Skip to main content

அமுதா ஆர்த்தி: சமகால பெண் எழுத்தின் புது வசீகரம்

2019 – இல் அழகிய பெரியவனின் அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார்என்னும் சிறுகதைத் தொகுப்புக்கான மதிப்புரையை பேசும் புதிய சக்தியில் எழுதியிருந்தேன். அந்த இதழில் தான் அமுதா ஆர்த்தியைத் தெரியும்.

அமுதா ஆர்த்தி

அதில் சைக்கிள் சவுட்டுஎன்ற கதையை எழுதியிருந்தார். நாடோடி இளைஞன், அவன் மீது காதல் கொள்ளும் உள்ளூர் பெண். அவனை ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லும் திருநங்கை என்று மூவருக்குமான உணர்வுச் சிக்கலை நுட்பமாக விவரித்த கதை அது.  மார்ச் 2020 இல் அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும்கதையை காலச்சுவடில் வாசித்தேன். 2022 – இல் அம்ருதாவில் வெற்றுடல் குளம்வாசித்தேன். 2023 ஜனவரியில் காலச்சுவடில்ரயிலைத் துரத்தும் இரவுவாசித்தேன். இப்படித்தான் அமுதா ஆர்த்தி கதைகளோடு எனது பயணம் தொடங்கியது. அவரது கதைகளின் களம் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை தான் என்றாலும் அவரது ஒவ்வொரு கதைக்கும் அவர் காட்டுகிற வேறுபாடு தான் அவரது கதையின் தனித்துவம்பெண், தனிமை, வெறுமை, முடிந்தவரை தனிமைக்குள்ளும் கொண்டாட்டத்தைத் தேடுதல், தேடுதல் கைகூடாத போது விரக்தி என்பதாக பல கதைகள் அமைந்திருக்கின்றன. தன்னிலை பேசும் கதைகளாக இருந்தாலும் மூன்றாம் நபரின் புறநிலையை தன்னிலையோடு இணைத்து இரண்டையும் இயக்க விதியாக்கும் சித்திரிப்பில் அமுதா ஆர்த்தி தேர்ந்து கொண்டே வருகிறார்.


ஜனவரி 2023 – இல் எதிர் வெளியீடாக வந்த பருந்து கதைத் தொகுதியில் இருக்கும் பதினான்கு கதைகளும் ஒரே தன்னிலையை வேறுவேறு புறநிலையோடு எழுதிப் பார்த்த கதைகள் தான். குறிப்பாக ஆடையும் ஒரு அடையாளமாக இருக்கும் சமூகத்தில் ஆடை துறந்து அடையாளம் இழக்கும் மனிதனின் நிச்சயமற்ற இருந்தலைப் பேசியஅடையாளம் அற்றவனின் ஆடைஇந்தத் தொகுப்பில் குறிப்பிடத்தக்க கதை. ‘இரவை வெளிச்சமிடும் வானம்கதையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் தனிமையைசோப்பின் கவரைப் போலவே கவனிக்கப்படாமல் போகும் தனிமைஎன்கிறார். புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் வலியை நுணுக்கமாக எழுதிவிட முடியும் என்பதற்கு இக்கதை சிறந்த உதாரணம். ‘நெகிழிக் கனவுகதையில் மலம் கழிப்பதிலும் தூங்குவதிலும் சிக்கலைச் சந்திப்பவனின் உலகை அவனது விமர்சனப்பூர்வமாகவே வாசகனுக்குக் கடத்துகிறார் அமுதா ஆர்த்திஆகஸ்ட் 2023 இல்கடலுக்கு பறவையின் குரல்கவிதைத் தொகுதி வேரல் வெளியீடாக வந்துள்ளது.

கதையைப் போலவே இதிலும் தனிமை, ஏகாந்தம் ஆகியவற்றை எழுதிப் பார்த்திருக்கிறார். ‘செல்லும் வழியெல்லாம் / முட்களை பரப்பிச் சென்றான் / அவளின் காயங்களைக் காயப்படுத்த’, ‘பிடிக்க முயல்கையில் / காற்றோடு காற்றாய் / கரைந்து போகிறாய்’, ‘எண்ணங்களால் நிரம்பியது / எனது நாள்காட்டிஎன்று தன்னை வைத்து தனது தனிமையை அதன் சகல குணாதிசயங்களும் நீர்த்துப்போய்விடாத படி எழுதியிருக்கிறார். ‘துளிர்விடவும் / உதிரவும் காரணம் / கேட்காத காற்று / அதன் இஷ்டத்திற்கு / ஆட்டிவிட்டுச் செல்கிறது / கிளையைஎன்று தன்னை ஒரு தனி மரமாகவும் சூழலால் தான் கேட்பாரற்று இம்சிக்கப்படுவதையும் காதலாகவும் தாபமாகவும் தொனிக்கும்படி எழுதியிருப்பது அமுதா ஆர்த்தியின் எழுத்துகள் மீது வசீகரத்தை உண்டாக்கிவிடுகிறது. இதை அவரது அடையாளமாக எடுத்துச்செல்வாரேயானால் சமகால பெண் எழுத்தில் தவிர்க்க முடியாதவராக இருப்பார். நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துக்கள்.

.......


Comments

Popular posts from this blog

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும்

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும் 1933 இல் எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதிய நூல் சதபத பிராமணம். வேதங்கள் , உபநிடதங்கள் ஆகியவற்றின் செய்திகளை விளக்கும் வண்ணம் எதையாவது எழுதும் வழக்கமுடைய ஜம்புநாதன் , யசூர் வேதத்தின் சில பகுதிகளை விளக்கும் முகமாக சதபத பிராமணத்தை எழுதியிருக்கிறார். அதில் 88 விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அவர் ‘ கதைகள் ’ என்கிறார். உண்மையில் அவற்றைக் கதைகள் என்று சொல்வது கூட ரெம்ப அதிகம் தான்.  இந்நூலை அவர் ஹரி ஜனங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே விவரிக்கிறார். நூலில் ருத்திரனின் இயல்புகளை விவரிக்கும் அவர் ‘ ருத்திரனின் குணங்கள் அனைத்தும் ஹரிஜனங்களிடம் உள்ளது ’ என்பதாக அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த ஒப்பீட்டின் வழி அவரது அறிவின் அளவு துலக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி நூல் எதற்காக எழுதப்பட்டிருக்கும் என யோசித்தால் ஹரிஜனங்களை இந்துக்களாகச் சித்திரிப்பதே நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சான்றாக , ருத்திரனுக்கும் ஹரிஜனங்களுக்கும் அவர் சொல்லும் ஒற்றுமைக் காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். உலகம் ...