Skip to main content

லி.ராம்ராஜின் கு.அழகிரிசாமி குறித்த நாடகம் : சில புரிதல்கள்

நண்பர் ராம்ராஜ் சமகால தமிழ் நாடகத்தில் முக்கியமானவரத் தெரிகிறார். Campus Theatre என்ற வகைமையை நேர்த்தியாகவும் தொடர்ச்சியாகவும் செய்து கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு 2018 வாக்கில் திண்டுக்கல்லில் அர்ஷியாவின் படைப்புகள் குறித்த ஆய்வரங்கில் ஒரு நாடகத்தை நிகழ்த்தினார். அந்நிகழ்வில் எனது உரையை முடித்துவிட்டு அந்த நாடகத்தைப் பார்த்தேன். ஒரு விசயத்தைப் பேசுவதற்கும் நிகழ்த்துவதற்குமான பாரதூர வேறுபாட்டை அன்று தான் கண்டு உணர்ந்தேன். அது முதலே ராம்ராஜின் அரங்கச் செயல்பாட்டின் மீது எனது பார்வையை வைத்துக் கொண்டே வந்திருக்கிறேன்.

ஐரோப்பிய நாடுகளின் அரசியல், பண்பாட்டு மாற்றங்களில் Campus Theatre முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. அதற்குப் பல முகங்கள் இருந்தாலும் எளியோர்களின் முகங்களைச் சுமந்து வரும்போதெல்லாம் பாசிஸ்ட்டுகளின் தூக்கத்தைக் கெடுக்காமல் அவை இருந்ததில்லை. அதனால் தான் கல்விப் புலத்துக்குள் அதிலும் குறிப்பாக நிறுவனப்படுத்தப்பட்ட அதிகாரம் இருக்குமிடத்தில் நாடகம் என்பது எப்போதும் அச்சத்துடனே அணுகப்படுகிறது.

சமீபத்தில் அருள் ஆனந்தர் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த கு.அழகிரிசாமி குறித்த கருத்தரங்கில் அவரது படைப்புகளை மையப்படுத்தி நாடகம் ஒன்றை நிகழ்த்தினார். கதை, கட்டுரை, கடிதம் என்று கலந்துகட்டி அது ஒருவகையிலான Colace Type Ply என்று சொல்லும் வகையில் இருந்தது. அழகிரிசாமி பசி, வறுமை, துரோகம், ஏமாற்றம், இழப்பு, வலி என்று எழுதிய கதைகளை நேர்கோடற்ற தன்மையில் இணைத்து நிகழ்த்தினார் ராம்ராஜ்.



ஒருவரின் ஒரு பிரதியை நடிப்புக்கு உகந்த வகையில் மாற்றியதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. ஆனால் ஒரு படைப்பாளியின் பல பிரதிகளைக் களைத்துப் போட்டு ஒரு நாடகமாக்குதல் என்பது அந்தப் படைப்பாளியை அவரது கருத்தியல் அடிப்படையில் உட்கிரகித்துக் கொள்ள உதவக் கூடும் என்பதை ராம்ராஜ் தனது அசாத்திய நடிப்பு, இயக்கத்தின் வழி பார்வையாளர்களுக்குக் கடத்தினார். ராம்ராஜ் வெற்றி பெற்ற இடம் இது தான் என்பேன்.

ராம்ராஜோடு ரிதன்யா சாருமதி, ஜாக்குலின் பாய் ரம்யா என்னும் இரு மாணவிகள் நடித்தனர். இருவருமே தங்களது உடல்மொழியை வகிபாகமாக்கிக் கொள்ளும் வகையில் உரையாடல் அமைக்கப்பட்டு இருந்தது. அது நாடகத்தை அழகாக்கியது. Dominate Acting இல்லாமல் சம அளவிலான நடிப்பைச் சக நடிகர்களுக்குப் பகிர்ந்து கொடுத்ததன் வழி தனது ‘இயக்குநர்’ பொறுப்பை உன்னதப்படுத்தி இருந்தார். எல்லோருக்கும் இந்த மனம் வாய்க்காது. பெண்கள் இருவரும் அனுபவ முதிர்ச்சியோடு நடித்தார்கள். அவர்களுக்கு இது முதல் நாடகமாக இருக்கும் பட்சத்தில் அளவுக்கு அதிகமான திறமையை வெளிப்படுத்தினார்கள் என்றே சொல்வேன். நிகழ்வை முழுமையாகப் பார்த்த அழகிரிசாமியின் மகன் சாரங்கன் தனது தந்தையை, தந்தையின் படைப்பை இந்தக் கோணத்தில் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். உணர்ச்சிப் பெருக்கில் உட்கார்ந்து இருந்தார்.

இது ராம்ராஜூக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும். புதியதாய் முயன்று பார்க்கும் எல்லா கலைஞனுக்கும் நேரக்கூடிய அனைத்தும் ராம்ராஜூக்கும் நேரும். அவர் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. வழக்கம் போல தமிழ்ச் சூழலுக்குப் புதியதான நாடகங்களைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும். சமூகத்தின் பைத்தியகாரத் தன்மையை ஒரு கலைஞன் மட்டுமே நேர் செய்ய முடியும். ராம்ராஜ் அதைச் செய்வார் என்று நம்புகிறேன். அவருக்கும் அவரது குழுவினருக்கும் அன்பும் பாராட்டும்.

...........

Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ்: தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சி

ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சிவில் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவர் ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் (Hosea Lorenzo Williams). போராட்டக் களத்தில் வெகுஜன உளவியலின் உருவாக்கத் தேவையை நன்கு அறிந்திருந்த அவர் , சமகாலத் தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ளப் பங்களித்து இருக்கிறார் . சர்வதேசிய அளவில் சிவில் உரிமைப் போராட்டக் களத்தின் எதார்த்த முகமாக இன்று அடையாளம் காணப்பட்டிருக்கும் வில்லியம்ஸ் ஜனநாயகம் , அகிம்சை , அரச வன்முறை , ஊடக அரசியல் , வர்க்கம் , இனம் ஆகியவற்றின் சந்திப்பில் உருவாகும் பெரியதொரு அரசியல் கேள்வியை அவர் காலத்தில் தம் வாழ்வனுபவத்தின் வழி எழுப்பியிருந்தார் . தேர்தல் பாதையில் அரசமைக்கும் நாடுகளுக்கான கேள்வி அது . ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் மதநீதியும் அரசியலும் வில்லியம்ஸ் 1926 ஜனவரி 5 ஆம் தேதி , அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் பிறந்தவர் . ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு கல்வி , வேலை , வீடு , வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்த ஜிம் க்ரோ (Jim Crow ) சட்டங்கள் அமலில் இருந்தபோது இளமைப் பருவத்தைக் கடந்தவர் . இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவத்...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...