Skip to main content

நூல் அறிமுகம்

 

கே.என்.சிவராஜ பிள்ளையின் THE CHRONOLOGY OF THE EARLY TAMILS என்கிற நூல் பற்றிய குறிப்புகள்

ஞா.குருசாமி

கே.என்.சிவராச பிள்ளை தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் பொழுது எத்தகைய முன்னாய்வுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். தன்னுடைய ‘The Chronology of the Early Tamils’ நூலில் இலக்கிய வரலாற்றை எழுத முனைகிறவர்கள் என்னென்ன விசயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய நூலில் எவையெவை கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் விவரிக்கிறார். அதில்  குறிப்பாக மூன்று விஷயங்களைக் குறிப்பிடலாம். ஒன்று தொன்மம் குறித்த மறுப்பு, இரண்டு சொல் பயன்பாட்டு ஆய்வின் வழி காலத்தை உறுதி செய்தல், மூன்று காலத்தின் வரிசைப்படி வரலாற்றை எழுதுதல்.

அவர் தொன்மத்தை மறுத்தல் என்பதில் சங்கம் பற்றி இறையனார் களவியல் உரை தருகிற செய்திகளை மறுக்கிறார். அகத்தியர் பற்றி வழங்கிவரும் செய்திகளை முற்றாக மறுக்கிறார். அகத்தியர் பற்றிய செய்திகளும் சங்கம் பற்றிய செய்திகளும் உண்மைக்குப் புறம்பானவை. நம்ப முடியாதவையாக இருக்கின்றன என்பதை சான்றுகளோடு நிறுவுகிறார்.

நூலின் அட்டைப்படம்

 உந்து, ஆங்கு என்கிற இரண்டு சொற்கள் வழி காலத்தை வரையறை செய்ய முடியும் என்று நிறுவியிருக்கிறார். உந்து வினைமுற்று சொல். பெயரெச்சம் அல்ல. பலரால் அது பெயரெச்சம் என தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார். ஒரே பாடலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில்உந்து சொல் வந்து வினைமுற்றாக இருக்கும் போது, அந்த பாடலில் ஆங்கு என்ற இடைச்சொல்  வரும். அதுதான் பாட்டில் வரும் பல வினைமுற்று தொடர்களின் பொருளைத் தொகுத்துத் தரும். சங்க இலக்கியத்தில்ஆங்கு என்ற சொல்லை புரிந்து கொள்ளாமல் உந்து என்கிற வினைமுற்றுச் சொல்லை புரிந்து கொள்ள முடியாது என்கிறார் கே.என்.சிவராஜ பிள்ளை.

 மேலும் அவர் தொல்காப்பியர் உந்து வினைமுற்று சொல் பற்றி கூறவில்லை என்று குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்தில்உந்து என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்களாக மாங்குடி கிழார், ஒருசிறை பெரியனார், பரணர், கருவூர் கதப்பில்லை, புறத்திணை நன்னாகன், கோவூர்கிழார், மதுரை நக்கீரர் முதலியோர்களைக் குறிப்பிடுகிறார். இவர்களெல்லாம் உந்து என்கிற சொல்லை பயன்படுத்தி எழுதிய பாடல்கள் புறநானூற்றில் கிடைக்கின்றன. இப்புலவர்களைத் தொல்காப்பியர் காலத்துக்கு முந்தியவர்கள் எனக் குறிப்பிடும் கே.என். சிவராஜ பிள்ளை, உந்து என்னும் சொல் வழக்கு தொல்காப்பியர் காலத்தில் வழக்கொழிந்திருக்க வேண்டும், அல்லது இழிவழக்காக இருந்திருக்க வேண்டும் அல்லது தொல்காப்பியர் காலத்திற்கு பின்னால் வழக்கிற்கு வந்திருக்கலாம் என்கிறார். இதில் மூன்றாவது காரணம் ஏற்புடையதாக இல்லை. ஏற்றால் கே.என்.சிவராஜ பிள்ளையின் ஆய்வே முரணாகும் அபாயமிருக்கிறது.

 இலக்கிய வரலாற்றை எழுதுவதில் உள்ள சிக்கல்களாக 1. தலைமுறையை பகுப்பதில் உள்ள சிக்கல்,  2.காலவரையறையை முடிவு செய்வதில் உள்ள சிக்கல் என இரண்டு சிக்கல் பற்றிக் கூறும் அவர், அவற்றை எவ்வாறு வரையறை செய்வது என்பதை விளக்குகிறார். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு எழுதும் பொழுது ஓர் இலக்கிய வரலாறு உண்மையிலேயே வரலாறாக இருக்கும் அதில் உண்மைக்கு புறமான செய்திகளுக்கு இடம் இருக்காது. நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும் என்கிறார். நூல் ஆங்கிலத்தில் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்நூல் 1932 - இல் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கிறது. மொத்த பக்கம் 316. அன்றைய விலை ரூ 5/-

.................................



Comments

Popular posts from this blog

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும்

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும் 1933 இல் எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதிய நூல் சதபத பிராமணம். வேதங்கள் , உபநிடதங்கள் ஆகியவற்றின் செய்திகளை விளக்கும் வண்ணம் எதையாவது எழுதும் வழக்கமுடைய ஜம்புநாதன் , யசூர் வேதத்தின் சில பகுதிகளை விளக்கும் முகமாக சதபத பிராமணத்தை எழுதியிருக்கிறார். அதில் 88 விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அவர் ‘ கதைகள் ’ என்கிறார். உண்மையில் அவற்றைக் கதைகள் என்று சொல்வது கூட ரெம்ப அதிகம் தான்.  இந்நூலை அவர் ஹரி ஜனங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே விவரிக்கிறார். நூலில் ருத்திரனின் இயல்புகளை விவரிக்கும் அவர் ‘ ருத்திரனின் குணங்கள் அனைத்தும் ஹரிஜனங்களிடம் உள்ளது ’ என்பதாக அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த ஒப்பீட்டின் வழி அவரது அறிவின் அளவு துலக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி நூல் எதற்காக எழுதப்பட்டிருக்கும் என யோசித்தால் ஹரிஜனங்களை இந்துக்களாகச் சித்திரிப்பதே நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சான்றாக , ருத்திரனுக்கும் ஹரிஜனங்களுக்கும் அவர் சொல்லும் ஒற்றுமைக் காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். உலகம் ...