீட்டு நடைமுறைகள், சமூகத்தைப் பற்றிய விமரிசனங்கள், ஆண் பெண் பிச்சைக்காரர்களுக்கு இடையிலான பாலுறவு, அதற்கான கட்டுப்பாடுகள், சக பிச்சைக்காரர் இறந்தால் தனக்குள் சொல்லிக்கொள்ளும் அனுதாபங்கள், இறந்தவரோடு நெருங்கிப் பழகியவர் இறந்தவருக்காகத் தான் செய்து கொள்ளும் ~தலைத்தண்ணீர்| சடங்கு, இறந்தவரின் இடத்தைத் தலைத்தண்ணீர் சடங்கு செய்தவர் புதிய ஒருவருக்கு வழங்கும் போது மேற்கொள்ளும் நடவடிக்கை, பேசப்படும் பேரங்கள், பேரத்தின் முடிவில் கைமாறும் சொற்பத் தொகையிலான பணம் என்கிற நிலைகளில் பிச்சைக்காரர்களின் வாழ்க்கையைக் காணமுடிகிறது. இவர்களையெல்லாம் உள்ளடங்கி நிற்கும் தமிழ்ச்சமூகத்தில் பொதுவான பண்பாட்டை இனம் காண்பது சிரமமானதுதான்.

தமிழரின் பொதுப்பண்பாட்டுக்குள் நிலைகொண்டிருக்கும் கிளைப்பண்பாடு ஒவ்வொன்றையும் தமிழர் பண்பாடாகக் கருதும் அபத்தத்தைப் போல வேறொன்றும் இருக்கமுடியாது. தமிழரில் குறிப்பிட்ட மக்கள் சார்ந்ததாக இருக்கும்  கிளைப்பண்பாடு அவர்களுக்கு உரியதே தவிர அது தமிழர் பண்பாடு அல்ல என்கிற அவதானிப்போடு ஜல்லிக்கட்டைப் பார்க்க வேண்டியது இப்போதைய தேவை.

ஜல்லிக்கட்டை வீரவிளையாட்டு என்னும் போது யாருக்கான வீரம், யாருக்கு எதிரான வீரம், மாட்டை மையப்படுத்தி வீரத்தைக் கட்டமைக்க வேண்டிய தேவை ஏன்? யார் மாட்டை யார் அடக்குவது? மாட்டை அடக்குவதுதான் வீரமா? என்றெல்லாம் கேள்வி எழுகிறது. இதில் மற்றெல்லாவற்றையும் விட யார் மாட்டை யார் அடக்குவது என்பதற்குள் தான் சிக்கல் அதிகம். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நிகழ்த்தப்பட்டாலும் தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை, மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுகள் அதிகம் நிகழ்த்தப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர், சிவகங்கை மாவட்டத்தில் சிராவயல், சிங்கம்புணரி, கண்டிபட்டி, வேந்தன்பட்டி, புதூர், அரளிப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தேனீமலை, திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, தேனி மாவட்டத்தில் பல்லவராயன்பட்டி, ஆவாரங்காடு ஆகிய ஊர்களின் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் சமீப காலமாக ஊடகங்களினால் மிகுந்த கவனம் பெறுகின்றன.

தமிழர்களின் ஜல்லிக்கட்டு மிகப் பழமையான ஒன்று. அது பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்திலே உண்டு என்றெல்லாம் சொல்பவர்கள் தற்காலத்திய நிகழ்வுக்கும், சங்க இலக்கியங்களில் கூறப்படும் ஏறுதழுவலுக்குமான வேறுபாட்டைப் புரிய மறுக்கிறார்கள். முல்லை நில மக்கள் மத்தியில் மட்டுமே இருந்து வந்த ஏறுதழுவலில் குறிஞ்சி, மருதம், நெய்தல் நில மக்கள் கலந்துகொள்ளவில்லை. அதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு இல்லாமலே இருந்திருக்கின்றன. ஏறுதழுவல் முல்லை நிலப் பண்பாட்டின் உச்சம். ஏறுதழுவியவனுக்கு பெண்ணைப் பொத்தாம் பொதுவாக போகிற போக்கில் கொடுக்கவில்லை. ஏறுதழுவுகிறவனுக்கு வயது, குடி, பொருள் ஆகியவை வரையறை செய்யப்பட்டு இருந்துள்ளன. வரையறைக்கு உட்பட்டவனே ஏறுதழுவ அனுமதிக்கப்பட்டிருக்கிறான். இது போன்ற வரையறைகள் சாதியச் சாயத்தோடு இன்றைய ஜல்லிக்கட்டுகளில் இல்லாமல் இல்லை. பெரும் பகுதி பொதுப்பண்பாட்டுச் சொற்களால் மறைக்கப்படுகின்றன.

1990 களின் பின்பகுதியில் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக இருந்து வந்த ஜல்லிக்கட்டு ஒவ்வொரு முறையும் சாதி மோதல்களில்தான் முடிந்துள்ளது. அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவரால் தடை விதிக்கப்பட்டு இன்றைக்கு அம்மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு முற்றிலும் கைவிடப்பட்டதாக மாறியிருக்கிறது. பாரம்பரியமாகவும், நாட்டார் தெய்வங்களோடும் ஜல்லிக்கட்டு தொடர்பு படுத்தப்பட்டு இருப்பதால் சத்தமில்லாமல் மாட்டுப்பொங்கல் அன்று உழவு மாடுகளைத்தான் இளைஞர்கள் தெருக்களில் ஓடவிட்டு விரட்டிப் பிடிக்கிறார்கள். நாலைந்து மாடுகளோடு முடிவுறும் இந்தச் சம்பிர்தாய ஜல்லிக்கட்டும் மாடுகள் இன்றி குறைந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு நடத்த பெருமளவு பொருட்செலவு ஆகும் என்பதால் பொதுப் பண்பாட்டுச் சொல்லை முன் நிறுத்தி சாதிஇந்துக்களாலேயே நடத்தப்படுகிறது. அரசாங்க ஊடாட்டம் ஏற்பட்டிருக்கிற இன்றைய சூழலில் அவர்களே தலைமை பெறுகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய தலித்துகளால் சில ஊர்களில் சிறுகச் சிறுக பொருள் சேர்த்து பத்து அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரிய அளவில் ஜல்லிக்கட்டு நிகழ்த்தப் பெறுகின்றன. வெகுஜன முகமூடி அணிந்துள்ள தற்கால ஜல்லிக்கட்டில் மாடு களமிறக்கப்படும் போதே அதைப் பிடிப்பவரும் தீர்மானிக்கப்பட்டு விடுகிறார். ஒரு சாதிஇந்துவின் மாட்டை தலித் அடக்குவதை சாதிஇந்துக்கள் அவமானமாகக் கருதுகிறார்கள். திட்டமிட்ட வரையறைகளையும் தாண்டி வெகுஜன மக்களுக்குள் நின்ற தலித்தால் அடக்கப்படும் மாட்டை விலை பேசாமலேயே அடிமாடாக விற்றுவிடுகிறார்கள். விற்றபிறகும் மாட்டுக்காரரின் வீட்டுப் பெண்கள் மாட்டைத்  திட்டி தன் அவமானத்தையும், ஆத்திரத்தையும் தீர்த்துக் கொள்கிறார்கள். 1963 இல் சாதிஇந்துவின் மாட்டை அடக்கிய தலித்தும் மாடும் கொலைசெய்யப்பட்ட செய்தியை நேரில் பார்த்த என் அம்மா சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஜல்லிக்கட்டு மூலம் கட்டமைக்கப்படும் வீரத்தைத் தலித்துகள் தமக்கு நிகராகப் பங்கு போட்டுக்கொள்வதையும், அவர்கள் தனியாக நிகழ்த்தி தங்கள் வீரத்தை நிரூபித்துக்கொள்வதையும் ஏற்கப்பொறாத சாதிஇந்துக்களின் பிற்போக்கு எண்ணங்கள் ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் வெளிப்படாமல் இல்லை. ஜல்லிமாடு வளர்த்தல், சண்டைக்கிடா வளர்த்தல், சண்டைக்கோழி வளர்த்தல் ஆகியன தென்மாவட்டங்களில் பொதுச்சாதியில் தங்களை ஒன்றாகக் கருதிக்கொள்ளும் சில உட்சாதிக்குழுக்களால் குலத்தொழில் போல செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் மூலம் கட்டமைக்கப்படும் வீரம் அவர்களுக்கேயுரியது; பரம்பரையானது என்னும் நிலைப்பாட்டை அவர்கள் உருவாக்கிக்கொண்டு விட்டார்கள்.

விலங்குகள் நல வாரியம் மூலம் ஜனவரி 2008 இல் மேனகா காந்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு எதிராகத் தடை உத்தரவு பெற்றார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சார்ந்த டி.ரங்கசாமி என்பவரும் ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர், மதுரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரைப் பிரதிவாதிகளாகச் சேர்த்திருந்தார். அவரது மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. அப்போது கொதித்தெழுந்து போராட்டங்களை நடத்தியவர்கள் தலித்துகள் அல்ல. தொடர்ந்து தமிழக அரசு 2009 இல் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தை இயற்றியது. விலங்குகள் நல ஆர்வலர்கள், இந்திய விலங்குகள் நல வாரியம். பெடா (Pநுவுயு)இ இந்திய நீலச் சிலுவைச்சங்கம் முதலிய அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம் சரியாகப் பயன்படுத்துவதில்லை என நீதிமன்றத்தை நாடின. உச்சநீதி மன்றத்தில் இந்திய விலங்குகள் நல வாரியம் ஒரு மாவட்டத்தில் ஓராண்டு காலத்தில் மூன்று ஜல்லிக்கட்டுகளுக்கு மேல் நடத்த அனுமதிக்கக் கூடாது, ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் குறைந்த பட்சம் ரூபாய் 20 இலட்சத்தையாவது வைப்புநிதியாகச் செலுத்த வேண்டும், மருத்துவத் துணைக்கருவிகள், மருந்துகளுடன் மருத்துவர் ஒருவர் போட்டி நடைபெறும் இடத்தில் இருக்க வேண்டும், ஒரே நேரத்தில் ஒரு காளையை ஐந்து பேருக்கு மேல் பிடிக்கக் கூடாது, ஏற்கனவே உள்ள ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் சட்டத்தின் ஏழாவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்தது. 2011 மார்ச்சில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்குக் கூடுதல் வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2011 சூலையில் மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் சிங்கம்,புலி, கரடி, குரங்கு போன்ற வனவிலங்குகளைக் கூண்டில் அடைத்தோ பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது என உத்தரவு பிறப்பித்தார். பின்பு ஏற்கனவே இருந்த சட்டத்தில் காளையும் சேர்க்கப்பட்டதால் ஜல்லிக்கட்டிற்கு மறைமுகமாகத் தடை விதித்தது போன்ற சூழல் உருவானது. 2012 இல் உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. காளைகளும், வீரர்களும் முறைப்படி பதிவு செய்ய வேண்டும், காளைகளின் பின்உறுப்பில் மிளகாய்ப்பொடி, சேறு, சகதி பூசித் துன்புறுத்தக் கூடாது, காளைகளை அடிப்பதோ, வாளைப் பிடித்துத் திருகுவதோ கூடாது என்ற கட்டுப்பாடுகளுடன் இந்த வருட ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது.

டி.ரங்கசாமி தொடுத்த வழக்கில் பிரதிவாதிகளுள் ஒருவரான அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் த.உதயச்சந்திரன் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் சமூக விளையாட்டுகளின் முக்கியம் குறித்தும், பண்பாட்டுத் தளத்தில் அவை இருப்பதற்கான காரணங்கள் பற்றியும் கூறப்பட்டு இருந்தது. மனுவில் ~~தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்கிற மாடு பிடிக்கும் இந்த விளையாட்டுக்குப் பெயர் பெற்ற அலங்காநல்லூர் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இதில் ஆழமான ஆர்வமும் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு வீரத்தை விதைத்திடும் அலங்காநல்லூர் கிராமத்தில் தொடக்க காலத்தில் இருந்தே இந்த விளையாட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே இந்த விளையாட்டுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் இரண்டாம் பத்தியில் கூறப்பட்டுள்ள உறுதிக் கூற்று உண்மைக்கு முற்றிலும் புறம்பானதாகும். ஏறத்தாழ தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டுத் திருவிழாக்களில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கெனத் தனித்த பெயரும் புகழும் இடமும் என்றும் உண்டு. மதுரை மாவட்டக் கருப்பொருள் களஞ்சியத்தில் பதிவாகி இருக்கும் விவரத்தின் படி இவ்வீர விளையாட்டானது தமிழ்நாட்டில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடத்தப்பட்டு வருவது தெரிகிறது…. இந்தக் காளைகள் வேறு எந்த வேலைக்கும் பயன்படுத்தப்படாமல் இருப்பது அவற்றின் மீதான கற்பனைகளை விரிக்கிறது. இயல்பாகவே காளைகளை அடக்கத் துடிக்கும் வீரமறவர் குல இளைஞர்களின் குருதியோடும் சுவாசத்தோடும் நெருங்கிய தொடர்புடையது ஜல்லிக்கட்டு|| என்று பேசப்பட்டு இருக்கும் செய்திகள் முன்பின் முரண்பாடுகளோடும் வேறு சில புரிதல்களையும் தருகிறது. மேலும் அந்த மனுவில் கிறிஸ்தவர்களும், முகமதியர்களும் தங்களுடைய வழிபாட்டுத் தலங்களில் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருவதால் ஒட்டு மொத்த தமிழ்ச்சமூகத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டாகவே இதனைக் கண்டுணரத் தங்களை வேண்டுகிறேன்.எனக் கூறப்பட்டுள்ள இடத்தில் மூன்று மதத்தினருக்கு இடையில் தொடர்பு கற்பித்து இருப்பது எதற்காகவோ தெரியவில்லை. மூன்று மதத்தைச் சார்ந்தவர்கள் நடத்தினால் அது தமிழர்களின் விளையாட்டாகி விடுமா? என்பது தான் நம் கேள்வி.

ஒரே ஊரில் இரண்டு இடங்களில் வெவ்வேறு சாதிக்குழுவால் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு சாதியத்தின் வீரியத்தை வெளிச்சமாக்கும். முரண்படும் இரண்டு சாதிக்குழுக்களே தனித்தனியாக நடத்துகின்றன. தமிழ்ச் சமூக அமைப்பில் நிலவுடைமையாளர்கள் ஒ விவசாயக்கூலிகள் என்னும் அடுக்கில் விவசாயக்கூலிகளே ஜல்லிக்கட்டுக் களத்தோடும் மாடுகளோடும் நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள். நிலவுடைமையாளர்களின் பங்களிப்பு பார்வையாளர்களாக இருப்பது மட்டுமே. விவசாயக்கூலிகளாக இருக்கக்கூடிய பல சாதிக்குழுக்களும் ஜல்லிக்கட்டில் நேரடித் தொடர்பு இல்லாமல் பார்வையாளர்களாவே இருக்கிறார்கள். பெண்களுக்கும் இதே நிலைதான்.

ஜல்லிக்கட்டோடு நேரடித் தொடர்புடையவர்களின் பண்பாட்டை பார்வையாளர்கள் மீதும் படரவிடுவதுதான் நம் முன்னால் கிடக்கும் பின்னல். குடும்பத்தில் ஒருவர் ஆடம்பரமாக இருக்கிறார் என்றால் அந்தக் குடும்பமே ஆடம்பரமாக இருக்கிறது எனக் கருத முடியாது. தமிழ்ச் சமூகத்தில் சில சாதியக்குழு மட்டுமே ஜல்லிக்கட்டு மீது அதீத அக்கறை காட்டி, அதைப் பொதுப்பண்பாட்டுக்குள் அடக்குவது பண்பாட்டுத் தளத்தில் விபரீதத்தை ஏற்படுத்தும். தவறான புரிதல்கள் நிலையான கருத்துருவாக்கங்களாகி சமூகத்திற்குச் சவாலாக மாறியிருக்கும் சூழலில், குறிப்பிட்ட சில குழுக்களே கொண்டாடும் ஒரு விளையாட்டைப் பொதுப்பண்பாட்டுத் தளத்தில் இணைக்கும் போது, பொதுப்பண்பாடு எங்களில் இருந்துதான் கட்டமைக்கப்பட்டது என்ற கருத்தும் உருவாகலாம். சில குழுக்களுக்கேயுரிய பண்பாடு பொதுப்பண்பாடாக மாற்றம் பெறும்போது, அது விலகி நிற்கும் குழுக்களைப் படுகுழியில் தள்ளிவிட்டிருக்கிறது என்பதே வரலாறு நமக்குக் கற்றுத் தந்திருக்கும் பாடம்.

 

நன்றி : உயிர் எழுத்து, பிப்ரவரி 2013

Tuesday 26 December 2023

சாங்கிய காரிகை என்னும் தத்துவ நூல்

         

சாங்கிய காரிகை என்னும் தத்துவ நூல்

ஞா.குருசாமி

வடமொழி என்பது சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி ஆகிய மூன்று மொழிகளையும் குறிக்கும். மூன்று மொழிகளில் இருந்து தமிழில் வழங்கும் சொற்களை வடமொழிச் சொற்கள் என்று குறிப்பிடுவது தமிழில் வழக்கம். அப்படி மூன்று மொழிகளின் சொற்களைத் தமிழில் பொதுப்பெயர்ச் சொல்லால் குறிப்பிடுவது பல நேரங்களில் தவறாகவும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. ஏன் இது நேர்ந்தது என்று தெரியவில்லை


நெல்லை க.சுப்பிரமணியன் எழுதியசாங்கியக் காரிகைஎன்னும் நூல் 1980 ஆம் ஆண்டு வெளியானது. இந்நூலுக்கான அணிந்துரையை இலங்கை, சிதம்பரா கல்லூரி ஆங்கிலத் துறைப் பேராசிரியர் கே.எஸ்.கிருஷ்ண ஐயங்கார் ஆங்கிலத்தில்  எழுதியிருக்கிறார். அதில் கடைசிப் பத்தி ‘The original sutra in sanskirt have been carefully compared with Tamil rendering and I am glad to state that the translate brings out the meaning clearly’ என்பதாக அமைந்திருக்கிறது. இதைத் தமிழுக்கு மொழிபெயர்த்த பா.வளன் அரசு sanskirt என்பதற்கு வடமொழி எனப் பெயர்த்திருக்கிறார். அப்படி பெயர்ப்பது வளன் அரசு காலத்தில் பலரும் செய்தது தான். இன்றும் கூட அது தொடர்கிறது. ‘சமஸ்கிருதம்எனப் பெயர்ப்பதில் தமிழில் இருந்த சிக்கல் என்னவென்பது தெரியவில்லை. ஆங்கிலத்தில் North Language என்ற சொற்பிரயோகம் இல்லை. சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை அதனதன் பெயர்கொண்டே சுட்டுகிறார்கள். ஆனால் தமிழில் அது மூன்று மொழிகளுக்கான பொதுச்சொல் பெயராக வழங்குவது வியப்பளிக்கிறது. ஒருவேளை 1910 களுக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட சமஸ்கிருதத்தின் மீதான ஒவ்வாமை காரணமாக இருக்கலாம் என்பதை இப்போதைக்கு ஒரு சமாதானமாக வைத்துக் கொள்வோம்.

சாங்கிய காரிகைக்கு நா.வானமாமலை முகவுரை எழுதியிருக்கிறார். நூலின் செய்திகளைப் புரிந்துகொள்வதற்கு முகவுரை பேரளவில் துணைசெய்கிறது. சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளோடு தொடர்புடைய செய்திகளைத் தொட்டுக் காட்டியும் இந்தியத் தத்துவ மரபை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய முறை பற்றியும் விளக்கியிருக்கிறார் வானமாமலை.

மூலச் சூத்திரங்களை பெயர்த்து விளக்கும் முன் சாங்கியத் தத்துவம் பற்றிய சுருக்கத்தைத் தந்திருக்கிறார் நூலாசிரியர் க.சுப்பிரமணியன். எண்ணியம், மெய்ப்பொருளியல், அறிவு என்றெல்லாம் குறிக்கப்படும் சாங்கியத்தின் பிற்கால நேர், எதிர் பரிமாணங்களைப் பற்றிய செய்திகள் சாங்கியம் குறித்தத் தேடலைத் தூண்டுகின்றன. இருபத்தைந்து தத்துவங்களைக் கொண்டது உலகம். புருடன் என்னும் அறிவில் இருந்து புத்தி பிறக்கிறது. புத்திக்கு அகங்காரம் என்றொரு பெயரும் உண்டு. இது தைசத அகங்காரம், பூதாதி அகங்காரம், வைகாரிக அகங்காரம் என்று மூன்று வகையாகப் பிரித்து அறியப்படும். தைசத அகங்காரம் மனம், ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள் என்று மூன்றாகும்.

பூதாதி அகங்காரம் ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்று ஐவகைப்படும். தன் மாத்திரைகள் என்று சொல்லப்படும் இவ்வைந்தும் ஐந்து பூதங்களாகின்றன. ஐந்து பூதங்களும் சேர்ந்து உடம்பையும் உலகத்தையும் தோற்றுவிக்கின்றன என்பது சாங்கியத் தத்துவத்தின் அடைப்படை. இதைக் கீழ்வரும் படம் விளக்கும்.

                    

                     ஹிரியண்ணாவால்இந்தியப் புலமை இலக்கியம் அனைத்திற்கும் முத்துஎன்று குறிப்பிடப்படும் சாங்கியக் காரிகையின் தருக்கம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இதில் முக்குணம் பற்றிய செய்திகள் சாங்கியத்தின் முன் பின் அமைப்பு நிலைப்பாட்டினை விவரிக்கிறது. சத்துவம், இராசதம், தாமதம் என்னும் முக்குணங்களும் ஒன்றுக்கொன்று சேர்ந்து நின்று உதவிக் கொள்பவை. முக்குணம் சமநிலையில் இருக்கும்போது படைப்புகள் நிகழ்வதில்லை. அவற்றுள் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் போதே படைப்புகள் உருக்கொள்கின்றன. அவை ஐந்து புலன்களுக்கும் தென்பட்டால் வியத்தம். தென்படவில்லையெனில் அவ்வியத்தம் என்று சொல்லப்படும்.

              சாங்கியத் தத்துவத்தை எழுதியவர் கபிலர் என்று சொல்லப்படுகிறது. கபிலர் ஆரிசு என்பவருக்குப் போதிக்க ஆரிசு பஞ்சசிகருக்குப் போதித்தார். வடமொழி நூலான சட்டி தந்திரத்தைச் சுருக்கமாக சாங்கியக் காரிகை என்னும் பெயரில் சுருக்கமாக எழுதியவர் ஈஸ்வர கிருஷ்ணர். ‘புல்நுனிப் பனிநீரில் பனையின் வடிவம் கூட அடங்கியிருப்பதைப் போல சாங்கியக் காரிகையில் தத்துவங்கள் அனைத்தும் அடங்கியுள்ளன’ என்கிறார் ஆசிரியர்.

              நூலின் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து விளக்கி இருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் மேலதிகமாகத் தெரிந்து கொள்ள சாங்கிய காரிகை நூலினை வாசிக்கலாம். அண்மையில் இந்நூல் மறுபதிப்பு வந்ததாகத் தெரியவில்லை. வந்தால் நல்லது.  

***

Tuesday 21 November 2023

புலவர் தோ. ஜம்புகுமாரன் அவர்கள் எழுதியுள்ள அவரது வாசிப்பு அனுபவம்

 

எனது 'தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்)' என்னும் நூலுக்கு சமணப் பேரறிஞர் புலவர் தோ. ஜம்புகுமாரன் அவர்கள் எழுதியுள்ள அவரது வாசிப்பு அனுபவம்

தோஜம்புகுமாரன்


அன்பிற்கினிய நண்பரீர்! ஆன்மநலம் விளைக! அரியவாம் நற்காட்சி பொலிக! தங்களின் அரிய படைப்பான தமிழிலக்கிய வரலாற்று நூலை இன்றுதான் வாசித்து முடித்தேன். 1970ஆம் ஆண்டு முதல் வெளிவந்த தமிழிலக்கிய நூல்களின் பெரும் பரப்பினை தங்களின் நுண்மாண் நுழைபுலன் என்னும் அளவுகோலைக் கொண்டு அளந்து காட்டி விட்டீர்கள். சிறுவர் இலக்கியம் தொடங்கி இணைய இலக்கியம் வரையிலான இலக்கியங்களை ஆய்ந்து அறிய தாங்கள் எடுத்துக்கொண்டுள்ள பேருழைப்பை நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக உள்ளது.

சமயங்கள் வளர்த்த இலக்கியங்களின் மதிப்பீடுகள் அனைத்தும் நடுநிலைப்பான்மையில் விருப்புவெறுப்பின்றி செய்திகளை அடுக்கிக்கொண்டே செல்லும் அழகும் தம்கருத்தை வலியுறுத்திக் கூறாமல் காலச்சூழலின் அழுத்தத்தை மேம்போக்காகச் சுட்டி காரணம் இவ்வாறு இருக்கலாம் என நாகரிகமாகச் சொல்லிச்செல்லும் தங்கள் திறப்பாட்டினை வியக்கிறேன். 1970க்குப்பிறகு தமிழ்புலத்தில் இத்தனை இலக்கியங்களா? இத்தனை எழுத்தாளர்களா? அது சரி. இத்தனையும் சேகரிக்க தங்களுக்கு எவ்வளவு காலம் ஆகியிருக்கும், நீங்கள் பட்ட பாடுகள் எவ்வளவு இருக்கும்? நினைத்துப்பார்க்கிறேன். இதற்கு முன் வெளிவந்துள்ள பேரறிஞர்கள் பலர் எழுதியுள்ள இலக்கிய வரலாறுகளினும் இந்நூலின் சொல்நடை உரைப்போக்கு முற்றிலும் வேறுபட்டுள்ளது. எல்லாவற்றினும் என்னை வியப்புற வைத்தது அதன் ஓட்டந்தான். சின்ன சின்ன வாக்கியங்களில் செய்திகளை அடுக்கிச் செல்லும் போது, நடைக்கு இறக்கை முளைத்துவிடும் போலும் போகும்போக்கில். தாங்கள் ஆங்காங்கே தூவிச்சென்றுள்ள புதுவதாகப் புனைந்தாளும் சொற்றொடர் அமைப்புகள் தங்களின் மொழிப்புலமையை உயர்த்திக்காட்டுகின்றன.(.டு) ஆண்மையவாத சிந்தனாவெளி-சமுதாய ஒழுக்கவியல் கற்பிதங்களைச் சிதைவிற்குள்ளாக்குதல் -போன்றனவும், அரிய சொல்வகைகளாக, காத்திரம் - (இதை நிறைய இடங்களில் பயன்படுத்தியுள்ளீர்கள்) இறுக்கம் - பொதுவெளி போல்வன. நிற்க,

சமணம்சார்ந்த இலக்கிய செய்திகளை மற்ற சமயச்செய்திகளை மொழிவது போலவே கூடவும் குறைவுமின்றி அளவோடு பேசியுள்ளீர்கள். அடியேனைப் பற்றி, காவியப்படைப்புகள் பற்றி விளக்கமாகவும் சுருக்கமாகவும் சொல்லியுள்ளீர்கள். நன்றி! என்னுடைய படைப்புகளில் நான் பிரதானமாகக் கருதுவது தமிழ்நிலத்தில் வழிபாட்டிலுள்ள சமண ஆலயங்களைப் பற்றிப் பாடியுள்ள "தமிழக ஜைன க்ஷேத்திரமாலை"என்னும்நூலே! 134ஆலயங்களின் மூலவர்களைப் பற்றிய பாடல்கள். அனைத்தும் பதிகங்களே. இதை சமண தேவாரம் என்று சொல்லலாம். இது தங்களின் பார்வைக்குக்கிட்டாமற் போனது ஏனோ தெரியவில்லை.

கவிதை நூல்களையும் ஆசிரியர்களையும் பற்றி ஒன்று விடாமல் பட்டியலிட்டுள்ளீர்கள். இன்று எல்லோரையும் ஆட்டிக்கொண்டு இருக்கும் - அசுரவளர்ச்சி அடைந்துவருகின்ற இணையஞ் சார் இலக்கியவகைகளையும் விவரித்துள்ளீர்கள். இந்த நூலைநான் இன்று படித்துமுடித்த போது, தங்களின் மேதா விலாசமும், நினைவாற்றலும், மொழி ஆளுமையும் என் மனக்கண்முன் இமயம்போல் ஓங்கிநிற்கிறது. தங்களின் இந்த அரிய வரலாற்றுநூல் பின்னர் எழுதவரும் ஆசிரியன்மார்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்நூல் கல்லூரிகளில் பாடநூலாக ஏற்கப்படும் காலம் விரைவில்வரும் என்பதிலும் ஐயமில்லை. தங்களின் இத்தகு ஆக்கப்பணி மேலும்மேலும் வளர்ந்தோங்கி இசை பெருகவென வாழ்த்தி மகிழ்கிறேன். உடல்நலமின்றி இருந்தமையால் என் எண்ணங்களைத் தெரிவிக்கத் தாமதமாயிற்று. பொறுத்தருள்க! தங்கள் நூலை வாசிக்கவும் தங்களைப் பற்றி அறிந்துகொள்ளவுமான ஒரு வாய்ப்பளித்தமைக்கு நன்றி! வணக்கம் வாழ்க வளமுடன்!