Skip to main content

நூல் அறிமுகம்

 

கே.என்.சிவராஜ பிள்ளையின் THE CHRONOLOGY OF THE EARLY TAMILS என்கிற நூல் பற்றிய குறிப்புகள்

ஞா.குருசாமி

கே.என்.சிவராச பிள்ளை தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் பொழுது எத்தகைய முன்னாய்வுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். தன்னுடைய ‘The Chronology of the Early Tamils’ நூலில் இலக்கிய வரலாற்றை எழுத முனைகிறவர்கள் என்னென்ன விசயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய நூலில் எவையெவை கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் விவரிக்கிறார். அதில்  குறிப்பாக மூன்று விஷயங்களைக் குறிப்பிடலாம். ஒன்று தொன்மம் குறித்த மறுப்பு, இரண்டு சொல் பயன்பாட்டு ஆய்வின் வழி காலத்தை உறுதி செய்தல், மூன்று காலத்தின் வரிசைப்படி வரலாற்றை எழுதுதல்.

அவர் தொன்மத்தை மறுத்தல் என்பதில் சங்கம் பற்றி இறையனார் களவியல் உரை தருகிற செய்திகளை மறுக்கிறார். அகத்தியர் பற்றி வழங்கிவரும் செய்திகளை முற்றாக மறுக்கிறார். அகத்தியர் பற்றிய செய்திகளும் சங்கம் பற்றிய செய்திகளும் உண்மைக்குப் புறம்பானவை. நம்ப முடியாதவையாக இருக்கின்றன என்பதை சான்றுகளோடு நிறுவுகிறார்.

நூலின் அட்டைப்படம்

 உந்து, ஆங்கு என்கிற இரண்டு சொற்கள் வழி காலத்தை வரையறை செய்ய முடியும் என்று நிறுவியிருக்கிறார். உந்து வினைமுற்று சொல். பெயரெச்சம் அல்ல. பலரால் அது பெயரெச்சம் என தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார். ஒரே பாடலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில்உந்து சொல் வந்து வினைமுற்றாக இருக்கும் போது, அந்த பாடலில் ஆங்கு என்ற இடைச்சொல்  வரும். அதுதான் பாட்டில் வரும் பல வினைமுற்று தொடர்களின் பொருளைத் தொகுத்துத் தரும். சங்க இலக்கியத்தில்ஆங்கு என்ற சொல்லை புரிந்து கொள்ளாமல் உந்து என்கிற வினைமுற்றுச் சொல்லை புரிந்து கொள்ள முடியாது என்கிறார் கே.என்.சிவராஜ பிள்ளை.

 மேலும் அவர் தொல்காப்பியர் உந்து வினைமுற்று சொல் பற்றி கூறவில்லை என்று குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்தில்உந்து என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்களாக மாங்குடி கிழார், ஒருசிறை பெரியனார், பரணர், கருவூர் கதப்பில்லை, புறத்திணை நன்னாகன், கோவூர்கிழார், மதுரை நக்கீரர் முதலியோர்களைக் குறிப்பிடுகிறார். இவர்களெல்லாம் உந்து என்கிற சொல்லை பயன்படுத்தி எழுதிய பாடல்கள் புறநானூற்றில் கிடைக்கின்றன. இப்புலவர்களைத் தொல்காப்பியர் காலத்துக்கு முந்தியவர்கள் எனக் குறிப்பிடும் கே.என். சிவராஜ பிள்ளை, உந்து என்னும் சொல் வழக்கு தொல்காப்பியர் காலத்தில் வழக்கொழிந்திருக்க வேண்டும், அல்லது இழிவழக்காக இருந்திருக்க வேண்டும் அல்லது தொல்காப்பியர் காலத்திற்கு பின்னால் வழக்கிற்கு வந்திருக்கலாம் என்கிறார். இதில் மூன்றாவது காரணம் ஏற்புடையதாக இல்லை. ஏற்றால் கே.என்.சிவராஜ பிள்ளையின் ஆய்வே முரணாகும் அபாயமிருக்கிறது.

 இலக்கிய வரலாற்றை எழுதுவதில் உள்ள சிக்கல்களாக 1. தலைமுறையை பகுப்பதில் உள்ள சிக்கல்,  2.காலவரையறையை முடிவு செய்வதில் உள்ள சிக்கல் என இரண்டு சிக்கல் பற்றிக் கூறும் அவர், அவற்றை எவ்வாறு வரையறை செய்வது என்பதை விளக்குகிறார். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு எழுதும் பொழுது ஓர் இலக்கிய வரலாறு உண்மையிலேயே வரலாறாக இருக்கும் அதில் உண்மைக்கு புறமான செய்திகளுக்கு இடம் இருக்காது. நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும் என்கிறார். நூல் ஆங்கிலத்தில் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்நூல் 1932 - இல் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கிறது. மொத்த பக்கம் 316. அன்றைய விலை ரூ 5/-

.................................



Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

  ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து…. ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன. இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம்...

ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ்: தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சி

ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சிவில் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவர் ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் (Hosea Lorenzo Williams). போராட்டக் களத்தில் வெகுஜன உளவியலின் உருவாக்கத் தேவையை நன்கு அறிந்திருந்த அவர் , சமகாலத் தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ளப் பங்களித்து இருக்கிறார் . சர்வதேசிய அளவில் சிவில் உரிமைப் போராட்டக் களத்தின் எதார்த்த முகமாக இன்று அடையாளம் காணப்பட்டிருக்கும் வில்லியம்ஸ் ஜனநாயகம் , அகிம்சை , அரச வன்முறை , ஊடக அரசியல் , வர்க்கம் , இனம் ஆகியவற்றின் சந்திப்பில் உருவாகும் பெரியதொரு அரசியல் கேள்வியை அவர் காலத்தில் தம் வாழ்வனுபவத்தின் வழி எழுப்பியிருந்தார் . தேர்தல் பாதையில் அரசமைக்கும் நாடுகளுக்கான கேள்வி அது . ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் மதநீதியும் அரசியலும் வில்லியம்ஸ் 1926 ஜனவரி 5 ஆம் தேதி , அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் பிறந்தவர் . ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு கல்வி , வேலை , வீடு , வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்த ஜிம் க்ரோ (Jim Crow ) சட்டங்கள் அமலில் இருந்தபோது இளமைப் பருவத்தைக் கடந்தவர் . இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவத்...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...