Skip to main content

புலவர் தோ. ஜம்புகுமாரன் அவர்கள் எழுதியுள்ள அவரது வாசிப்பு அனுபவம்

 

எனது 'தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்)' என்னும் நூலுக்கு சமணப் பேரறிஞர் புலவர் தோ. ஜம்புகுமாரன் அவர்கள் எழுதியுள்ள அவரது வாசிப்பு அனுபவம்

தோஜம்புகுமாரன்


அன்பிற்கினிய நண்பரீர்! ஆன்மநலம் விளைக! அரியவாம் நற்காட்சி பொலிக! தங்களின் அரிய படைப்பான தமிழிலக்கிய வரலாற்று நூலை இன்றுதான் வாசித்து முடித்தேன். 1970ஆம் ஆண்டு முதல் வெளிவந்த தமிழிலக்கிய நூல்களின் பெரும் பரப்பினை தங்களின் நுண்மாண் நுழைபுலன் என்னும் அளவுகோலைக் கொண்டு அளந்து காட்டி விட்டீர்கள். சிறுவர் இலக்கியம் தொடங்கி இணைய இலக்கியம் வரையிலான இலக்கியங்களை ஆய்ந்து அறிய தாங்கள் எடுத்துக்கொண்டுள்ள பேருழைப்பை நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக உள்ளது.

சமயங்கள் வளர்த்த இலக்கியங்களின் மதிப்பீடுகள் அனைத்தும் நடுநிலைப்பான்மையில் விருப்புவெறுப்பின்றி செய்திகளை அடுக்கிக்கொண்டே செல்லும் அழகும் தம்கருத்தை வலியுறுத்திக் கூறாமல் காலச்சூழலின் அழுத்தத்தை மேம்போக்காகச் சுட்டி காரணம் இவ்வாறு இருக்கலாம் என நாகரிகமாகச் சொல்லிச்செல்லும் தங்கள் திறப்பாட்டினை வியக்கிறேன். 1970க்குப்பிறகு தமிழ்புலத்தில் இத்தனை இலக்கியங்களா? இத்தனை எழுத்தாளர்களா? அது சரி. இத்தனையும் சேகரிக்க தங்களுக்கு எவ்வளவு காலம் ஆகியிருக்கும், நீங்கள் பட்ட பாடுகள் எவ்வளவு இருக்கும்? நினைத்துப்பார்க்கிறேன். இதற்கு முன் வெளிவந்துள்ள பேரறிஞர்கள் பலர் எழுதியுள்ள இலக்கிய வரலாறுகளினும் இந்நூலின் சொல்நடை உரைப்போக்கு முற்றிலும் வேறுபட்டுள்ளது. எல்லாவற்றினும் என்னை வியப்புற வைத்தது அதன் ஓட்டந்தான். சின்ன சின்ன வாக்கியங்களில் செய்திகளை அடுக்கிச் செல்லும் போது, நடைக்கு இறக்கை முளைத்துவிடும் போலும் போகும்போக்கில். தாங்கள் ஆங்காங்கே தூவிச்சென்றுள்ள புதுவதாகப் புனைந்தாளும் சொற்றொடர் அமைப்புகள் தங்களின் மொழிப்புலமையை உயர்த்திக்காட்டுகின்றன.(.டு) ஆண்மையவாத சிந்தனாவெளி-சமுதாய ஒழுக்கவியல் கற்பிதங்களைச் சிதைவிற்குள்ளாக்குதல் -போன்றனவும், அரிய சொல்வகைகளாக, காத்திரம் - (இதை நிறைய இடங்களில் பயன்படுத்தியுள்ளீர்கள்) இறுக்கம் - பொதுவெளி போல்வன. நிற்க,

சமணம்சார்ந்த இலக்கிய செய்திகளை மற்ற சமயச்செய்திகளை மொழிவது போலவே கூடவும் குறைவுமின்றி அளவோடு பேசியுள்ளீர்கள். அடியேனைப் பற்றி, காவியப்படைப்புகள் பற்றி விளக்கமாகவும் சுருக்கமாகவும் சொல்லியுள்ளீர்கள். நன்றி! என்னுடைய படைப்புகளில் நான் பிரதானமாகக் கருதுவது தமிழ்நிலத்தில் வழிபாட்டிலுள்ள சமண ஆலயங்களைப் பற்றிப் பாடியுள்ள "தமிழக ஜைன க்ஷேத்திரமாலை"என்னும்நூலே! 134ஆலயங்களின் மூலவர்களைப் பற்றிய பாடல்கள். அனைத்தும் பதிகங்களே. இதை சமண தேவாரம் என்று சொல்லலாம். இது தங்களின் பார்வைக்குக்கிட்டாமற் போனது ஏனோ தெரியவில்லை.

கவிதை நூல்களையும் ஆசிரியர்களையும் பற்றி ஒன்று விடாமல் பட்டியலிட்டுள்ளீர்கள். இன்று எல்லோரையும் ஆட்டிக்கொண்டு இருக்கும் - அசுரவளர்ச்சி அடைந்துவருகின்ற இணையஞ் சார் இலக்கியவகைகளையும் விவரித்துள்ளீர்கள். இந்த நூலைநான் இன்று படித்துமுடித்த போது, தங்களின் மேதா விலாசமும், நினைவாற்றலும், மொழி ஆளுமையும் என் மனக்கண்முன் இமயம்போல் ஓங்கிநிற்கிறது. தங்களின் இந்த அரிய வரலாற்றுநூல் பின்னர் எழுதவரும் ஆசிரியன்மார்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்நூல் கல்லூரிகளில் பாடநூலாக ஏற்கப்படும் காலம் விரைவில்வரும் என்பதிலும் ஐயமில்லை. தங்களின் இத்தகு ஆக்கப்பணி மேலும்மேலும் வளர்ந்தோங்கி இசை பெருகவென வாழ்த்தி மகிழ்கிறேன். உடல்நலமின்றி இருந்தமையால் என் எண்ணங்களைத் தெரிவிக்கத் தாமதமாயிற்று. பொறுத்தருள்க! தங்கள் நூலை வாசிக்கவும் தங்களைப் பற்றி அறிந்துகொள்ளவுமான ஒரு வாய்ப்பளித்தமைக்கு நன்றி! வணக்கம் வாழ்க வளமுடன்!

Comments

Popular posts from this blog

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும்

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும் 1933 இல் எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதிய நூல் சதபத பிராமணம். வேதங்கள் , உபநிடதங்கள் ஆகியவற்றின் செய்திகளை விளக்கும் வண்ணம் எதையாவது எழுதும் வழக்கமுடைய ஜம்புநாதன் , யசூர் வேதத்தின் சில பகுதிகளை விளக்கும் முகமாக சதபத பிராமணத்தை எழுதியிருக்கிறார். அதில் 88 விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அவர் ‘ கதைகள் ’ என்கிறார். உண்மையில் அவற்றைக் கதைகள் என்று சொல்வது கூட ரெம்ப அதிகம் தான்.  இந்நூலை அவர் ஹரி ஜனங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே விவரிக்கிறார். நூலில் ருத்திரனின் இயல்புகளை விவரிக்கும் அவர் ‘ ருத்திரனின் குணங்கள் அனைத்தும் ஹரிஜனங்களிடம் உள்ளது ’ என்பதாக அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த ஒப்பீட்டின் வழி அவரது அறிவின் அளவு துலக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி நூல் எதற்காக எழுதப்பட்டிருக்கும் என யோசித்தால் ஹரிஜனங்களை இந்துக்களாகச் சித்திரிப்பதே நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சான்றாக , ருத்திரனுக்கும் ஹரிஜனங்களுக்கும் அவர் சொல்லும் ஒற்றுமைக் காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். உலகம் ...