Monday 6 February 2023

அண்மைக்கால தலித் தன் வரலாற்று புதினங்கள் : மறுக்கும் கதையும் உரைக்கும் உண்மையும்


இலக்கிய வகைமைகளில் தன் வரலாறுகள் தனித்த அரசியல் நோக்கமுடையன. அதிலும் குறிப்பாக தலித் தன் வரலாற்று நூல்கள் கலகக் குரலுடன் அரசியல் பேசுபவை. சர்வதேச அளவில் தலித் தன் வரலாறுகள் நிறைய உண்டு. தமிழ்நாட்டில் தலித் தன் வரலாறுகள் நாவல் என்று அடையாளப்படுத்தப்படுகின்றன. ஒருமுறை எழுத்தாளர் பாமாவுடனான நேர்ப்பேச்சில் அவரதுகருக்குதலித் தன்வரலாறு நாவல் என்று அடையாளப்படுத்தப்பட்டு வருகிற போக்கிற்காக குறைபட்டுக் கொண்டார். தமிழ்நாட்டுக்கு வெளியே அவர் தன்வரலாறு ஆசிரியராகவே தான் அடையாளப்படுத்தப்பட்டார். கருக்கு அடையாளம் தொடர்பாக நேர்ப்பேச்சில் குறைபட்டுக் கொண்ட பாமா, கருக்கை நாவல் என்று அடையாளப்படுத்தியதற்கான எதிர்க்கருத்தை இதுவரை வைக்கவில்லை. சமூகம் எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்துக் கொள்ளட்டும் என்னைப் பொருத்தவரை கருக்கு என்னை நானே எழுதிப் பார்த்த பிரதிஎன்று தன் நிலைப்பாட்டை விளக்கினார். தமிழ்ச்சூழலில் தலித் தன்வரலாறுகள் நாவலாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

தலித் தன் வரலாறுகள்

இந்திய அளவில் தலித் தன் வரலாறுகள் மிகவும் கவனிக்கப்பட்ட ஆக்கங்களாக இருக்கின்றன. கடந்த நூறு ஆண்டுகளில் தலித் குறித்த ஆதிக்கச் சாதியினரின் புரிதல் குறித்த எண்ணம் மாறி இருப்பதற்கு தலித் தன்வரலாறுகள் ஆகச் சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கின்றன. தலித்துகள் தமது பண்பாடு தனித்துமானது, நால்வருணத்திற்குள் அடங்காத வாழ்வியல் முறைகளைக் கொண்டது என்பதை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டும் மறுக்க முடியாத சான்றுகளாலும் எழுதிக்கொண்டு இருப்பதும் தான் ஆதிக்கச்சாதியின் சமகாலப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. அதன் விளைவே இன்றைக்குத் தலித்துகள் மீதான தாக்குதல் அதிகரித்திருப்பதற்குக் காரணம்.

தலித் இலக்கியம், தன்வரலாறு குறித்த ஓர்மை அம்பேத்கர் காலத்தில் இருந்தே மராட்டியத்தில் இருந்துவந்தாலும் 1980களுக்குப் பிறகு தன் கூடுதல் எத்தனிப்புடன் வெளியாகத் தொடங்கியது. 1990களில் புதுப்பாய்ச்சலில் வேகமெடுத்தது.

தயா பவார் எழுதியபலூட்டா தலித் சமூகத்தின் பெருமையைப் பேசுகிறது. முதல் தலித் தன்வரலாறாகச் சொல்லப்படும் இதில், வருண அமைப்புக்குள் அடங்காதது தலித் சமூகம் என்றும் கருத்துடைய தயா பவார், எதிர்கால அரசியல் பேச கடந்த கால வரலாற்று அறிவு அவசியம் என்கிறார். தெருநகரம் மட்டும் தான் சாதியில் சிக்கி அழுகிக்கொண்டு இருக்கிறது. உலகம் சாதியற்று தூய்மையாக இருக்கிறது என்பதை விவரித்திருக்கும் விதத்தில் பலூட்டா குறிப்பிடத் தக்கதாகும்.

1984 இல் சரண்குமார் லிம்பாலே வெளியிட்ட அக்ர்மசி (புறச்சாதி) ‘அனார்யாஎன்னும் பெயரில் தமிழில் வெளியானது. இதை 2003 இல் சந்தோஷ் பூம்கார் ‘The Outcaste’ என்னும் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஒரு தலித் மராட்டியத்தில் கடந்து வந்த பாதை, எதிர்கொண்ட பாகுபாடு, சமத்துவமின்மை, அடையாளமின்மை ஆகியவற்றைப் சமரசமற்ற மொழியில் சரண்குமார் லிம்பாலே பேசினார். தனது அம்மாவும் பாட்டியும் தலித்துகள், அவர்கள் பெண்கள் என்பதற்காகக் கூடுதல் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளானதாகக் குறிப்பிடுகிறார். சாதிஇந்து பெண்களும் கூட சுரண்டலுக்கு உள்ளாகி இருப்பதையும் ஆண்கள் உலகில் இருந்து பெண்கள் உலகம் முற்றிலும் வேறுபட்டிருப்பதையும் விவரித்தார். மறுமணம் விஷயத்தில் பெண்கள் சபிக்கப்பட்டவர்கள் என்கிறார். சாதிஇந்து தன்னுடைய அதிகாரத்தை மறுஉற்பத்தி செய்துகொள்வதற்காகவே தலித்துகள் மீதான கொடுமைகள் தொடர்கின்றன என்றார். சரண்குமார் லிம்பாலே குடியிருந்தமஹர்வாடாபகுதி பற்றிய வருணனையில் சாதிஇந்து மனநிலையின் குப்பைகளைக் காட்சிப்படுத்துகிறார். ஊதியக் குறைவான வேலையின் வழியாக தலித்துகள் கொடுமைக்கு உள்ளானதை விவரிக்கும் லிம்பாலே தன்மீது இழிவைச் சுமத்திக்கொண்டிருப்பதையே வேலையாகக் கொண்டுள்ள புராண, இதிகாசங்களைக் கண்டிக்கிறார். விலங்குகளை உடைக்காமல் விடுதலை பெற முடியாது என்பதை நம்பும் சரண்குமார் லிம்பாலே அந்த வேலையை தன்வரலாற்று நாவலில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பேபித்தாய் காம்ளே பலசரக்குக் கடையில் வேலை பார்த்தவர். பொட்டலம் மடிக்க வைத்திருந்த செய்திதாள்களை வாசித்துப் பழகி அதன் விளைவாக தன்னுடைய வரலாற்றை ஜீனா அமுச்சா என்ற பெயரில் மராத்தியில் எழுதியவர். 1986 இல் வெளியானது. ‘ஜீனா அமுச்சா என்ற சொல்லுக்கு வாழ்க்கை நம்முடையது என்று பொருள், ஆங்கிலத்தில் ‘The Prisons We Broke’ (நாங்கள் உடைத்த சிறைகள்) (2009) என்று வெளியானது. பெளத்தம் சார்ந்து தன் வாழ்வை அமைத்துக்கொண்ட பேபி காம்ளே மராத்தியின் புரட்சிகரமான பெண் எழுத்தாளராவார்.

நரேந்திர ஜாதவ்எங்கள் தந்தை மற்றும் நாங்கள்’ (Aamcha baap Aan Amhi) என்று 1993 இல் தன் வரலாற்றின் முதல் தொகுதியை வெளியிட்டார். இன்று வரை 215 பதிப்புகள் வந்திருக்கிறது. அவுட்கேஸ்ட் (Outcaste) என்னும் பெயரில் இரண்டாம் தொகுதி 2002 இலும்,  தீண்டப்படாதவர்கள் (Untouchables) என்னும் என்னும் மூன்றாம் தொகுதி 2005 இலும் வெளியானது. இவரது தன்வரலாறு சமத்துவம் நீதிக்காக ஒரு குடும்பம் இந்திய சாதியமைப்பை எதிர்த்துப் போராடிய வரலாற்றை பேசியது. தனது தந்தையின் நாட்குறிப்பையும் தனது குடும்பம் பற்றிய கதைகளையும் அடிப்படையாக வைத்து தனக்கு நேர்ந்த கொடுமைகள் தன் பிள்ளைகளுக்கு நேர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணமும் போராட்டக் குணமும் கொண்ட ஒரு தந்தையை எதார்த்தமாகச் சித்திரித்திருந்தார் நரேந்திர ஜாதவ். இந்திய ரிசர்வ் வங்கியின் மூத்த பொருளியல் அறிஞராகவும் பூனே பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தார், மாநிலங்களவை உறுப்பினர், முன்னாள் திட்டக்குழு உறுப்பினர், ஆப்கானிஸ்தான் தலைமை வங்கியின் ஆலோசகர் என்று பல பொறுப்புகளை வகித்த நரேந்திர ஜாதவ் தனக்கு முன்னால் ஆதிக்கச்சாதியினாரால் விரிக்கப்பட்ட அத்தனை வலைகளையும் அறுத்தெறிந்து முன்னேறியவர்.

ஊர்மிளா பவாரின் அய்டன். மாயா பண்டிட் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் The weave of my life : A Dalit Women’s Memoirs (2008) என்னும் பெயரில் வெளியானது. இந்த தன் வரலாறுகள் அனைத்தும் பெரிதும் கவனம் பெற்றவை.

1994 இல் மராத்தியில் கிஷோர் சாந்தாபாய் காலே கோல்ஹத்யாசா போர்(கோலாத்தியின் மகன்) என்ற தலைப்பில் தன் வரலாற்றை எழுதினார். சந்தியா பண்டே Againt all odds என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இசையுடன் ஆடிப்பாடும் நாடோடி சமூகத்தில் பிறந்தவர். பின்னாளில் இந்த நூலைத் தடை செய்ய வேண்டுமென்று அவரது சமூகமே குரல் எழுப்பியது. அந்த அளவுக்கு அது சாதியின் கோரமுகத்தைச் சித்திரித்திருந்தது. மராத்திய எழுத்தாளரும் உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்தவருமான ஓம் பிரகாஷ் வால்மீகி, ஜூதான் என்கிற பெயரில் தன் வரலாற்றை எழுதினார். இந்நூல் இந்திய தலித் இலக்கியத்தின் திருப்புமுனையாக அமைந்தது. 2003 இல் வெ.கோவிந்தசாமி மொழிபெயர்ப்பில் விடியல் பதிப்பகம் ஜூதான் எச்சில் என்ற பெயரில் தமிழில் வெளியிட்டது. யார்க் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் அருண் பிரபா முகர்ஜி இந்நூலை இந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். இந்துசமூக மாற்றத்தை வலியுறுத்தும் போக்கு இந்நூலில் கோட்பாட்டு விவரிப்பு போல இடம் பெற்றிருக்கிறது.

லட்சுமண் கெய்க்வாட் எழுதிய உச்சாலியா பழிக்கப்பட்டவன் (1987) நாடோடி சமூகத்தின் அவலங்களைப் பேசியவகையில் கவனம் பெற்றது. இந்நூல் வந்த பிறகு நாடோடிச் சமூகம் குறித்த பொதுச் சமூகத்தின் பார்வை மாறிப்போனது. இந்திய நாடோடி சமூகத்தின் கலங்கமற்ற வாழ்வியல் முறைமை சர்வதேச கவனம் பெற்றது. சாகித்ய அகாடெமி உட்பட பல விருதுகளைப் பெற்றது. பல பல்கலைக்கழகங்களில் பாடநூலாக அமைந்தது. லட்சுமண் கெய்க்வாட் இந்திய இலக்கியத்தின் முகமாக சர்வதேசிய அரங்கில் கவனம் பெறுவதற்கு உச்சாலியா தான் காரணமாக அமைந்தது. அவரே இந்தியாவின் நான்கு பிரதமர்களைச் சந்தித்து நாடோடி பழங்குடிகளைப் பற்றிப் பேசுவதற்கு உச்சாலியா தான் காரணம் என்று சொல்கிற அளவுக்கு அந்நூல் தலித் தன்வரலாற்றில் முக்கியமானதாகிப்போனது. இந்தப் பட்டியல் முழுமையானது அல்ல.

தமிழில் தலித் தன்வரலாறு

தமிழில் 1939 – இல் இரட்டைமலை சீனிவாசனின் ஜீவிய சரித்திர சுருக்கம் தான் முதல் தலித் தன்வரலாறாகக் கருதப்படுகிறது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் பாமாவின் கருக்கு, விடிவெள்ளியின் கலக்கல் ஆகிய 1990 களின் தொடக்கத்தில் வெளியாயின. ராஜ்கெளதமனின் சிலுவைராஜ் சரித்திரம்’ (2002), ‘காலச்சுமை’ (2003), கே..குணசேகரனின் வடு ஆகியன அடுத்தடுத்து வெளியாயின. தலித் தன் வரலாற்று நாவல்கள் வரிசையில் இவை முக்கியமான ஆக்கங்கள்.  

சமீப கால தலித் தன்வரலாறுகள்

பெ.சென்றாயப் பெருமாள் எழுதிய ஓர் ஆட்டக்கலைஞனின் பயணம்’ (2020), எஸ்.கலியபெருமாள் எழுதிய புலிப்பால் நாவினால் சுட்ட வடு’ (2021), திருக்குமரன் கணேசன் எழுதியகறி விருந்தும் கவுளி வெற்றிலையும் சாதியினால் சுட்ட வடு’ (2022) ஆகிய மூன்று நூல்கள் 2020 க்குப் பிறகு வெளியானவை. அந்த அடிப்படையில் அவை சமீப காலத்தவையாகக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்நூல்கள் இக்கட்டுரையின் ஆய்வுக் களமாக அமைந்திருக்கின்றன.

பெ.சென்றாயப் பெருமாள் இறப்பு வீடுகளில் நிகழ்த்தப்படும் மட்டை ஆட்டத்தில் பெண் வேடமிட்டு ஆடிய கலைஞர். அவரது தந்தை, சகோதரர்கள், முன்னோர்களும் கூட ஆட்டக் கலைஞர்கள் தான். மதுரை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியசூலப்புரம்ஊரைச் சாந்தவர். வரலாற்றுத் துறையில் ராஜாராணி ஆட்டம் தொடர்பான ஆய்வைச் செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவரது ஆய்வின் ஒரு பகுதியையும் தன் வரலாற்றையும் உள்ளடக்கி வந்திருக்கிறதுஓர் ஆட்டக்கலைஞனின் பயணம்’.

ஆதிக்கச் சாதியினரால் பல்வேறு வடிவங்களில் சுரண்டலுக்கு உள்ளாகிவரும் ஒரு சமூகத்தின் கலைஞர்கள் மட்டை ஆட்டத்தில் தம்மை ராஜா, ராணியாக வேடமிட்டுக் கொள்வது ஒரு விதமான உளவியல் சமப்படுத்தலாகவே தெரிகிறது. அவர்கள் சாதிஇந்து இறப்பு வீட்டில் ஆட்டத்தின் போது சுதந்திரமாகப் பேசிக்கொள்ளலாம், பாடலாம், மதுவருந்தலாம், உண்ணலாம். ராஜாவாகவும், ராணியாகவும் காட்டிக் கொள்ளலாம். கட்டுப்பாடுகள் குறைவு. இயல்பான வாழ்வில் அப்படி எதையும் காட்டிக் கொள்ள முடியாது.

அடுத்தடுத்த தடைகள் தரும் சோர்வுகளை வென்று படிப்பது தலித்துகளுக்குச் சவாலான காரியம். சமூகத்தில் நிலமற்று இருப்பதன் சிரமங்களை மற்றவர்களை விட தலித்துகள் அதிகமாக உணர்ந்திருக்கிறார்கள். கலைத்தொழில் செய்யும் தலித்துகளின் வாழ்வெளிகள் திட்டமிட்டே சுருக்கப்படிகின்றன. போதைப்பழக்கத்தில் இருந்து விடுபடமுடியால் தொழிலிலும் வளர்ச்சி பெறாமல் தட்டையாக வாழ்ந்து மடிந்துபோன கலைஞர்களிடம் அடுத்த தலைமுறைகள் பெறுவதற்கு ஒன்றுமில்லை. ஓர் ஆட்டக்கலைஞனின் பயணத்தில் எடுத்துக்கொள்ள நிறைய இருக்கின்றன. தொழிலில் இருந்து விடுபடுதலும் இடம் பெயர்தலும் சாதிய விடுதலையில் முக்கியமானவை. அதை சென்றாயப்பெருமாள் செய்து காட்டியிருக்கிறார். இப்போது அவர் ஆட்டக் கலைஞர் அல்ல. அவரது வாழ்விடம் ஊரின் ஒதுக்குப்புறமல்ல. ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். இது தான் அடக்குமுறையில் இருந்து விடுபடுதல். கலைத்தொழில் செய்கிறவர்கள் இப்படி படித்து பேராசிரியர்கள் ஆகிவிட்டால் கலைத்தொழில் அழிந்துவிடுமே என அங்கலாய்ப்பவர்கள் மட்டை ஆட்டம் ஆடி கலைத்தொழிலைக் காப்பாற்றுவதில் நமக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.

புலிப்பால் நாவினால் சுட்ட வடு எழுதிய கலிய பெருமாள் ஓய்வு பெற்ற வரலாற்றுப் பேராசிரியர். திருவாரூரில் வசித்துவரும் அவர் தலித்திய வரலாற்று ஆய்வுகளில் குறிப்பிடத் தகுந்த பங்களிப்பினைச் செய்து வருகிறார். ‘புலிப்பால்தலித் தன்வரலாறாகவும் தான் வாழ்ந்த காலத்தின் சமூக வரலாறாகவும் அமைந்திருக்கிறது. ஒன்றுபட்ட பழைய தஞ்சையின் கிராமங்களின் நிலை, திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம், காங்கிரஸ் கட்சியின் பண்ணையார்கள், மக்களின் அன்றாட வாழ்வில் நிலத்தின் வகிபாகம் ஆகியவற்றை விவரிக்கிறது. சமூக அமைப்பின் எல்லாத் தளங்களிலும் தலித் புறக்கணிக்க முடியாத சக்தியாக மாறினால் மட்டுமே சாதிய விடுதலை பெற முடியும் என்கிறார் கலியபெருமாள். படிக்கிற போது இருந்த பாகுபாடுகளை பாகுபாடு எனத் தெரியாமலேயே வாழ்ந்து கடந்த கலியபெருமாள் தது வளரிளம் பருவத்தில் பாகுபாட்டின் நோக்கத்தை அறிந்த போது அது பற்றி பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை.

சனாதனம் தான் தலித்துகளின் எதிரி. சனாதனம் சொல்லும் புனிதம், கடவுள், சாஸ்திரங்கள், வருணம் ஆகியவை தான் அழிக்கப்பட வேண்டியவை. இந்தியாவில் வலியுறுத்தப்படும் அறம் சனாதனத்திற்குப் பலனளிப்பதே அன்றி அனைவருக்குமான அறம் அல்ல. அனைவருக்கும் பொதுவானது என்று எதுவுமில்லை. சாதியைக் காப்பாற்றுவதற்குதனித்தனிகள்’ தான் ஏற்றவை. இரட்டைக் குவளை, இரட்டைத் தண்ணீர்த் தொட்டி, இரண்டைக் கோயில், இரட்டைச் சுடுகாடு என்ற அமைப்பு இயல்பானதல்ல. சனாதனத்தின் விருப்பத்தின் பேரில் உருவாக்கப்பட்டது. தனித்தனியான பண்பாடுகள் கொண்ட சமூக அமைப்பில் தனக்கான அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கு ஏராளமான கதைகள் உருவாக்கப்பட்டன. அந்தக் கதைகள் சமூகத்தின் இரண்டு பக்கங்களை விவரித்தன. ஒரு பக்கம் புனிதமாகவும் இன்னொரு பக்கம் இழிவாகவும் சித்திரிக்கப்பட்டன. கதைகளை உருவாக்கியவர்கள் புனிதத்தின் பக்கம் தமக்கானதாக நிறுவினார். இன்னொரு பக்கம் இழிவு என்பது உருவாக்கப்படாமலே உருவானது. மொத்தத்தில் புனிதமும் இழிவும் இங்கு உருவாக்கப்பட்ட கற்பிதங்கள் தான் என்பதை நூல் இயல்பாக போகிற போக்கில் எடுத்துக்காட்டுகிறது. சனாதனத்தைப் பாதுகாப்பதில் ஆண்களை விட பெண்களே முனைப்பாக இருக்கிறார்கள் என்பதைத் தனது அனுபவத்தின் வாயிலாக விவரிக்கிறார் ஆசிரியர்

கழிவிரக்கம், புலம்புதல் வகை விபத்து எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்கிற தெளிவில் புனைவின் சாயல் கொஞ்சமும் கலந்து விடாதபடி, அதே சமயம் சுறுசுறுப்பான மொழியில் தன் வாழ்வை எழுதிப் பார்த்த பிரதியாக, மிகச் சிக்கலான பிரச்சினையை மிகக் குறுகிய நேரத்தில், நேர்த்தியாக, தான் விரும்பியது போலவே பேசி முடிக்கும் ஒரு திறமையான சமரசப் பேச்சுவார்த்தைக்காரனுக்கேயுரிய நெழிவு சுழிவுகளோடு அமைந்திருக்கிறது திருக்குமார் கணேசனின் கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் - சாதியினார் சுட்ட வடுஎன்கிற நூல். இதில் இருபத்தாறு சம்பவங்கள் அல்லது அனுபவங்கள் தொகுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.

இயல்பாகவே அன்யோன்யமாக பழகும் இரண்டு சிறுவர்களுள் ஒருவனாக இருக்கும் அல்தலித் சிறுவன், வயது கூடக்கூட தன்னைச் சாதிக்குள் நிலை நிறுத்திக் கொள்ளும் வழமை. சாதி ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படும் நுட்பம் விவரிக்கப்பட்டிருக்கும் இடம் சாதி உருவாக்கத்தில் குடும்பத்தின் பங்களிப்பைப் புலப்படுத்துகிறது. சாதியின் அமைப்பு தரும் அடையாளத்தை விரும்புகிற ஏற்றுக்கொள்ளும் மனநிலை தான் எல்லாருக்குள்ளும் இருந்து வினையாற்றுகிறது.

பொதுச்சமூகத்தின் மேன்மைக்கு ஒரு தலித் எவ்வளவு தான் வேலை செய்தாலும் அவனால் பயன்பெற்ற பொதுச்சமூகம் அவனை பொதுச்சமூகத்தின் கூறாகப் பார்க்க மறுத்து தலித்தாகவே பார்க்கிறது. தலித் ஒரு பொதுச் சமூகத்தின் அங்கமாக மாறிவிடக் கூடாது என்பதில் சாதி இந்துகள் அதீத கவனம் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். பொதுச் சமூகத்தை மையமிட்டுக் குவிந்திருக்கும் அரசியல், பொருளாதார லாபங்களை பகிர்ந்துகொள்ள சாதிஇந்துகள் விரும்புவதில்லை. அதற்கான இடைவெளியை பராமரிப்பதற்கு அவர்களுக்குச் சாதி தேவையாக இருப்பதைத் திருக்குமார் கணேசன் தன் அனுபவங்கள் வாயிலாக விளக்குவது சமகால சாதியின் கெட்டித்தன்மையை புரிந்துகொள்ள துணைசெய்கின்றன. வகுப்பறையில் தலித் மாணவர்கள் மீதான அல்தலித் ஆசிரியர்களின் உளவியல் தாக்குதல் எப்படி திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிறது என்பதையும், ஒரு வேலை அல்லது தேவையின் பொருட்டு பொதுச்சமூகம் தருகிற அதே பங்களிப்பைத் தலித்துகள் தந்த போதும் பங்களிப்பின் பயனை பங்கீடு செய்வதில் தலித்துகள் வஞ்சிக்கப்படுதலையும் நூல் விவரித்திருக்கிறது. விடுதலைக்குப் பிறகான இந்தியாவில் அரசியலமைப்பு வழங்கிய வாய்ப்பினைப் பயன்படுத்தி முன்னேறும் தலித்துகளுக்கான தடைகள் உருவாக்கப்படும் விதங்களைப் பேசுவதாக அமைந்திருக்கும் இந்தப் பகுதி தலித்துகளின் அரசியலில் புரிதலில் ஓர்மையை ஏற்படுத்தலாம்.

சராசரி தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்குக் கூட பதற்றப்படும் படியான மனநிலையை தலித்துகளிடம் உருவாக்கி, அதை உயிர்ப்போடு தலைமுறைகளுக்குக் கடத்தி வரும் அல்தலித் மனோபாவம். பள்ளிக்கூடத்தில் தன் வீட்டுப்பிள்ளை தலித் வீட்டு பிள்ளையுடன் எவ்வளவு அணுக்கமாக இருந்தாலும் வீடு, தெரு என்று வருகிறபோது தலித் பிள்ளைகளிடமே அவர்களின் எல்லைகளை நுணுக்கமாக வரையறை செய்தல். வகுப்பில் புதிய மாணவர்களோடு அறிமுகமாகுதல் என்ற பெயரில் ஊர், தெரு, குலசாமி கேட்டு சாதியைக் கண்டுபிடிக்க எத்தனிக்கும் அல்தலித் ஆசிரியர்களின் விஞ்ஞான அறிவு’.

ஒரு தலித் கல்லூரிக்குள் நுழைந்து சாதியின் உண்மையான குணத்தை புரியத் தொடங்கி, அதுவரை தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து யோசிக்கத் தொடங்கும் தருணத்தில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட விஷயங்களுக்காக தலித் முத்திரை குத்தப்படுதல். ‘அழகு என்கிற கற்பிதத்தை தலித் பெண்களிடம் இருந்து அப்புறப்படுத்தி வைக்கும் அல்தலித்தின் ஒடுக்கல். தலையில் எண்ணெய் ஈரம் இல்லாதவர்கள் தலித்தாகவே இருக்கக் கூடும் என்கிற புரிதல் பிழை. தலித்துக்கு முன்னாலேயே மற்றொரு தலித்தை இழிநிலையில் வைத்து தலித் எவ்வளவு படித்தாலும் பொதுச்சமூக நீரோட்டத்தில் பங்கெடுக்க முடியாது; கூடாது என்பதை உணர்த்திக் கொண்டே இருத்தல். தலித்துகளின் திறமைகளை அளவீடு செய்ய சாதியை வரையறையாக கொள்ளுதல். அழகாய் இல்லை எனக் கருதும் பெண்களை எல்லாம் தலித் என்று முடிவு செய்தல்.

தலித் தன் சாதியின் நியாயங்களைப் பேச வரும்போது மட்டும் ஜனநாயகவாதியாகத் தம்மை வரிந்து கொண்டு பொதுமை பேசும் அல்தலித்துகளின் ஆதிக்கத் தந்திரம். தலித் தலைவர்கள் பொதுச் சமூகத்திற்கான அரசியலைப் பேசி வளர்ந்தாலும் அவர்கள் மீதான சாதியப் பார்வையை வெறுப்புணர்வாக மடைமாற்றும் அல்தலித்துகளின் அரசியல் போக்கு.

போலி முற்போக்கு அல்தலித்துகளின் சந்தர்ப்பப் பிழைப்புவாதத்திற்குப் பலியாகும் தலித் அறிவுஜீவிகள். அல்தலித்தாகப் பிறந்து தலித் பெண்ணோடு மணஉறவு கொள்வோரை அல்தலித் சமூகஒழுங்குகளில் இருந்து ஒதுக்கி வைத்து இழிவு செய்தல். தலித்துகளிடம் காப்பி அடித்து தன்னை அறிவு ஜீவியாகக் காட்டிக் கொள்ளும் அல்தலித்துகளின் அறிவுத்திருட்டு. தலித் ஆண், அல்தலித் பெண்ணுடனான காதலை ஏற்றுக்கொள்ளாமைக்கு அப்பெண்னின் சாதி வல்லாதிக்க பயம் மட்டுமே காரணமாக இருக்கிறது. அல்தலித் பெண், தலித் ஆணுடனான காதல் முறிவுக்கு அவ்வாணின் சாதியோடு அவரது குடும்பமும் தெருவும் காரணமாக அமைந்திருத்தல். தலித் அடையாளத்தின் மீது பிடிப்பு உள்ளவர்களைக் கூட அந்த அடையாளத்தில் இருந்து அப்புறப்படுத்தும் அல்தலித்துகளின் வேலைத் திட்டம். அல்தலித்துகள் தலித்துகள் மீது எவ்வளவு பெரிய குற்றமிழைத்தாலும் சட்டம் வழங்கும் தண்டனையிலிருந்து அவர்களைத் தப்பிக்கச் செய்யும் அரசப் பிரதிநிதிகளின் பங்களிப்பு.

தலித்துகளுக்கு வழங்கப்படும் அறிவுரைகளை எச்சரிக்கைகளாகவே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுகிற அல்தலித்துகளின் திட்டமிடல். ஒருவனின் சிகை அலங்காரத்தை வைத்தே அவன் குற்றவாளியாகவும் தலித்தாகவும் இருப்பான் என்கிற போலீசாரின் பொதுப்புத்தி. அளவற்ற அடக்குமுறைகள் இருந்தாலும் தலித்துகள் காலந்தோறும் சரியான எதிர்ப்பைக் காட்டிய படியே தான் வந்திருக்கிறார்கள். திராவிடக் கட்சிகளுக்குத் தேவைப்படும் போது பயன்கொள்ளப்பட்ட, தேவைப்படாதபோது மட்டுப்பட்ட தலித்துகளின் போர்க்குணம். தலித்துகள் தம்மீதான அடக்குமுறைகளை முற்றாக வீழ்த்த பொருளாதாரத் தன்னிறைவு, அரசியல் விழிப்புணர்வு என்பதையும் தாண்டி, தான் வசிக்கும் ஊரில் பெரும்பான்மையாகுதலின் அவசியம் ஆகியவற்றை நூல் விவரித்து இருக்கிறது.

நாடகக் காதல்’, தலித்துகளின் உயர்வு நாங்கள் போட்ட பிச்சை’, அறிவு, அழகு, வீரம் ஆகியவற்றுக்கும் தலித்துகளுக்கும் தொடர்பில்லை என்று தமிழ் நாட்டின் சாதியவாத மற்றும் திராவிடக் கட்சியினார் பேசிக்கொண்டிருக்கும் சமகாலச் சூழலில் அவர்களுக்கெல்லாம் அவர்களிடமிருந்தே பதில்களை எடுத்து அவர்களிடம் கொடுத்து அவர்களின் புரிதல் போதாமையை உணர்த்துவதே இந்நூலின் தனித்துவம் எனலாம். அந்த வகையில் தலித் தன் வரலாறு பற்றிய   எடுத்துரைப்பியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான நூலும் கூட.