Skip to main content

அட்டைப்படத்தில் ஆம்ஸ்ட்ராங்

அட்டைப்படத்தில் ஆம்ஸ்ட்ராங்

உயிர் எழுத்து அட்டைப் படத்திற்கு எப்போதுமே ஒரு சிறப்பு இருக்கும். பெரும்பாலும் அன்றைய மாதத்தில் பேசுபொருளாக இருக்கும் அரசியல், சமூக ளுமைகளின் படங்களைத் தாங்கி வரும். உதாரணமாக, இரோம் ஷர்மிளா தேசிய அளவில் கவனம் பெறத் தொடங்கிய நேரத்தில் அவரது படம் தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் முதன்முதலில் உயிர் எழுத்தில் தான் அட்டைப்படமாக வந்தது. அதன் வழி பலர் இரோம் ஷர்மிளா பற்றி அறியலானார்கள்.

ஒருமுறை பிரபஞ்சன் சிகரெட் புகைப்பது போன்ற அட்டைப்படம் உயிர் எழுத்தில் வந்தது. அது தன்னொழுக்கத்தில் கனிந்து சிறந்த சில அறிவுஜீவிகளிடம் புகைச்சலை உண்டாக்கியது. அதற்காக அவர்கள் கண்டபடி அபிநயம் பிடித்து விதவிதமான அடவுகளில் ஆடி முடித்தார்கள். இப்படி உயிர் எழுத்து அட்டைப்படங்கள் குறித்து நேர்/எதிர் மறையாக நிறைய சொல்ல முடியும். இதுவரை வெளிவந்த அட்டைப் படங்களின் வரிசையை மையப்படுத்தி அவை பேசிய அரசியல் குறித்தே விரிவான கட்டுரையை எழுதலாம். அந்த வகையில் உயிர் எழுத்து பாராட்டப்பட வேண்டிய சிறு பத்திரிகை. நிற்க. 

ரஷ்யாவில் சோசலிச யதார்த்த வாதம் என்ற கோட்பாட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு தாங்கள் கருதுகிறதும் தமக்கு லாபம் தருகிறதுமான ஒரு வித அரசியலைப் பற்றி மட்டுமே பேசுவதெல்லாம் முற்போக்கு என்றும் மற்றவைகளைப் பிற்போக்கு என்றும் ஸ்டாலின் காலத்தில் முத்திரையிட்டனர். இந்த ஜிகினா வேலையை அப்படியே இன்றைய உள்ளூர் அரசியல் சூழலில் சமூகநீதியோடும் இணைத்துப் பேசலாம். அந்த அளவுக்கு அந்தமுற்போக்கும்இந்தசமூகநீதியும் ஒத்துப் போகிறது. அவர்கள் பேசுவது மட்டுமே சமூகநீதியாகவும் எதிர்த்தரப்பார் சமூகநீதியைப் பேசினாலுமே அதை வேண்டுமென்றே குதர்க்கமாகப் புரிந்து கொள்ளும்படியான சூழலை மக்களுக்கு சமூகநீதிக் குத்தகைதாரர்கள் உருவாக்கி வருகிறார்கள். அதன் விளைவாகத்தான் தொடர்ந்து உண்மையான சமூகநீதி பற்றி பேசிவந்த ஆர்ம்ஸ்ட்ராங்கை ரவுடி என்று முத்திரை குத்தினார்கள். இதே மாதிரியான ஒரு இறப்பு அந்தப் பக்கம் நிகழ்ந்திருக்குமானால் அவரை 'சமூகநீதி' காவலராக, இனமானத் தலைவராக அவர்கள் ஆக்கியிருக்கக் கூடும். அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களை யார் விமர்சித்தாலும் அவர்களைப் பொதுச்சமூகத்தில் இருந்து விலக்கும்படியான அடையாளத்தை ஒட்டி விடுவார்கள். அவர்களின் வரலாறு அப்படி.

    இதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட ஊடகங்களில் ஒரு சில மட்டும் ஆர்ம்ஸ்ட்ராங்கின் சமூகப் பணியைச் சரியாக  மதிப்பீடு செய்து எழுதின. ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் அவர்தம் சமூகப்பணிகள் குறித்துப் புள்ளிவிவரமாகப் பேசினர். இதனால் சமூகநீதிக் குத்தகைதாரர்களின் 'ரவுடி' அவதூறு பிசுபிசுத்துப் போனது.

இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் தான் ஆம்ஸ்ட்ராங் படத்தை போதிமுரசு அட்டையில் வெளியிட்டது. ஆம்ஸ்ட்ராங் பௌத்தச் செயல்பாட்டாளராக இருந்தமையால் பௌத்தக் கருத்தியலைப் பேசும் போதிமுரசு அவரைச் சிறப்பித்திருக்கலாம். அப்படி ஒரு தொடர்பு உயிர் எழுத்திற்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இல்லை. ஆனாலும் அவரை உயிர் எழுத்து (2024 ஆகஸ்ட்) அட்டைப்படமாக வைத்துத்திருக்கிறது. சிறு பத்திரிகை உலகில் இது போன்ற நிகழ்வுகள் அபூர்வமானது. உயிர் எழுத்து-க்குப் பாராட்டுக்கள். 

குறிப்பு : இந்தப் பதிவு வெளியிடப்பட்ட பின் வெளியான நீலம் இதழிலும் ஆம்ஸ்ட்ராங் அட்டைப்படமாக வைக்கப்பட்டிருந்தார். 

......................

Comments

Popular posts from this blog

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள்

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள் ஞா. குருசாமி, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர் ரோகித் வெமுலா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்ணைப் பெற்று மருத்துவப் படிப்பை எதிர்நோக்கி இருந்த அனிதா என ஆராய்ச்சிலும் கல்வியிலும் தனித்திறன் பெற்ற திறமைசாலிகளை அரசு எந்திரம் குறிவைத்து தற்கொலைக்கு உள்ளாக்கும் போக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த தேசத்தில் வருணாசிரமத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் சதிக்கொடுமை ஒன்றும் புதியதல்ல. ஏகலைவர் காலம் தொடங்கி நடத்து வருகிறது. ஏகலைவர், நந்தர் என்னும் மிக நீண்ட வரிசையில் இன்றைக்கு அனிதாவை இழந்திருக்கிறது இந்த சமுதாயம் என்று மிகவும் மொன்னையான சமாதானத்தைத் தற்காலிகமாகக் கூடத் தேடிக்கொள்ள மனம் மறுக்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் முக்கியக் கவனம் பெற்ற நிகழ்வு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரிய போராட்டம். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் ஒருங்கிணைந்து களம் கண்டனர். அது தமிழர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போய் உறங்கிக் கிடந்த வீரத்தின் வெளிப்பாடு என்றெல்லாம் பேசப்பட்டத...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...