Skip to main content

புலவர் தோ. ஜம்புகுமாரன் அவர்கள் எழுதியுள்ள அவரது வாசிப்பு அனுபவம்

 

எனது 'தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்)' என்னும் நூலுக்கு சமணப் பேரறிஞர் புலவர் தோ. ஜம்புகுமாரன் அவர்கள் எழுதியுள்ள அவரது வாசிப்பு அனுபவம்

தோஜம்புகுமாரன்


அன்பிற்கினிய நண்பரீர்! ஆன்மநலம் விளைக! அரியவாம் நற்காட்சி பொலிக! தங்களின் அரிய படைப்பான தமிழிலக்கிய வரலாற்று நூலை இன்றுதான் வாசித்து முடித்தேன். 1970ஆம் ஆண்டு முதல் வெளிவந்த தமிழிலக்கிய நூல்களின் பெரும் பரப்பினை தங்களின் நுண்மாண் நுழைபுலன் என்னும் அளவுகோலைக் கொண்டு அளந்து காட்டி விட்டீர்கள். சிறுவர் இலக்கியம் தொடங்கி இணைய இலக்கியம் வரையிலான இலக்கியங்களை ஆய்ந்து அறிய தாங்கள் எடுத்துக்கொண்டுள்ள பேருழைப்பை நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக உள்ளது.

சமயங்கள் வளர்த்த இலக்கியங்களின் மதிப்பீடுகள் அனைத்தும் நடுநிலைப்பான்மையில் விருப்புவெறுப்பின்றி செய்திகளை அடுக்கிக்கொண்டே செல்லும் அழகும் தம்கருத்தை வலியுறுத்திக் கூறாமல் காலச்சூழலின் அழுத்தத்தை மேம்போக்காகச் சுட்டி காரணம் இவ்வாறு இருக்கலாம் என நாகரிகமாகச் சொல்லிச்செல்லும் தங்கள் திறப்பாட்டினை வியக்கிறேன். 1970க்குப்பிறகு தமிழ்புலத்தில் இத்தனை இலக்கியங்களா? இத்தனை எழுத்தாளர்களா? அது சரி. இத்தனையும் சேகரிக்க தங்களுக்கு எவ்வளவு காலம் ஆகியிருக்கும், நீங்கள் பட்ட பாடுகள் எவ்வளவு இருக்கும்? நினைத்துப்பார்க்கிறேன். இதற்கு முன் வெளிவந்துள்ள பேரறிஞர்கள் பலர் எழுதியுள்ள இலக்கிய வரலாறுகளினும் இந்நூலின் சொல்நடை உரைப்போக்கு முற்றிலும் வேறுபட்டுள்ளது. எல்லாவற்றினும் என்னை வியப்புற வைத்தது அதன் ஓட்டந்தான். சின்ன சின்ன வாக்கியங்களில் செய்திகளை அடுக்கிச் செல்லும் போது, நடைக்கு இறக்கை முளைத்துவிடும் போலும் போகும்போக்கில். தாங்கள் ஆங்காங்கே தூவிச்சென்றுள்ள புதுவதாகப் புனைந்தாளும் சொற்றொடர் அமைப்புகள் தங்களின் மொழிப்புலமையை உயர்த்திக்காட்டுகின்றன.(.டு) ஆண்மையவாத சிந்தனாவெளி-சமுதாய ஒழுக்கவியல் கற்பிதங்களைச் சிதைவிற்குள்ளாக்குதல் -போன்றனவும், அரிய சொல்வகைகளாக, காத்திரம் - (இதை நிறைய இடங்களில் பயன்படுத்தியுள்ளீர்கள்) இறுக்கம் - பொதுவெளி போல்வன. நிற்க,

சமணம்சார்ந்த இலக்கிய செய்திகளை மற்ற சமயச்செய்திகளை மொழிவது போலவே கூடவும் குறைவுமின்றி அளவோடு பேசியுள்ளீர்கள். அடியேனைப் பற்றி, காவியப்படைப்புகள் பற்றி விளக்கமாகவும் சுருக்கமாகவும் சொல்லியுள்ளீர்கள். நன்றி! என்னுடைய படைப்புகளில் நான் பிரதானமாகக் கருதுவது தமிழ்நிலத்தில் வழிபாட்டிலுள்ள சமண ஆலயங்களைப் பற்றிப் பாடியுள்ள "தமிழக ஜைன க்ஷேத்திரமாலை"என்னும்நூலே! 134ஆலயங்களின் மூலவர்களைப் பற்றிய பாடல்கள். அனைத்தும் பதிகங்களே. இதை சமண தேவாரம் என்று சொல்லலாம். இது தங்களின் பார்வைக்குக்கிட்டாமற் போனது ஏனோ தெரியவில்லை.

கவிதை நூல்களையும் ஆசிரியர்களையும் பற்றி ஒன்று விடாமல் பட்டியலிட்டுள்ளீர்கள். இன்று எல்லோரையும் ஆட்டிக்கொண்டு இருக்கும் - அசுரவளர்ச்சி அடைந்துவருகின்ற இணையஞ் சார் இலக்கியவகைகளையும் விவரித்துள்ளீர்கள். இந்த நூலைநான் இன்று படித்துமுடித்த போது, தங்களின் மேதா விலாசமும், நினைவாற்றலும், மொழி ஆளுமையும் என் மனக்கண்முன் இமயம்போல் ஓங்கிநிற்கிறது. தங்களின் இந்த அரிய வரலாற்றுநூல் பின்னர் எழுதவரும் ஆசிரியன்மார்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்நூல் கல்லூரிகளில் பாடநூலாக ஏற்கப்படும் காலம் விரைவில்வரும் என்பதிலும் ஐயமில்லை. தங்களின் இத்தகு ஆக்கப்பணி மேலும்மேலும் வளர்ந்தோங்கி இசை பெருகவென வாழ்த்தி மகிழ்கிறேன். உடல்நலமின்றி இருந்தமையால் என் எண்ணங்களைத் தெரிவிக்கத் தாமதமாயிற்று. பொறுத்தருள்க! தங்கள் நூலை வாசிக்கவும் தங்களைப் பற்றி அறிந்துகொள்ளவுமான ஒரு வாய்ப்பளித்தமைக்கு நன்றி! வணக்கம் வாழ்க வளமுடன்!

Comments

Popular posts from this blog

அட்டைப்படத்தில் ஆம்ஸ்ட்ராங்

அட்டைப்படத்தில் ஆம்ஸ்ட்ராங் ‘ உயிர் எழுத்து ’ அட்டைப் படத்திற்கு எப்போது மே ஒரு சிறப்பு இருக்கும். பெரும்பாலும் அன்றைய மாதத்தில் பேசுபொருளாக இருக்கும் அரசியல் , சமூக ஆ ளுமைகளின் படங்களைத் தாங்கி வரும். உதாரணமாக , இரோம் ஷர்மிளா தேசிய அளவில் கவனம் பெறத் தொடங்கிய நேரத்தில் அவரது படம் தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் முதன்முதலில் உயிர் எழுத்தில் தான் அட்டைப்படமாக வந்தது. அதன் வழி பலர் இரோம் ஷர்மிளா பற்றி அறியலானார்கள் . ஒருமுறை பிரபஞ்சன் சிகரெட் புகைப்பது போன்ற அட்டைப்படம் உயிர் எழுத்தில் வந்தது . அது தன்னொழுக்கத்தில் கனிந்து சிறந்த சில அறிவுஜீவிகளிடம் புகைச்சலை உண் டாக்கியது. அதற்காக அவர்கள் கண்டபடி அபிநயம் பிடித்து விதவிதமான அடவுகளில் ஆடி முடித்தார்கள் . இப்படி உயிர் எழுத்து அட்டைப்படங்கள் குறித்து நேர் / எதிர் மறையாக நிறைய சொல்ல முடியும். இதுவரை வெளிவந்த அட்டைப் படங்களின் வரிசையை மையப்படுத்தி அ வை பேசிய அரசியல் குறித்தே விரிவான கட்டுரையை எழுதலாம். அந்த வகையில் உயிர் எழுத்து பாராட்டப்பட வேண்டிய சிறு பத்திரிகை . நிற்க.  ரஷ்யாவில் சோசலிச யதார்த்த வாதம் என்ற கோட்பாட்டைப் பிடித்த...

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...