Skip to main content

அட்டைப்படத்தில் ஆம்ஸ்ட்ராங்

அட்டைப்படத்தில் ஆம்ஸ்ட்ராங்

உயிர் எழுத்து அட்டைப் படத்திற்கு எப்போதுமே ஒரு சிறப்பு இருக்கும். பெரும்பாலும் அன்றைய மாதத்தில் பேசுபொருளாக இருக்கும் அரசியல், சமூக ளுமைகளின் படங்களைத் தாங்கி வரும். உதாரணமாக, இரோம் ஷர்மிளா தேசிய அளவில் கவனம் பெறத் தொடங்கிய நேரத்தில் அவரது படம் தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் முதன்முதலில் உயிர் எழுத்தில் தான் அட்டைப்படமாக வந்தது. அதன் வழி பலர் இரோம் ஷர்மிளா பற்றி அறியலானார்கள்.

ஒருமுறை பிரபஞ்சன் சிகரெட் புகைப்பது போன்ற அட்டைப்படம் உயிர் எழுத்தில் வந்தது. அது தன்னொழுக்கத்தில் கனிந்து சிறந்த சில அறிவுஜீவிகளிடம் புகைச்சலை உண்டாக்கியது. அதற்காக அவர்கள் கண்டபடி அபிநயம் பிடித்து விதவிதமான அடவுகளில் ஆடி முடித்தார்கள். இப்படி உயிர் எழுத்து அட்டைப்படங்கள் குறித்து நேர்/எதிர் மறையாக நிறைய சொல்ல முடியும். இதுவரை வெளிவந்த அட்டைப் படங்களின் வரிசையை மையப்படுத்தி அவை பேசிய அரசியல் குறித்தே விரிவான கட்டுரையை எழுதலாம். அந்த வகையில் உயிர் எழுத்து பாராட்டப்பட வேண்டிய சிறு பத்திரிகை. நிற்க. 

ரஷ்யாவில் சோசலிச யதார்த்த வாதம் என்ற கோட்பாட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு தாங்கள் கருதுகிறதும் தமக்கு லாபம் தருகிறதுமான ஒரு வித அரசியலைப் பற்றி மட்டுமே பேசுவதெல்லாம் முற்போக்கு என்றும் மற்றவைகளைப் பிற்போக்கு என்றும் ஸ்டாலின் காலத்தில் முத்திரையிட்டனர். இந்த ஜிகினா வேலையை அப்படியே இன்றைய உள்ளூர் அரசியல் சூழலில் சமூகநீதியோடும் இணைத்துப் பேசலாம். அந்த அளவுக்கு அந்தமுற்போக்கும்இந்தசமூகநீதியும் ஒத்துப் போகிறது. அவர்கள் பேசுவது மட்டுமே சமூகநீதியாகவும் எதிர்த்தரப்பார் சமூகநீதியைப் பேசினாலுமே அதை வேண்டுமென்றே குதர்க்கமாகப் புரிந்து கொள்ளும்படியான சூழலை மக்களுக்கு சமூகநீதிக் குத்தகைதாரர்கள் உருவாக்கி வருகிறார்கள். அதன் விளைவாகத்தான் தொடர்ந்து உண்மையான சமூகநீதி பற்றி பேசிவந்த ஆர்ம்ஸ்ட்ராங்கை ரவுடி என்று முத்திரை குத்தினார்கள். இதே மாதிரியான ஒரு இறப்பு அந்தப் பக்கம் நிகழ்ந்திருக்குமானால் அவரை 'சமூகநீதி' காவலராக, இனமானத் தலைவராக அவர்கள் ஆக்கியிருக்கக் கூடும். அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களை யார் விமர்சித்தாலும் அவர்களைப் பொதுச்சமூகத்தில் இருந்து விலக்கும்படியான அடையாளத்தை ஒட்டி விடுவார்கள். அவர்களின் வரலாறு அப்படி.

    இதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட ஊடகங்களில் ஒரு சில மட்டும் ஆர்ம்ஸ்ட்ராங்கின் சமூகப் பணியைச் சரியாக  மதிப்பீடு செய்து எழுதின. ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் அவர்தம் சமூகப்பணிகள் குறித்துப் புள்ளிவிவரமாகப் பேசினர். இதனால் சமூகநீதிக் குத்தகைதாரர்களின் 'ரவுடி' அவதூறு பிசுபிசுத்துப் போனது.

இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் தான் ஆம்ஸ்ட்ராங் படத்தை போதிமுரசு அட்டையில் வெளியிட்டது. ஆம்ஸ்ட்ராங் பௌத்தச் செயல்பாட்டாளராக இருந்தமையால் பௌத்தக் கருத்தியலைப் பேசும் போதிமுரசு அவரைச் சிறப்பித்திருக்கலாம். அப்படி ஒரு தொடர்பு உயிர் எழுத்திற்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இல்லை. ஆனாலும் அவரை உயிர் எழுத்து (2024 ஆகஸ்ட்) அட்டைப்படமாக வைத்துத்திருக்கிறது. சிறு பத்திரிகை உலகில் இது போன்ற நிகழ்வுகள் அபூர்வமானது. உயிர் எழுத்து-க்குப் பாராட்டுக்கள். 

குறிப்பு : இந்தப் பதிவு வெளியிடப்பட்ட பின் வெளியான நீலம் இதழிலும் ஆம்ஸ்ட்ராங் அட்டைப்படமாக வைக்கப்பட்டிருந்தார். 

......................

Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

  ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து…. ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன. இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம்...

ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ்: தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சி

ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சிவில் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவர் ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் (Hosea Lorenzo Williams). போராட்டக் களத்தில் வெகுஜன உளவியலின் உருவாக்கத் தேவையை நன்கு அறிந்திருந்த அவர் , சமகாலத் தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ளப் பங்களித்து இருக்கிறார் . சர்வதேசிய அளவில் சிவில் உரிமைப் போராட்டக் களத்தின் எதார்த்த முகமாக இன்று அடையாளம் காணப்பட்டிருக்கும் வில்லியம்ஸ் ஜனநாயகம் , அகிம்சை , அரச வன்முறை , ஊடக அரசியல் , வர்க்கம் , இனம் ஆகியவற்றின் சந்திப்பில் உருவாகும் பெரியதொரு அரசியல் கேள்வியை அவர் காலத்தில் தம் வாழ்வனுபவத்தின் வழி எழுப்பியிருந்தார் . தேர்தல் பாதையில் அரசமைக்கும் நாடுகளுக்கான கேள்வி அது . ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் மதநீதியும் அரசியலும் வில்லியம்ஸ் 1926 ஜனவரி 5 ஆம் தேதி , அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் பிறந்தவர் . ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு கல்வி , வேலை , வீடு , வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்த ஜிம் க்ரோ (Jim Crow ) சட்டங்கள் அமலில் இருந்தபோது இளமைப் பருவத்தைக் கடந்தவர் . இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவத்...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...