Skip to main content

புலவர் தோ. ஜம்புகுமாரன் அவர்கள் எழுதியுள்ள அவரது வாசிப்பு அனுபவம்

 

எனது 'தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்)' என்னும் நூலுக்கு சமணப் பேரறிஞர் புலவர் தோ. ஜம்புகுமாரன் அவர்கள் எழுதியுள்ள அவரது வாசிப்பு அனுபவம்

தோஜம்புகுமாரன்


அன்பிற்கினிய நண்பரீர்! ஆன்மநலம் விளைக! அரியவாம் நற்காட்சி பொலிக! தங்களின் அரிய படைப்பான தமிழிலக்கிய வரலாற்று நூலை இன்றுதான் வாசித்து முடித்தேன். 1970ஆம் ஆண்டு முதல் வெளிவந்த தமிழிலக்கிய நூல்களின் பெரும் பரப்பினை தங்களின் நுண்மாண் நுழைபுலன் என்னும் அளவுகோலைக் கொண்டு அளந்து காட்டி விட்டீர்கள். சிறுவர் இலக்கியம் தொடங்கி இணைய இலக்கியம் வரையிலான இலக்கியங்களை ஆய்ந்து அறிய தாங்கள் எடுத்துக்கொண்டுள்ள பேருழைப்பை நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக உள்ளது.

சமயங்கள் வளர்த்த இலக்கியங்களின் மதிப்பீடுகள் அனைத்தும் நடுநிலைப்பான்மையில் விருப்புவெறுப்பின்றி செய்திகளை அடுக்கிக்கொண்டே செல்லும் அழகும் தம்கருத்தை வலியுறுத்திக் கூறாமல் காலச்சூழலின் அழுத்தத்தை மேம்போக்காகச் சுட்டி காரணம் இவ்வாறு இருக்கலாம் என நாகரிகமாகச் சொல்லிச்செல்லும் தங்கள் திறப்பாட்டினை வியக்கிறேன். 1970க்குப்பிறகு தமிழ்புலத்தில் இத்தனை இலக்கியங்களா? இத்தனை எழுத்தாளர்களா? அது சரி. இத்தனையும் சேகரிக்க தங்களுக்கு எவ்வளவு காலம் ஆகியிருக்கும், நீங்கள் பட்ட பாடுகள் எவ்வளவு இருக்கும்? நினைத்துப்பார்க்கிறேன். இதற்கு முன் வெளிவந்துள்ள பேரறிஞர்கள் பலர் எழுதியுள்ள இலக்கிய வரலாறுகளினும் இந்நூலின் சொல்நடை உரைப்போக்கு முற்றிலும் வேறுபட்டுள்ளது. எல்லாவற்றினும் என்னை வியப்புற வைத்தது அதன் ஓட்டந்தான். சின்ன சின்ன வாக்கியங்களில் செய்திகளை அடுக்கிச் செல்லும் போது, நடைக்கு இறக்கை முளைத்துவிடும் போலும் போகும்போக்கில். தாங்கள் ஆங்காங்கே தூவிச்சென்றுள்ள புதுவதாகப் புனைந்தாளும் சொற்றொடர் அமைப்புகள் தங்களின் மொழிப்புலமையை உயர்த்திக்காட்டுகின்றன.(.டு) ஆண்மையவாத சிந்தனாவெளி-சமுதாய ஒழுக்கவியல் கற்பிதங்களைச் சிதைவிற்குள்ளாக்குதல் -போன்றனவும், அரிய சொல்வகைகளாக, காத்திரம் - (இதை நிறைய இடங்களில் பயன்படுத்தியுள்ளீர்கள்) இறுக்கம் - பொதுவெளி போல்வன. நிற்க,

சமணம்சார்ந்த இலக்கிய செய்திகளை மற்ற சமயச்செய்திகளை மொழிவது போலவே கூடவும் குறைவுமின்றி அளவோடு பேசியுள்ளீர்கள். அடியேனைப் பற்றி, காவியப்படைப்புகள் பற்றி விளக்கமாகவும் சுருக்கமாகவும் சொல்லியுள்ளீர்கள். நன்றி! என்னுடைய படைப்புகளில் நான் பிரதானமாகக் கருதுவது தமிழ்நிலத்தில் வழிபாட்டிலுள்ள சமண ஆலயங்களைப் பற்றிப் பாடியுள்ள "தமிழக ஜைன க்ஷேத்திரமாலை"என்னும்நூலே! 134ஆலயங்களின் மூலவர்களைப் பற்றிய பாடல்கள். அனைத்தும் பதிகங்களே. இதை சமண தேவாரம் என்று சொல்லலாம். இது தங்களின் பார்வைக்குக்கிட்டாமற் போனது ஏனோ தெரியவில்லை.

கவிதை நூல்களையும் ஆசிரியர்களையும் பற்றி ஒன்று விடாமல் பட்டியலிட்டுள்ளீர்கள். இன்று எல்லோரையும் ஆட்டிக்கொண்டு இருக்கும் - அசுரவளர்ச்சி அடைந்துவருகின்ற இணையஞ் சார் இலக்கியவகைகளையும் விவரித்துள்ளீர்கள். இந்த நூலைநான் இன்று படித்துமுடித்த போது, தங்களின் மேதா விலாசமும், நினைவாற்றலும், மொழி ஆளுமையும் என் மனக்கண்முன் இமயம்போல் ஓங்கிநிற்கிறது. தங்களின் இந்த அரிய வரலாற்றுநூல் பின்னர் எழுதவரும் ஆசிரியன்மார்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்நூல் கல்லூரிகளில் பாடநூலாக ஏற்கப்படும் காலம் விரைவில்வரும் என்பதிலும் ஐயமில்லை. தங்களின் இத்தகு ஆக்கப்பணி மேலும்மேலும் வளர்ந்தோங்கி இசை பெருகவென வாழ்த்தி மகிழ்கிறேன். உடல்நலமின்றி இருந்தமையால் என் எண்ணங்களைத் தெரிவிக்கத் தாமதமாயிற்று. பொறுத்தருள்க! தங்கள் நூலை வாசிக்கவும் தங்களைப் பற்றி அறிந்துகொள்ளவுமான ஒரு வாய்ப்பளித்தமைக்கு நன்றி! வணக்கம் வாழ்க வளமுடன்!

Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ்: தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சி

ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சிவில் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவர் ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் (Hosea Lorenzo Williams). போராட்டக் களத்தில் வெகுஜன உளவியலின் உருவாக்கத் தேவையை நன்கு அறிந்திருந்த அவர் , சமகாலத் தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ளப் பங்களித்து இருக்கிறார் . சர்வதேசிய அளவில் சிவில் உரிமைப் போராட்டக் களத்தின் எதார்த்த முகமாக இன்று அடையாளம் காணப்பட்டிருக்கும் வில்லியம்ஸ் ஜனநாயகம் , அகிம்சை , அரச வன்முறை , ஊடக அரசியல் , வர்க்கம் , இனம் ஆகியவற்றின் சந்திப்பில் உருவாகும் பெரியதொரு அரசியல் கேள்வியை அவர் காலத்தில் தம் வாழ்வனுபவத்தின் வழி எழுப்பியிருந்தார் . தேர்தல் பாதையில் அரசமைக்கும் நாடுகளுக்கான கேள்வி அது . ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் மதநீதியும் அரசியலும் வில்லியம்ஸ் 1926 ஜனவரி 5 ஆம் தேதி , அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் பிறந்தவர் . ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு கல்வி , வேலை , வீடு , வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்த ஜிம் க்ரோ (Jim Crow ) சட்டங்கள் அமலில் இருந்தபோது இளமைப் பருவத்தைக் கடந்தவர் . இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவத்...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...