தத்துவங்கள் குறித்த உரையரங்கம்
கோவை பீளமேட்டில் ‘பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வு மையம்’ தத்துவ அறிமுகக் கூட்டம் ஒன்றை 2026 மே 29 அன்று நடத்தியது. அதன் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தார். பெரியாரியம் குறித்து கு.ராமகிருஷ்ணன் பேசினார். இணைய வழியில் கலந்துகொண்ட தியாகு மார்க்கியம் குறித்துப் பேசினர். நான் அம்பேத்கரியம் குறித்துப் பேசினேன். அம்பேத்கரை எப்படி வாசிக்கத் தொடங்குவது என்பதில் தொடங்கி கூட்டுச் சிந்தனையில் அம்பேத்கரின் அவசியத்தை வலியுறுத்துவதாக எனது உரையை அமைத்துக் கொண்டேன். மனநிறைவான நிகழ்வாக அமைந்தது.
சிறிய அளவிலான கூட்டம் என்றாலும் ஒருசிலரைத் தவிர அனைவரும் பார்வையற்றவர்களே. அவர்களோடு பேசிய தருணங்கள் நாம் பார்த்திராத உலகத்தைக் காட்டின. ஒருவர் ‘மாற்றுத்திறனில் 21 வகை உள்ளதாக அரசு வரையறுத்து இருக்கிறது. எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கருதுவது மாற வேண்டும்’ என்றார். ‘நடக்க இயலாதவர்களையும் எங்களையும் எப்படி ஒன்றாகக் கருத முடியும்’ என்ற கேள்வியில் உறுதியாக இருந்தார். ‘நடக்க இயலாதவர் தன்னால் இயல்பாகத் தனித்துச் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் செய்து கொள்ள முடியும். எங்களால் துணையாள் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. என்னைப் போலவே எனது மனைவியும் பார்வையற்றவர். எங்கள் வீட்டுக்குள் பாம்பு வந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? நடக்க இயலாதவரால் குறைந்த பட்சம் ஒதுங்கிக்கொள்ளவோ, சத்தமிட்டு உதவி தேடிக்கொள்ளவோ முடியும். அந்த நிலையில் எங்களை நினைத்துப் பாருங்களேன்!’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார். ‘21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு 4 விழுக்காடு என்று நீண்டகாலமாக இருந்துவரும் இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும்’ என்றார்.
பெரும்பாலும் அவர்கள் பார்வைத் திறன் கொண்டவர்களோடு போட்டியிட்டு படிப்பது, வேலை பெறுவது, தரமான புத்தகங்கள் பிரெய்லியில் கிடைக்காதது, பார்வைத்திறனுள்ள வாழ்க்கைத் துணைக்காகக் காத்திருப்பது என ஏராளமான துயரத்தோடு பிணைந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். படித்தவர்கள் பெரும்பாலும் கலை, இலக்கிய ஆசிரியர் பணியிலேயே அமர்கின்றனர். அதன் பிறகு அவர்கள் தங்களை அப்டேட் செய்துகொள்வதற்குப் புத்தகங்கள் கிடைப்பதில்லை. கிடைக்கும் ஒருசில ஆடியோ புத்தகங்களில் ழ, ல, ள, ற, ர, ண, ந, ன எழுத்துகளின் சரியான உச்சரிப்பு இல்லாததால் குழப்பம் ஏற்படுகிறது. இதெல்லாம் பார்வைத்திறனுள்ளவர்களுக்கு மிகச் சிறிய சாதாரண விசயங்கள். என்றாலும் அதைக்கூட பார்வையற்றவர்களுக்குச் செய்துகொடுக்க இங்கு நிருவாகக் காட்டமைப்போ, சமூகக் கட்டமைப்போ இல்லை என்பது தான் கொடுந்துயர். இது வளர்ந்தவர்களுக்கான பிரச்சினை என்றால், அதைவிடத் துயரமானதாக இருக்கிறது வளர்கின்றவர்களுக்கான பிரச்சினை.
பார்வையற்றோருக்கான சிறப்புப்
பள்ளிகள் தொலைதூரத்தில் உள்ளதால் உள்ளூர் பள்ளியிலேயே சேர்க்கப்படும் பார்வையற்ற குழந்தைகளின்
அறிதிறன் பின்னடைவு எதிர்காலத்தில் அவர்களுக்கு மோசமான வாழ்க்கையைத் தான் தருகிறது. பார்வையுள்ள குழந்தைகளோடு பழகும்போது உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
இப்படியான நிலைமைக்குள் இருந்துதான் அவர்கள் பிழைக்க
வேண்டியுள்ளது.
.jpeg)



Comments