Skip to main content

பா.திருச்செந்தாழையின் ‘வீழ்ச்சி’யும் இளங்கோவன் முத்தையாவின் ‘துறப்பு’ம்

 

பா.திருச்செந்தாழையின் ‘வீழ்ச்சி’யும்

இளங்கோவன் முத்தையாவின் ‘துறப்பு’ம்

ஞா.குருசாமி

இன்று (25.07.2022) தமிழினியில் பா. திருச்செந்தாழையின் வீழ்ச்சி கதை வெளியாகியிருக்கிறது. வழமையான ஒரு நடத்தையை புதியதொரு உத்தியிலும் சொல்ல முடியும் என்பதற்கு அவரின் ‘தேவைகள்’ கதை நல்ல உதாரணம். அதற்குப் பிறகு அவருடைய கதைகளை விரும்பி வாசித்தேன். சமீபத்தில் வெளியான அவரது ‘விலாஸம்’ கதைத் தொகுதி, கதை சொல்லலின் பல புதிய கோணங்களைப் பரிசோதித்திருந்தது.


திருச்செந்தாழையின் கதைகள் வணிக உலகத்தின் ஏற்றம், மாற்றம், துரோகம், போலியான கரிசனம், பெருவணிகத்தின் வரவு, சிதறும் சிறுவணிகம், வணிகத்தில் தாக்குப் பிடிக்கும் வல்லமை பற்றி அசாத்தியமான புனைவில் அமைந்தவை. வணிகம் என்பது வணிக லாபம் பார்ப்பது மட்டுமல்ல. சக வணிகனை வெல்வதும், களத்தை விட்டே துரத்தியடிப்பதும் வணிகம் தான் என்பதை வேறுவேறு கோணத்தில் நின்று வாசகனை உணர வைப்பவை.

சிவபாலன், சகுந்தலா, தினகரன், காசி நால்வரும் தான் வீழ்ச்சி கதையின் முக்கியப் பாத்திரங்கள். சகுந்தலாவின் அப்பா பெரிய அளவில் இரட்டை மாடி மளிகைக்கடை நடத்தியவர். தொழில் வீழ்ச்சி அடைந்து இன்று தீப்பெட்டி அளவிலான கடையில் இருந்து தொழில் செய்கிறவர். அவரது வீழ்ச்சிக்கான காரணம் யாராலும் அறியப்படாததாக இருக்கிறது. அவரே உணர்ந்தும் உணராமலும் தன்னைக் காட்டிக் கொள்கிறார். கடனுக்குச் சரக்குக் கொடுத்த கணக்கை எழுதிவைத்த கணக்குச்சிட்டையில் காரணம் கண்டு பிடிக்க முயல்கிறாள் சகுந்தலா. ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து மிகச் சரியாக் கணிக்கிறாள் சகுந்தலா.  

தினகரன் சகுந்தலாவின் கணவன். செல்வந்தன். பணத்தை எண்ணிப் பார்க்காமலேயே அள்ளி செலவழிப்பவன். பணம் கொடுத்து செலவு போக வாங்கும் மீதப் பணம் எவ்வளவு என்றாலும் எண்ணி பார்க்காமலேயே பையில் வைத்துக் கொள்கிறவன். வியாபார உலகின் சூது அறியாதவன்.

சிவபாலன் சகுந்தலாவின் மகன். பத்து வயது சிறுவன். விளையாட்டுப் பிள்ளை. அடித்தாலும் சிரித்துக்கொண்டே இருக்கும் வெகுளி. வயதுக்கும் உடலுக்கும் அறிவுக்கும் இயைபு இல்லாதவன். காசி சூதன். தினகரனின் குடும்ப உதவியில் தொழில் தொடங்கியவன்.

சகுந்தலாவின் பிறந்த வீடும் புகுந்த வீடும் வியாபாரத்தில் நட்டமடைந்து அதலபாதாளத்தில் கிடக்கும் போது ,அதிலிருந்து மீண்டும் விட எத்தடனிக்கும் சகுந்தலா பற்றிய விவரிப்பு கதையின் முக்கியமான இடம். வணிக உலகில் சக வணிகனிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் துரோகம் இழைக்கப்படலாம் என்பதை, காசி வழியாகச் சித்தரித்த இடம் யதார்த்தம் தாண்டிய, வாசகனுக்குள் உறைநிலையை ஏற்படுத்தும் பாடியானது.

கடன்பட்டு சகுந்தலா வேறொரு ஊருக்கு ஓடிய பின் காசியுடன் விட்டுவந்த தன் மகன் சிவபாலனைப் பார்க்க போகிறாள். சிவபாலன் அங்கு மூட்டை தூக்குபவனாக இருக்கிறான். சிவபாலனின் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவரின் ஒத்துழைப்பால் தான் இன்றைக்கு வணிகத்தில் இருக்கிறோம் என்பது காசிக்கு தெரியும். என்ற போதிலும் நிராதரவாக விட்டு விட்டுப் போன  குழந்தைத்தனம் மாறாத சிவபாலனை மூட்டை தூக்க வைக்கிறார் காசி. தன் மகன் மூட்டைதான் தூக்கியிருக்கிறான் என்பதைத் தெரிந்துவிட்ட சகுந்தாவின் முன் சமாளிக்கும் காசியை  சிவபாலன் பார்க்கும் பார்வை, காசிக்கும் சகுந்தலாவுக்கும் வேறுவேறு உணர்வைக் கடத்துவது அருமை.

 சகுந்தலாவின் கனவு, காசிக்கு மீன் வைப்பது, சகுந்தலாவின் மாமனார் புரிதல், கோழியின் சிலிர்ப்பு ஆகிய விவரிப்புகளைக் கதையின் போக்கோடு தொடர்பு படுத்தி இருக்கும் இடம் அழகு.

சகுந்தலாவைப் புரிந்து கொள்ள கதையில் வரும் உருவங்களும் பூடக விவரிப்புகளும் முக்கியமானவை. உருவங்கள் வழியாக கதைக்குள் கதை சொல்ல முடியும், வாசகனின் மனவெளியை அவனுக்குள் அவனையே விஸ்தரிக்க வைக்கும் கலையை நிகழ்த்தி விடமுடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தக் கதையை உறுதியாகச் சொல்லலாம்.

இதே தமிழினியில் இளங்கோவன் முத்தையா எழுதிய ‘துறப்பு’ கதையும் வெளியாகி இருக்கிறது. அது, உதாசீனம், புறக்கணிப்புக்கு மத்தியில் தீவிர திடீர் நோயாளியின் உலகம் பற்றியது. விபத்தில் சிக்கி குழந்தையோடு மருத்துவமனையில் தானே நடந்து வந்து சேர்கிறார். குழந்தை எதுவும் அறியாமல் விளையாடிக்கொண்டே போனில் இருக்கிறது. வரும் அழைப்புகளைத் துண்டித்துவிட்டு விளையாடுகிறது. தன்னைப்பற்றி எந்த தகவலும் சொல்லாமலே சுயநினைவற்றுப் போகிறாள். அது பற்றி குழந்தை எதுவுமே அறியாமல் சார்ஜ் தீர்ந்து போன போனுக்காக சார்ஜர் கேட்டுத் திரிகிறது. பொறுப்பற்ற, சுற்றி நடப்பவற்றைக் கவனிக்க விரும்பாத, உறவுகளின் மீது பிடிப்பற்ற மனிதர்கள் சூழ் உலகமொன்று உருவாகிவிட்டதைச் சித்திரிக்கும் இந்தக் கதையின் மொழி முன்னும் பின்னும் ஒட்டாமல் இருக்கிறது. கதையின் நுவல்பொருள் சமகாலத்தின் பேரவலம்.

.......................

Comments

Popular posts from this blog

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும்

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும் 1933 இல் எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதிய நூல் சதபத பிராமணம். வேதங்கள் , உபநிடதங்கள் ஆகியவற்றின் செய்திகளை விளக்கும் வண்ணம் எதையாவது எழுதும் வழக்கமுடைய ஜம்புநாதன் , யசூர் வேதத்தின் சில பகுதிகளை விளக்கும் முகமாக சதபத பிராமணத்தை எழுதியிருக்கிறார். அதில் 88 விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அவர் ‘ கதைகள் ’ என்கிறார். உண்மையில் அவற்றைக் கதைகள் என்று சொல்வது கூட ரெம்ப அதிகம் தான்.  இந்நூலை அவர் ஹரி ஜனங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே விவரிக்கிறார். நூலில் ருத்திரனின் இயல்புகளை விவரிக்கும் அவர் ‘ ருத்திரனின் குணங்கள் அனைத்தும் ஹரிஜனங்களிடம் உள்ளது ’ என்பதாக அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த ஒப்பீட்டின் வழி அவரது அறிவின் அளவு துலக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி நூல் எதற்காக எழுதப்பட்டிருக்கும் என யோசித்தால் ஹரிஜனங்களை இந்துக்களாகச் சித்திரிப்பதே நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சான்றாக , ருத்திரனுக்கும் ஹரிஜனங்களுக்கும் அவர் சொல்லும் ஒற்றுமைக் காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். உலகம் ...