Skip to main content

பெண் – பதிவிரதை X தடிக்கழுதை

 

பெண் – பதிவிரதை X தடிக்கழுதை

ஞா.குருசாமி

‘தடிக்கழுதை பாட்டு என்று ஒரு நூல். இதில் ஆண்பிள்ளை வீண்பிள்ளை’, விலைமாதர் கும்மி என்ற நூலும் உள்ளடங்கி இருக்கிறது. 1914 ஆம் வருடம் மதறாஸ் என்.சி,கோள்டன் (கோல்டன்?) அச்சியந்திர சாலையில் திருப்போரூர் டி கோபால் நாயகர் இந்த மூன்று நூல்களையும் ஒருங்கே பதிப்பித்திருக்கிறார்.  அதற்கு முன்னால் 1905 வருடம் மயிலம் சுப்பிரமணியசுவாமிகளால் பார்வையிடப்பட்டு பார்த்தசாரதி நாயுடுவின் அச்சகத்தில் அச்சிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சிறுமணவூர் முனியசாமி முதலியார் இந்த நூல்களை எழுதியதாகத் தெரிகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 19 ஆம் நூற்றாண்டில் மத்திய பகுதி வரை தனியொரு மனிதனாக ஏராளமான நூல்களை எழுதியவராகவும் பதிப்பித்தவராகவும் தெரிகிறார். சிறுமணவூர் முனியசாமி முதலியார் (இனி முனியசாமி எனச் சுட்டலாம்). இவர் குறித்து வீ.அரசு கட்டுரை ஒன்றைக் கூட எழுதியிருக்கிறார். அச்சு பண்பாட்டில் முனியசாமியின் பங்களிப்பை பதிவு செய்வதாக அந்த கட்டுரை அமைந்திருக்கிறது. நிற்க.

18 ,19 ஆம் நூற்றாண்டுகளில் உருவான தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமானவரான முனியசாமியின் தடிக்கழுதைப்பாட்டு நூல் பற்றி சில குறிப்புகளை பகிர்வதென்பது அவசியமாகப்பட்டது. அந்நூலில் 24 பாடல்களில் பதிவிரதை x டிக்கழுதை என்று பெண்களை இரண்டு வகையாகப் பகுத்து பதிவிரதைக்கும் தடிக்கழுதைக்கும் இலக்கணம் (?) தருகிறார். பதிவிரதைக்கு அவர் தரும் இலக்கணம் கீழ்வருமாறு

1.    அன்னை தந்தையை தினமும் அன்பால் உபசரிப்பவள்

2.    மோசமான கணவனாக இருந்தாலும் அவனை வணக்கம் செய்பவள்

3.    மூடனாக கணவன் இருந்த போதும் அவனை தன்மையுடன் நடத்துபவள்

4.    மாமியார் அடித்தாலும் மௌனமாய் இருப்பவள்

5.    கணவன் சம்பாத்தியம் அறிந்து செலவு செய்பவள்

6.    தலை குனிந்து நடப்பவள்

7.    அந்நிய ஆண்கள் மீது ஆசை கொள்ளாதவள்

8.    பூ வைத்துக் கொண்டு தெருவில் போகக் கூச்சப்படுபவள்

9.    கணவன், மாமியார், மாமனார் அடித்தாலும் அமைதியாக இருப்பவள்

10. காலையில் எழுந்து கணவன் பாதம் தொழுபவள்

11. பசித்து வருவோருக்கு அன்னமிடுபவள்

12. அண்டை, எதிர் வீட்டுக்குப் போகாதவள்

13. தங்கமின்றி கயிறாக மட்டுமே தாலி கட்டி இருந்தாலும் கணவனை வெறுக்காதவள்

14. வாசப்படி கடந்தால் குற்றமாகும் எனக் கருதுபவள்

15. குடும்பம் சிதையாமல் இருக்க வேண்டும் என நினைப்பவள்

16. கணவன் அழகில்லாமல் இருந்தாலும் அவனை நேசிக்கிறவள்

17. கணவனுக்கு முன் எழுபவள்

18. அறம் செய்பவள்

19. உண்டி சுருக்குபவள்

20. ஊரை பகைக்காதவள்

21. சக்காளத்தி பிள்ளையையும் தன் பிள்ளைபோல் சமமாகப் பார்ப்பவள்

22. பிச்சை கேட்பவனுக்கு பிச்சை தருபவள்

23. அணிகலன் அணிந்து தெருவில் நடக்காதவள்

24. முனியசாமி என்னும் எனது வார்த்தைக்கு ஏற்ப நடப்பவள் பதிவிரதை 

 

‘தடிக்கழுதை’ யாவள்? என்பதற்கு சில இலக்கணம் தருகிறார். அவை கீழ்வருமாறு

1.    துரோகி என்னும் பெயரை ஏற்றுக் கொள்பவள்

2.    கணவனோடு சண்டை செய்பவள்

3.    மன்னனாக இருந்தால் கூட மதிக்காமல் பேசுபவள்

4.    யாரையும் அறியாமல் இருப்பவள்

5.    கணவனை கடனாளியாக்குபவள்

6.    தெரு சண்டை செய்பவள்

7.    எல்லா சாதி ஆண்கள் மீதும் இச்சை கொண்டு அலைபவள்

8.    பூ முடித்து வம்பு செய்பவள்

9.    கணவன் மாமி மாமியாரை சண்டைக்கிழுத்து மானம் கெடுப்பவள்

10. வேலை செய்யாமல் பாயில் சோம்பலாய்க் கிடப்பவள்

11. பசித்து வருவோருக்கு அன்னம் இடாதவள்

12. கண்ட கண்ட இடம் திரிந்து சண்டை இழுத்து வருபவள்

13. கணவன் இயலாமையை சுட்டுபவள்

14. எல்லா வீடுகளிலும் பேசி சண்டை செய்பவள்

15. குடும்பத்தைச் சிதைப்பவள்

16. அழகாய் வரும் எந்த ஆணோடும் சேர்கிறவள்

17. கணவனுக்கு பின் எழுபவள்

18. அறம் செய்கிறவரை தடுப்பவள்

19. கண்ட பாட்டுக்களையும் ஆட்டங்களையும் பார்த்து கைவீசித் திரிகிறவள்

20. அனைவரிடமும் வம்பு வளர்ப்பவள்

21. ஒழுக்கம் உடைய பிள்ளையையும் மிரட்டுகிறவள்

22. பிச்சை கேட்டு வருகிறவரை ஏசி விரட்டுகிறவள்

23. அலங்கரித்துக் கொண்டு தெருவில் நடக்கிறவள்

24. இதெல்லாம் ஒரு  புத்தகமென்று எழுதி இருக்கிறாரே முனியசாமி  என்று பரிகசிப்பவள் தடிக்கழுதை

என்று தடிக்கழுதை பற்றிய இலக்கணத்தை தருகிறார்.

பெண் தனக்கெதிரான வன்முறைகளை எதிர்க்காதவளாக இருப்பவளும், வீட்டைத் தாண்டி வெளியே வராமல் இருப்பவளும் பதிவிரதை. கணவன், மாமி, மாமனாராக இருந்தபோதும் அவர்களுக்கு எதிராக இருப்பவள், தன்னை அலங்கரித்துக் கொண்டு வீதியில் வலம் வருகிறவள் தடிக்கழுதை என்கிறார் முனியசாமி. இது முனியசாமியின் படைப்புகளுள் ஒன்று பற்றிய சிறிய அறிமுகம் மட்டுமே. மற்றொரு சூழலில் விரிவாக ஆய்வு செய்து பேசலாம். தடிக்கழுதைப் பாட்டு நூலிம் முதல் பக்கம் கீழே…


தடிக்கழுதைப் பாட்டு நூலின் முதல் பக்கம் 

பதிவிரதை - தடிக்கழுதை படங்கள்




Comments

Popular posts from this blog

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும்

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும் 1933 இல் எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதிய நூல் சதபத பிராமணம். வேதங்கள் , உபநிடதங்கள் ஆகியவற்றின் செய்திகளை விளக்கும் வண்ணம் எதையாவது எழுதும் வழக்கமுடைய ஜம்புநாதன் , யசூர் வேதத்தின் சில பகுதிகளை விளக்கும் முகமாக சதபத பிராமணத்தை எழுதியிருக்கிறார். அதில் 88 விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அவர் ‘ கதைகள் ’ என்கிறார். உண்மையில் அவற்றைக் கதைகள் என்று சொல்வது கூட ரெம்ப அதிகம் தான்.  இந்நூலை அவர் ஹரி ஜனங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே விவரிக்கிறார். நூலில் ருத்திரனின் இயல்புகளை விவரிக்கும் அவர் ‘ ருத்திரனின் குணங்கள் அனைத்தும் ஹரிஜனங்களிடம் உள்ளது ’ என்பதாக அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த ஒப்பீட்டின் வழி அவரது அறிவின் அளவு துலக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி நூல் எதற்காக எழுதப்பட்டிருக்கும் என யோசித்தால் ஹரிஜனங்களை இந்துக்களாகச் சித்திரிப்பதே நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சான்றாக , ருத்திரனுக்கும் ஹரிஜனங்களுக்கும் அவர் சொல்லும் ஒற்றுமைக் காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். உலகம் ...