Skip to main content

அண்ணாவின் நாடகங்கள்

 

அண்ணாவின் நாடகங்கள்

ஞா.குருசாமி

jeyaseelanphd@yahoo.in

படைப்பாளியின் படைப்பு மனம் சுயம்பல்ல. அது வேறு சில கருத்தியல்களின் கூட்டுப் பிழிவு. ஆழ்மனதில் எப்போழுதோ பதிவான ஏதோ ஒன்று அதற்கேற்ற சூழல் அமையும் போது படைப்பாக மாறுகிறது. மொழிசூழல்கருத்தியல் ஆகியன ஒருங்கிணையும் புள்ளி படைப்பு மனமாக மாறும். அதனாலேயே படைப்புகள் மொழி, சூழல், கருத்தியல்களைப் பிரதிபலிப்பனவாக இருக்கும். அண்ணாவின் நாடங்களைப் புரிந்து கொள்வதற்கு அவரது காலத்திய சூழல், கருத்தியலைப் புரிந்தாக வேண்டும்.

1916 நவம்பர் 20 இல் தொடங்கப் பெற்ற நீதிக்கட்சி தமிழகத்தில் 1920 டிசம்பர் முதல் 1937 வரை ஆட்சியில் இருந்தது. 1937 முதல் 1967 வரை இடையில் ஒரு ஆறு வருடங்களை தவிர்த்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 1967இல் திமுக வெற்றி பெற்றது. அண்ணா முதலமைச்சர் ஆனார். அண்ணா 1920 களில் நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்டது, பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டது. பெரியாரிடம் முரண்பட்டது, திமுகவை ஆரம்பித்தது ஆகியன அண்ணாவின் அரசியல் பயணத்தில் முக்கியமானவை. இந்நான்கு கட்டத்திலும் அண்ணாவின் படைப்பு மனம் ஒரே மாதிரியாக இல்லை.

1935 இல் திருப்பூரில் நடந்த செங்குந்த இளைஞர் மாநாட்டில் பெரியாரை அண்ணா முதன்முதலாகச் சந்திக்கிறார். 1937 இல் பெரியாரின் குடியரசு இதழுக்குத் துணையாசிரியராகப் பொறுப்பேற்கிறார். 1944 இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறியது.

1949-இல் அண்ணா பெரியாரை விட்டு பிரிகிறார். ஆனால் அதற்கு முன்பாகவே 1944 இல் வேலைக்காரி நாடகத்தில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என பேசத் தொடங்கி விட்டார். பெரியாரோடு இருந்த போது அண்ணாவின் எழுத்துகளில் பிராமண எதிர்ப்பு இருந்தது. பெரியாரைப் பிரிந்த பின் அவரிடம் ஜமீன்தார், பண்ணையார்கள் குறித்த எதிர்ப்புகளே இருந்தன. ஜமீன்தார்களையும் பண்ணையார்களையும் எதிர்ப்பது அண்ணாவின் கொள்கையாக இல்லை. மாறாக அது அன்றைய பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வெறுப்பாக இருந்தது. மக்களின் வெறுப்பைத் திரளாக்கி அவர்களை அரசியல் மையப்படுத்தினால் தான், தானொரு வெகுஜன தலைவராக உருவெடுக்க முடியும் என அண்ணா நம்பினார். அதனால் தான் அவரது பிற்கால நாடகங்கள் ஜமீன்தார் பண்ணையார்களை எதிரிகளாக சித்தரித்தன.

கலைகள் மக்களின் பகுத்தறிவை மழுங்கடித்து விடும் என்று பெரியார் எழுதியும் பேசியும் வந்த காலத்தில் 1944 இல் ஈரோட்டில் டி.கே.சண்முகம் குழுவினரின் சார்பாக தமிழ் மாகாண நாடகக் கலை அபிவிருத்தி மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அண்ணா, புராண இதிகாச நாடகங்களை விட்டுவிட்டு பகுத்தறிவு நாடகங்களை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று பேசினார். 1944 இல் திராவிடர் கழகத்தின் தலைவராக பெரியாரும் அதன் பொதுச்செயலாளராக அண்ணாவும் இருக்கிறார். அதே காலத்தில் பெரியார் குடியரசு இதழையும், அண்ணா திராவிட நாடு இதழையும் தனித்தனியாக நடத்தி வருகிறார்கள். டி.கே.சண்முகம் குழுவினரின் மாநாட்டை பெரியார் குடியரசில் படுதோல்வி என்ற எழுத, அண்ணா திராவிட நாட்டில் வெற்றி என்று எழுதினார்.

 1947 - இல் இந்தியா விடுதலை பெற்றதை பெரியார் துக்க நாளாகக் கடைப்பிடித்தார். அண்ணா இன்ப நாளாகக் கொண்டாடினார். இதனூடே 1947 இல் நடந்த திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் அண்ணா கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்டவர்கள் மறைமுகமாக அண்ணாவைத் தாக்கி பேசினார்கள். அதை மறுத்து பேசும் சூழல் அண்ணாவுக்கு உருவாகியது. பெரியார் நீதிக்கட்சியாக இருந்ததை திராவிடர் கழகமாக மாற்றி, தேர்தல் அரசியலில் இருந்து திராவிடர் கழகத்தை முழுமையாக விடுவிக்கிறார். காங்கிரசுக்குச் சரியான எதிர்க்கட்சி இல்லாத சூழலில் அதை தனக்குச் சாதமாக மாற்றுகிறார் அண்ணா.

சமுதாயத்தில் சீர்திருத்தம், பொருளாதாரத்தில் சமதர்மக் கொள்கை, அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுதலை என்ற கொள்கை தான் திமுகவின் கொள்கை என்று அக்கட்சி தொடங்கப்பட்ட முதல் கூட்டத்தில் அண்ணா பேசினார். அதே கூட்டத்தில் அவர் தம்மோடு இணைந்து பணி செய்ய வருமாறு கம்யூனிஸ்ட்டுகளை அழைத்தார்

1935 முதல் 1949 வரை பெரியாரோடு பணி செய்த காலத்தில் அண்ணா எழுதிய நாடகங்கள் பிராமண எதிர்ப்பை முதன்மையாகவும் அதற்குப் பிறகு எழுதிய நாடகங்கள் பிராமண எதிர்ப்பை பின்னுக்குத் தள்ளி ஜமீன்தார் பண்ணையார் எதிர்ப்பு, கம்யூனிசம் போன்றவற்றை முதன்மை படுத்திய நாடகங்களாக வெளிவந்தன. நாடகங்களைப் புனைவதற்கு அன்றாட பத்திரிகை செய்திகள், வரலாறு, புராண இதிகாசங்கள் ஆகியவற்றைச் சூழலாகக் கொண்டார்.

1949-ஆம் ஆண்டு வேலைக்காரி திரைப்படமாக வெளிவந்தது. தெய்வங்களையும் அரசர்களையும் பேசுபொருளாகவும் படத்தின் தலைப்பாகவும் கொண்டு வெளியான தமிழ் திரைப்பட வரலாற்றில் வேலைக்காரி என்ற பெயர் அண்ணாவை மாற்றுச் சிந்தனையாளராகக் காட்டியது. இதுதான் அண்ணாவை வெகுமக்களிடம் நெருக்கமாகக் கொண்டுசேர்த்தது. அதற்குப் பிறகு அவரது எழுத்துகளில் காங்கிரஸார் பற்றிய விமர்சனம் கூடுதல் கூர்மை பெற்றிருந்தது.

Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

  ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து…. ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன. இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம்...

ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ்: தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சி

ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சிவில் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவர் ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் (Hosea Lorenzo Williams). போராட்டக் களத்தில் வெகுஜன உளவியலின் உருவாக்கத் தேவையை நன்கு அறிந்திருந்த அவர் , சமகாலத் தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ளப் பங்களித்து இருக்கிறார் . சர்வதேசிய அளவில் சிவில் உரிமைப் போராட்டக் களத்தின் எதார்த்த முகமாக இன்று அடையாளம் காணப்பட்டிருக்கும் வில்லியம்ஸ் ஜனநாயகம் , அகிம்சை , அரச வன்முறை , ஊடக அரசியல் , வர்க்கம் , இனம் ஆகியவற்றின் சந்திப்பில் உருவாகும் பெரியதொரு அரசியல் கேள்வியை அவர் காலத்தில் தம் வாழ்வனுபவத்தின் வழி எழுப்பியிருந்தார் . தேர்தல் பாதையில் அரசமைக்கும் நாடுகளுக்கான கேள்வி அது . ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் மதநீதியும் அரசியலும் வில்லியம்ஸ் 1926 ஜனவரி 5 ஆம் தேதி , அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் பிறந்தவர் . ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு கல்வி , வேலை , வீடு , வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்த ஜிம் க்ரோ (Jim Crow ) சட்டங்கள் அமலில் இருந்தபோது இளமைப் பருவத்தைக் கடந்தவர் . இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவத்...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...