Skip to main content

கு.இலக்கியனின் ‘காத்தாள்’ கதை

 


கு
.இலக்கியனின்காத்தாள்கதை

பணம் இருந்தால் குற்றக்கண்மாயின் கசிவை அடைத்து விடலாம் என்பது ஓர் அசைக்க முடியாத கருத்தியலாகவே இருந்து வருகிறது. அதை இலக்கியம் சினிமாக்கள் நிறைய பேசியிருக்கின்றன. ஒரே விஷயத்தை ஏன் திரும்பத் திரும்ப பேச வேண்டும் என நான் யோசித்தது உண்டு. ஆனாலும் பேச வேண்டிய தேவை இருப்பதை சீக்கிரமே கண்டு கொண்டேன். ஒரே விஷயம் ஒரே மாதிரி நடப்பதில்லை. வேறுபாடுகள் உண்டு. வேறுபாடுகளைப் பேச வேண்டும். வேறுபாடுகள் போதி மரங்கள். வேறுபாடுகளைச் சரியாக புரிந்து கொண்டவர்கள் வேஷமற்ற வெகுமக்களின் அரசியலைப் பேசுகிறவர்களாக இருப்பார்கள். அத்தகையோர்களை உருவாக்கிக் கொண்டே இருப்பதற்கு ஒரே விஷயங்களின் வேறுபாடுகளை எல்லா வடிவங்களிலும் பேச வேண்டியிருக்கிறது. அப்படி பேசிய கதை தான் கு.இலக்கியனின்காத்தாள் கதை. 2022 ஜூலை நீலம் இதழில் வெளியாகியிருக்கிறது.

பூவான். காத்தாள், கொயிந்துப் பண்ணை மூவரும் கதையின் முக்கிய புள்ளிகள். பூவான் பசுஞ்சோலைக் கிராமத்தின் பரம்பரை வெட்டியான். பிணம் எரிக்க மேடை தயார் பண்ணுவது, விறகு அடுக்குவது, வேகாத எலும்புகளைப் பொறுக்கிப் புதைப்பது ஆகியவற்றில் நிபுணன். யாரும் இல்லாத தனி ஆள். நெஞ்சுரம் கொண்டவன்.

காத்தாள் அவள் அம்மாவோடு அறுவடை காலத்தில் அறுப்பு அறுத்து பஞ்சம் பிழைக்க பசுஞ்சோலை கிராமத்திற்கு வந்தவள். காத்தாளுக்கு அவள் அம்மாவை தவிர நாதியில்லை. அவள் அம்மாவும் நாதியற்றவள். தனி ஆள். காத்தாளின் அம்மா காத்தாள் பிறப்பதற்கு முன்பிருந்தே பசுஞ்சோலை கிராமத்திற்கு அறுவடைக்கு வந்து போனவள். இப்போது வயது வந்த மகளோடு வந்திருக்கிறாள். வந்த இடத்தில் கடும்காய்ச்சல் உண்டாகி இறந்து விட்டாள். அவளை அடக்கம் செய்ய வேண்டும். நாதியற்றவர்களுக்கு நாதியற்றவர்களே துணை என்பது போல பூவான் காத்தாளின் அம்மாவை தோளில் தூக்கிக்கொண்டு சுடுகாடு செல்கிறான். ஊர்க்காரர்கள் வழி மறிக்கிறார்கள். ஊரோடு சம்பந்தமில்லாதவர்களை அதுவும் பஞ்சம் பிழைக்க வந்தவர்களையெல்லாம் ஊர் சுடுகாட்டில் எரிக்க அனுமதிக்க முடியாது என்கிறார்கள். பூவான் பேசிப் பார்க்கிறான். யாரும் ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. சட்டென்று காத்தாளின் கையைப் பிடித்து இப்போது முதல் இவள் என் பொஞ்சாதி இனி இவளுக்கும் இந்த ஊருக்கும் சம்பந்தம் உண்டு என்கிறான். ஊர் என்ன செய்வதென்று தெரியாமல் வாய்மூடி வழி விடுகிறது

ஊரின் பெரிய மனிதன் கொயிந்துப் பண்ணை. ஒண்டிக்கட்டை. கல்யாணத்தில் மட்டும் விருப்பம் இல்லாதது போல் காட்டிக்கொண்டவன். திடீரென நெஞ்சு வலி கண்டு சாகக் கிடக்கிறான். பூவானை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்புகிறான் கொயிந்துப் பண்ணை. தனது குடிசையில் இருந்த பூவான் அவசர அவசரமாக கொயிந்துப் பண்ணை வீட்டுக்குள் வருகிறான். வீட்டுக்குள் நுழைகிறான். கொயிந்துப் பண்ணை பூவானை அருகில் வருமாறு அழைத்து பூவானின் காதில் அவனுக்கு மட்டுமே கேட்கும்படி மெல்ல ஏதோ சொல்லுகிறான். சொல்லியதும் இறந்தும் போகிறான்.

பூவான் எரிமேடையைத் தயார் செய்கிறான். கொயிந்துப் பண்ணையின் பிணம் கொண்டுவரப்படுகிறது. தன் மனைவி காத்தாளை வைத்து கொள்ளி வைக்கிறான் பூவான். இந்தப் பொருண்மையில் தான் அந்தக் கதை அமைந்திருக்கிறது.

கதையில் கதைக்கான நடை குறைவாகவும் கட்டுரைக்கான நடை அதிகமாகவும் இருக்கிறது என்றாலும் அது கதை ஓட்டத்திற்குத் தடையாக இல்லை. விளிம்புநிலை மக்கள் வேலைத்தளத்தில் பாலியல் ரீதியாக சுரண்டப்படும் வரலாற்றைப் பதிவு செய்த கதைகளில் இதுவும் ஒன்றுதான் என்றாலும் சில வேறுபாடுகளைக் காட்டி இருக்கிறது. வெட்டியானின் மனைவியான காத்தாளை ஊரின் பெரும்பணக்காரப் பண்ணையின் மகளாக சித்திரித்தது மிக முக்கியமான வேறுபாடு. அதையும் பண்ணையின் வாயாலேயே சொல்ல வைத்தது அரசியல். இன்று உள்ள பண்ணைகளின் நிலங்களில் காத்தாள் போன்ற நிறையப் பெண்களுக்கும் உரிமை இருக்கிறது என்பதையும் பண்ணைகளின்ஒழுக்கத்தையும் பேசிய விதத்தில் இது நல்ல கதை.

ஒருவர் வாழும் போது நேரும் அவமானத்தை விட அவரின் மரணத்தில் நேர்ந்து விடும் அவமானம் துயரமானது’. தலை குனிந்திருப்பவர்கள் தலை நிமிர்ந்து விடுவதை சரியென்று ஏற்றுக் கொள்ளாத சமூகமிது’. பிடித்தவர்களின் அருகாமையற்ற இந்த இரவின் உறக்கத்தைக் கவலைகள் தின்று செரித்துவிடும் என்கிற கவித்துவ விவரிப்புகள் கதையை கதையாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கின்றன. கு.இலக்கியன் இன்னும் நிறைய எழுத வேண்டும்.

…………………………

                            

Comments

Popular posts from this blog

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும்

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும் 1933 இல் எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதிய நூல் சதபத பிராமணம். வேதங்கள் , உபநிடதங்கள் ஆகியவற்றின் செய்திகளை விளக்கும் வண்ணம் எதையாவது எழுதும் வழக்கமுடைய ஜம்புநாதன் , யசூர் வேதத்தின் சில பகுதிகளை விளக்கும் முகமாக சதபத பிராமணத்தை எழுதியிருக்கிறார். அதில் 88 விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அவர் ‘ கதைகள் ’ என்கிறார். உண்மையில் அவற்றைக் கதைகள் என்று சொல்வது கூட ரெம்ப அதிகம் தான்.  இந்நூலை அவர் ஹரி ஜனங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே விவரிக்கிறார். நூலில் ருத்திரனின் இயல்புகளை விவரிக்கும் அவர் ‘ ருத்திரனின் குணங்கள் அனைத்தும் ஹரிஜனங்களிடம் உள்ளது ’ என்பதாக அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த ஒப்பீட்டின் வழி அவரது அறிவின் அளவு துலக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி நூல் எதற்காக எழுதப்பட்டிருக்கும் என யோசித்தால் ஹரிஜனங்களை இந்துக்களாகச் சித்திரிப்பதே நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சான்றாக , ருத்திரனுக்கும் ஹரிஜனங்களுக்கும் அவர் சொல்லும் ஒற்றுமைக் காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். உலகம் ...