Skip to main content

அகவும் பூக்கள் : சமகால மரபுக் கவிதையில் ஓர் அடையாளம்

 

1990 களுக்குப் பிறகு தமிழில் மரபுக் கவிதைகள் எழுதும் போக்கு அருகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். வானம்பாடியும் அதைத் தொடர்ந்து வெளியான இதழ்களும் புதுக்கவிதைக்குத் தந்த ஆதரவு, வாசிப்பு மனநிலையின் கால மாற்றம் ஆகியன இணைந்து தமிழ்க் கவிதை உலகை புதுப்பித்துக் கொண்டே இருந்தது. புதுக்கவிதையிலும் கூட ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கவிதையின் நுவல்பொருள் மாற்றமடைந்து கொண்டே வந்திருக்கிறது. 

செ.நிறைமதி

யாப்பு கற்று விருத்தங்களின் வடிவங்களை உள்வாங்கி யாரும் எழுதத் தயாரில்லை. இலக்கணத்திற்குள் நின்று கவிதை எழுதுவது என்பது நீளமான கயிற்றில் கட்டப்பட்ட மாட்டின் சுதந்திரத்தை ஒட்டியது. கற்பனையின் முழு அடர்த்தியையும் அப்படியை இறக்கி வைத்துவிட முடியாது. சரியான சொற்களைத் தேட வேண்டும். சொற்களின் கட்டமைப்பு அமைந்துவிடுமானால் அது வாசகனுக்கு உணர்வைக் கடத்துவதில் போதாமையைக் கொண்டிருக்கும். அதனாலேயே மரபுக் கவிதை அருகி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் அகவும் பூக்கள் நூல் வழி மரபுக் கவிஞராக தம்மை நிறுவியிருக்கிறார் செ.நிறைமதி. வடிவம் கலாவதி நிலையில் இருந்தாலும் பழமையை விட்டுவிடக் கூடாது என்கிற விருப்பமும் ஆசையும் அவரை மரபுக் கவிதை எழுத வைத்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

நூறு ஆசிரியப்பாக்களில் அமைந்து இருக்கும் இந்நூலில் நிறைய விஷயங்களை மரபுக்குள் நின்று எழுதிப் பார்த்திருக்கிறார் நூலாசிரியர். புத்தகத்திற்கும் தனக்குமான உறவைச் சொல்லும் இடத்து ‘நூலே அன்னை மடியும் அன்பும் நீயே’ என்கிறார். அன்னையின் மடி போன்று அமைதி, ஆறுதல், மகிழ்ச்சி, அன்பு, நம்பிக்கை, பாதுகாப்பு அனைத்தையும் ஒரு புத்தகத்தால் தந்துவிட முடியும் என்று நிறைமதி நம்பியிருக்கிறார். அதனால் தான் அவரால் அப்படி யோசிக்க முடிகிறது.காதல், கல்வி, ஒற்றுமை, ஆன்மிகம், இயற்கை என எல்லாவற்றையும் மரபுக் கவிதையாக்கி இருக்கிறார். அதே போல 'நிறத்தில் பேதம் இல்லை' கவிதையும் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது.

நூலின் அட்டைப்படம்

தொடர்ந்து நிறைமதி புதிய கவிதை நூல்களோடும் கோட்பாடுகளின் தேவையை, வலியுறுத்தலை ஒட்டி எழுதப்பட்ட நவீன கவிதைகளோடும் தனது வாசிப்பை வைத்துக் கொள்வாரேயானால் காலம் கடந்து நிற்கும் நல்ல கவிதைகளை அவரால் தரமுடியும். தருவதற்கான உழைப்பும் ஆர்வமும் அவரிடம் இருக்கிறது. நிறைமதிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

வெளியீடு : தமிழ் மதுரை அறக்கட்டளை
முதற்பதிப்பு : மே 28, 2023
விலை : ரூ 120/-
நூலைப் பெற : 3842386995

Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

தத்துவங்கள் குறித்த உரையரங்கம்

  தத்துவங்கள் குறித்த உரையரங்கம் கோவை பீளமேட்டில் ‘ பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வு மையம் ’ தத்துவ அறிமுகக் கூட்டம் ஒன்றை 2026 மே 29 அன்று நடத்தியது . அதன் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தார் . பெரியாரியம் குறித்து   கு . ராமகிருஷ்ணன் பேசினார். இணைய வழியில் கலந்துகொண்ட   தியாகு மார்க்சியம் குறித்துப் பேசினர் .  நான் அம்பேத்கரியம் பேசினேன் . அம்பேத்கரை எப்படி வாசிக்கத் தொடங்குவது என்பதில் தொடங்கி கூட்டுச் சிந்தனையில் அம்பேத்கரின் அவசியத்தை வலியுறுத்துவதாக எனது உரையை அமைத்துக் கொண்டேன் . மனநிறைவான நிகழ்வாக அமைந்தது . சிறிய அளவிலான கூட்டம் என்றாலும் ஒருசிலரைத் தவிர அனைவரும் பார்வையற்றவர்களே . அவர்களோடு பேசிய தருணங்கள் நாம் பார்த்திராத உலகத்தைக் காட்டின . ஒருவர் ‘ மாற்றுத்திறனில்  21 வகை உள்ளதாக அரசு வரையறுத்து இருக்கிறது . எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கருதுவது மாற வேண்டும் ’ என்றார் . ‘ நடக்க இயலாதவர்களையும் எங்களையும் எப்படி ஒன்றாகக் கருத முடியும் ’ என்ற கேள்வியில் உறுதியாக இருந்தார் . ‘ நடக்க இயலாதவர் தன்னால் இயல்பாகத் தனித்துச் ...

இராணிப்பேட்டை அமுதாவும் அதிபர் டிரம்ப்பும்

கடந்த 2026  ஜனவரி 09 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம் ,  பொன்னேரியில் முதல் அமைச்சர் கலந்துகொண்ட ‘ உங்க கனவ சொல்லுங்க ’ நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கனவைச் சொல்ல அழைக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கம் ஒன்றியம் , கரிவேடு ஊராட்சி , சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவரும் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் கங்கையம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவின் ஊக்குநருமான எம் . அமுதா தனது கனவைச் சொன்னார் .  பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு கடனுதவிகளைப் பெற்று மாவு அரைக்கும் எந்திரந்தின் மூலம் வருமானம் ஈட்டி வரும் அமுதா எஸ்சி / எஸ்டி மக்களுக்கு மானியக் கடன் கிடைப்பதாகவும் தங்களுக்கு நேரடிக் கடன் மட்டுமே கிடைப்பதாகவும் குறைபட்டுக் கொண்டார் . அவர் பேச்சில் இருந்த முக்கியமான விஷயம் ‘ எஸ்சி எஸ்டிக்கெல்லாம் குடுத்தா நாங்க எங்க போறது ’ என்கிற அழுத்தம் தான் . அவரது தேவையைக் கேட்டுப் பெறுவதில் அவருக்கு உரிமை உண்டு . ஆனால் ‘ எஸ்சி எஸ்டிகளுக்குக் கிடைக்கிறது எங்களுக்குக் கிடைக்கவில்லை ’ என்கிற ஒப்பீடு சரியானதல்ல . தவிர , இதை அவரது தனிப்பட்ட கருத்து என்பதை விட கூட்டுச் சமூகத்தின் மனநிலை என்பதற்கு அ...