Tuesday 21 November 2023

புலவர் தோ. ஜம்புகுமாரன் அவர்கள் எழுதியுள்ள அவரது வாசிப்பு அனுபவம்

 

எனது 'தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்)' என்னும் நூலுக்கு சமணப் பேரறிஞர் புலவர் தோ. ஜம்புகுமாரன் அவர்கள் எழுதியுள்ள அவரது வாசிப்பு அனுபவம்

தோஜம்புகுமாரன்


அன்பிற்கினிய நண்பரீர்! ஆன்மநலம் விளைக! அரியவாம் நற்காட்சி பொலிக! தங்களின் அரிய படைப்பான தமிழிலக்கிய வரலாற்று நூலை இன்றுதான் வாசித்து முடித்தேன். 1970ஆம் ஆண்டு முதல் வெளிவந்த தமிழிலக்கிய நூல்களின் பெரும் பரப்பினை தங்களின் நுண்மாண் நுழைபுலன் என்னும் அளவுகோலைக் கொண்டு அளந்து காட்டி விட்டீர்கள். சிறுவர் இலக்கியம் தொடங்கி இணைய இலக்கியம் வரையிலான இலக்கியங்களை ஆய்ந்து அறிய தாங்கள் எடுத்துக்கொண்டுள்ள பேருழைப்பை நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக உள்ளது.

சமயங்கள் வளர்த்த இலக்கியங்களின் மதிப்பீடுகள் அனைத்தும் நடுநிலைப்பான்மையில் விருப்புவெறுப்பின்றி செய்திகளை அடுக்கிக்கொண்டே செல்லும் அழகும் தம்கருத்தை வலியுறுத்திக் கூறாமல் காலச்சூழலின் அழுத்தத்தை மேம்போக்காகச் சுட்டி காரணம் இவ்வாறு இருக்கலாம் என நாகரிகமாகச் சொல்லிச்செல்லும் தங்கள் திறப்பாட்டினை வியக்கிறேன். 1970க்குப்பிறகு தமிழ்புலத்தில் இத்தனை இலக்கியங்களா? இத்தனை எழுத்தாளர்களா? அது சரி. இத்தனையும் சேகரிக்க தங்களுக்கு எவ்வளவு காலம் ஆகியிருக்கும், நீங்கள் பட்ட பாடுகள் எவ்வளவு இருக்கும்? நினைத்துப்பார்க்கிறேன். இதற்கு முன் வெளிவந்துள்ள பேரறிஞர்கள் பலர் எழுதியுள்ள இலக்கிய வரலாறுகளினும் இந்நூலின் சொல்நடை உரைப்போக்கு முற்றிலும் வேறுபட்டுள்ளது. எல்லாவற்றினும் என்னை வியப்புற வைத்தது அதன் ஓட்டந்தான். சின்ன சின்ன வாக்கியங்களில் செய்திகளை அடுக்கிச் செல்லும் போது, நடைக்கு இறக்கை முளைத்துவிடும் போலும் போகும்போக்கில். தாங்கள் ஆங்காங்கே தூவிச்சென்றுள்ள புதுவதாகப் புனைந்தாளும் சொற்றொடர் அமைப்புகள் தங்களின் மொழிப்புலமையை உயர்த்திக்காட்டுகின்றன.(.டு) ஆண்மையவாத சிந்தனாவெளி-சமுதாய ஒழுக்கவியல் கற்பிதங்களைச் சிதைவிற்குள்ளாக்குதல் -போன்றனவும், அரிய சொல்வகைகளாக, காத்திரம் - (இதை நிறைய இடங்களில் பயன்படுத்தியுள்ளீர்கள்) இறுக்கம் - பொதுவெளி போல்வன. நிற்க,

சமணம்சார்ந்த இலக்கிய செய்திகளை மற்ற சமயச்செய்திகளை மொழிவது போலவே கூடவும் குறைவுமின்றி அளவோடு பேசியுள்ளீர்கள். அடியேனைப் பற்றி, காவியப்படைப்புகள் பற்றி விளக்கமாகவும் சுருக்கமாகவும் சொல்லியுள்ளீர்கள். நன்றி! என்னுடைய படைப்புகளில் நான் பிரதானமாகக் கருதுவது தமிழ்நிலத்தில் வழிபாட்டிலுள்ள சமண ஆலயங்களைப் பற்றிப் பாடியுள்ள "தமிழக ஜைன க்ஷேத்திரமாலை"என்னும்நூலே! 134ஆலயங்களின் மூலவர்களைப் பற்றிய பாடல்கள். அனைத்தும் பதிகங்களே. இதை சமண தேவாரம் என்று சொல்லலாம். இது தங்களின் பார்வைக்குக்கிட்டாமற் போனது ஏனோ தெரியவில்லை.

கவிதை நூல்களையும் ஆசிரியர்களையும் பற்றி ஒன்று விடாமல் பட்டியலிட்டுள்ளீர்கள். இன்று எல்லோரையும் ஆட்டிக்கொண்டு இருக்கும் - அசுரவளர்ச்சி அடைந்துவருகின்ற இணையஞ் சார் இலக்கியவகைகளையும் விவரித்துள்ளீர்கள். இந்த நூலைநான் இன்று படித்துமுடித்த போது, தங்களின் மேதா விலாசமும், நினைவாற்றலும், மொழி ஆளுமையும் என் மனக்கண்முன் இமயம்போல் ஓங்கிநிற்கிறது. தங்களின் இந்த அரிய வரலாற்றுநூல் பின்னர் எழுதவரும் ஆசிரியன்மார்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்நூல் கல்லூரிகளில் பாடநூலாக ஏற்கப்படும் காலம் விரைவில்வரும் என்பதிலும் ஐயமில்லை. தங்களின் இத்தகு ஆக்கப்பணி மேலும்மேலும் வளர்ந்தோங்கி இசை பெருகவென வாழ்த்தி மகிழ்கிறேன். உடல்நலமின்றி இருந்தமையால் என் எண்ணங்களைத் தெரிவிக்கத் தாமதமாயிற்று. பொறுத்தருள்க! தங்கள் நூலை வாசிக்கவும் தங்களைப் பற்றி அறிந்துகொள்ளவுமான ஒரு வாய்ப்பளித்தமைக்கு நன்றி! வணக்கம் வாழ்க வளமுடன்!

No comments: