Skip to main content

தலித் அல்லாத குரலில் தலித் எழுத்து

 


தலித் எழுத்துக்களைப் பொறுத்த மட்டில் பழைய தத்துவம், கொள்கை, கோட்பாடு முதலிய வஸ்துகளை இனி கறாராகக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. உலக அளவிலான பிராந்திய எழுத்துக்களில் அப்படி யாரும் கடைப்பிடித்ததாகவும் நம்பிக்கைக்குரிய தரவுகள் இல்லை. அந்தப் பொழுதுக்கு எது சரியோ அதை நியாயப்படுத்தும் மனம் தான் எல்லோருக்கும் வாய்த்திருக்கிறது. இலக்கியமும் இலக்கியத்திலும் அப்படித்தான். நடப்புக்காலத்தில் எப்படிப்பட்ட எழுத்து சமூகத்தின் இயங்கியலைத் தீர்மானிக்கிறதோ அதே மாதிரியான எழுத்தை எழுதிவிட வேண்டும். அது தான் அன்றைய பொழுதுக்குப் பயனளிக்கும் விஷயம். இலக்கியம் ஒரு மாயவாத புளகாங்கிதச் செயல்பாடு என்பதைப் புரிந்துகொள்ளும் அதேசமயம் அதற்கு ஏற்கனவே இருக்கும் சட்டகத்தை மாற்றிவிடக் கூடிய தீர்க்கமான வல்லமை உண்டு என்பதையும் கணக்கில் கொண்டு புதிய எழுத்து முறைமைக்கு அணியமாக வேண்டும்.

பாபாசாகேப் அம்பேத்கர்

இன்று தலித் இலக்கியத்தைப் பொறுத்தவரை தலித் அல்லாத குரலில் தலித் எழுத்தை ஒரு தலித் எழுத வேண்டும். தலித் குரலே இல்லாமல் தலித் இலக்கியம் இருக்க முடியுமா என்றால் இருக்க முடியும் என்பதே எனது பதில். அதில் தலித்துகளின் விழுமியம், வீரம் இடம் பெற வேண்டும். கருணை மிக்கவர்கள், இரக்கம் கொண்டவர்கள், விட்டுக் கொடுப்பவர்கள் என்று எழுதிப் பெறுகிற இலக்கிய மோஸ்தர் இனி வேலைக்கு உதவாது.  

இலக்கியக் கம்பீரங்களுக்கு எப்போதும் ஒரு சமூக மதிப்பு உண்டு. வை தான் இலக்கியத்தின் வழி உருவான சகல பெருமிதங்களுக்கும் காரணமாக இருந்திருக்கின்றன. அப்படியான எழுத்து தலித்துகளிடமிருந்து வர வேண்டும். அதற்கு மிகுந்த வலிமை உண்டு. உதாரணமாக,

அவனுக்கு இவ்வளவு மிருகத்தனம் இருக்கும்ணு என்னால கணிக்க முடியல. வந்தான் நின்னது தெரியல. அடிச்சுப் போட்டுட்டு போயிட்டான். அவனப் பார்க்கவே பயமா இருந்துச்சு. கண்ணுல தெரிஞ்ச கம்பீரத்தைப் பாத்தியாநம்மள்ல ஒருத்தனுக்குக் கூட அந்தக் கம்பீரம் இல்ல

என்று தலித் அல்லாத குரலில் தலித்தின் கம்பீரம் தலித்தால் எழுதப்பட வேண்டும். இதில் உள்ள ‘மிருகத்தனம்’, ‘பாக்கவே பயம்’, ‘கம்பீரம்என்பதைப் போன்ற வார்த்தைகள் முக்கியமானவை. இதை விட முக்கியம் தலித் அல்லாத குரலில் நம்மிடம் அந்த கம்பீரம் இல்லைஎன்று தலித்தின் கம்பீரத்தைப் பார்த்து பிரமித்து சொல்வது. இவை மாதிரியான திட்டமிட்ட சொற்குவியலும் மொழிக் கட்டமைப்பும் தலித் இலக்கியத்தின் அடுத்த நகர்வுக்கு அவசியமெனலாம்.

கவனத்தில் கொள்ளவேண்டிய மற்றொரு விஷயம், ஒரு புனைவை எழுதும் போது அவற்றில் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் வாசகனுக்குள் கடத்துகிற நவீன அதிர்வு ஏற்பையும் கலாவதியான அதிர்வு விலக்கலையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டால் இலக்கியங்கள் உருவாக்கி வைத்திருக்கும் கம்பீரத்தை இலக்கியங்களைக் கொண்டே தனது பக்கம் திருப்பிக்கொள்ளும் அதிசயம் தலித் இலக்கியத்தில் நிகழும். தலித் இலக்கியத்தில் புதியதாக ‘தன் பக்கம் திருப்பிக் கொள்ளுதல்’ நிகழ வேண்டும் என்றால் தலித்துகளிடம் இதுவரைகம்பீரம்இல்லை என்பது பொருளல்ல. இருப்பதை ஏற்கனவே இருக்கும் சட்டகத்திற்குள் மூழ்கடிக்கும் வேலையை இனியும் செய்யக் கூடாது என்பது பொருள். அதாவது, தலித் புனைவில் வரும் தலித் பாத்திரம் மேலே நின்று கீழே பார்ப்பதாக, எதிர்நிலைப் பாத்திரத்தை சப்பென்று அடித்து விட்டு இனி இந்தப்பக்கம் நீ வரவே கூடாது என்கிற தொனியில் அமைக்கப்பட வேண்டும். அது நிகழுமானால் சாதியத்தமிழர்களின் சகல பம்மாத்துக்களும் தலித் மீதான வன்மங்களும் புதிய வெளிச்சத்தில் தானே அம்பலப்படும்.

 

Comments

Popular posts from this blog

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும்

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும் 1933 இல் எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதிய நூல் சதபத பிராமணம். வேதங்கள் , உபநிடதங்கள் ஆகியவற்றின் செய்திகளை விளக்கும் வண்ணம் எதையாவது எழுதும் வழக்கமுடைய ஜம்புநாதன் , யசூர் வேதத்தின் சில பகுதிகளை விளக்கும் முகமாக சதபத பிராமணத்தை எழுதியிருக்கிறார். அதில் 88 விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அவர் ‘ கதைகள் ’ என்கிறார். உண்மையில் அவற்றைக் கதைகள் என்று சொல்வது கூட ரெம்ப அதிகம் தான்.  இந்நூலை அவர் ஹரி ஜனங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே விவரிக்கிறார். நூலில் ருத்திரனின் இயல்புகளை விவரிக்கும் அவர் ‘ ருத்திரனின் குணங்கள் அனைத்தும் ஹரிஜனங்களிடம் உள்ளது ’ என்பதாக அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த ஒப்பீட்டின் வழி அவரது அறிவின் அளவு துலக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி நூல் எதற்காக எழுதப்பட்டிருக்கும் என யோசித்தால் ஹரிஜனங்களை இந்துக்களாகச் சித்திரிப்பதே நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சான்றாக , ருத்திரனுக்கும் ஹரிஜனங்களுக்கும் அவர் சொல்லும் ஒற்றுமைக் காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். உலகம் ...