Friday 21 January 2022

ஏலாக்குறிச்சி செல்லும் வழி / Elakurichi Bus Rote

 

ஏலாக்குறிச்சி செல்லும் வழி

ஏலாக்குறிச்சி ஓர் அழகான ஊர். திருக்காவலூர் என்பது அதன் பழைய பெயர்.  கத்தோலிக்கக் கிறித்தவர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் சென்று வரலாம். பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் இருந்து தமிழகம் வந்த வீரமாமுனிவர் பணியாற்றிய பெருமைகொண்டது இவ்வூரில் அமைந்திருக்கும் அடைக்கல மாதா ஆலயம். இங்கிருந்து தான் அவர் தேம்பாவணி, கித்தேரியம்மாள் அம்மானை, திருக்காவலூர்க் கலம்பகம் முதலியவற்றை எழுதியதாகச் சொல்லப்படுகிறது.

மிக அழகிய வேலைப்பாடுடன் கூட ஆலயக் கட்டுமானம் பிரமிக்க வைக்கிறது. அடைக்கல மாதாவின் சுருபம் சிரித்த முகத்துடன் தமிழ்நாட்டுப் பெண்களின் முகத்தை ஒத்திருப்பதை ஐரோப்பியர்கள் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே ‘மண்ணுக்கேற்ற மதம்’ என்கிற புரிதலில் பணியாற்றியதன் அடையாளமாகக் கொள்ளலாம்.

ஆலயத்தைச் சுற்றி இருக்கும் வயல்கள் எப்போதும் ஆலயத்தை குளுமையாகவே வைத்திருக்கின்றன. ஆழ்ந்து தியானம் செய்வதற்கு மிகவும் ஏற்ற இடம். திருச்சியில் இருந்து 68 கிலோ மீட்டர். திருச்சி – கல்லணை – திருவையாறு சென்று  அரியலூர் சாலையில் சென்றால் 10 கி.மீ துரத்தில் திருமானூர் வரும். அதில் இருந்து அரியலூர் சாலையிலேயே சென்றால் 2 கி.மீ. தூரம் தாண்டி சாலையின் வலது புறம் ‘ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா’ என்னும் ஆர்ச் இருக்கும். அதனுள் நுழைந்து சென்றால் 20 நிமிடத்தில் ஆலயத்தை அடையலாம். வழி நெடுக காவிரியின் அழகையும் வாழை, நெல், வெற்றிலையின் பசுமை வெளிகளையும் கண்களுக்கு விருந்தாக்கலாம்.

-      ஞா.குருசாமி

……………………………