Skip to main content

அரசுப் பள்ளி மாணவர்களின் புதிய எதிர்கொள்ளல்…



அரசுப் பள்ளி மாணவர்களின் புதிய எதிர்கொள்ளல்…
ஞா.குருசாமி

          மக்களின் பொறியியல் குறித்த எதிர்மறை எண்ணம் கடந்த ஆண்டை விட இப்பொழுது அதிகரித்திருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிக்குச் செலவிடும் தொகையில் சிறுபகுதியைத் தனியார் பள்ளியில் செலவளித்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குத் தம் பிள்ளைகளைத் தயார் படுத்துவதே நிரந்தர வருவாயுள்ள, நடுத்தர மக்களின் பெருங்கனவாக இருக்கிறது. அது சாத்தியப் படாத பொழுது அவர்களின் அடுத்த இலக்கு பொறியியல். போதிய வேலை வாய்ப்பின்மை, தற்போதைய சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் பொறியியல் இலக்கை மாற்றி இன்று கலை அறிவியல் கல்லூரிகளை நாடத் தொடங்கி விட்டனர். அறிவியலில் இயற்பியல், கணிதப் பட்டப்படிப்புகளுக்கும் கலையியலில் ஆங்கில இலக்கியப் படிப்புக்கும், வணிகவியலுக்கும் மிகுந்த போட்டி ஏற்பட்டிருக்கிறது.
       அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கணிசமான பேரளவில் வெற்றி பெற்று பணிவாய்ப்பு பெற்றுவிடுகின்றனர். கல்வியியல் முடித்த பலர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி இருபத்தைந்து வயதுக்குள் அரசுப் பள்ளியில் ஆசிரியராகி விடுகின்றனர். தனியார் பள்ளிகளிலும் பணி வாய்ப்பு நிரம்ப இருக்கின்றன. இச்சூழலோடு பொறியியலை ஒப்பிடும் மக்களின் மனப்போக்கு கலை அறிவியல் கல்லூரிகளில் அவர்களைத் திருப்பி விட்டிருக்கிறது. அனைத்துக் கலை அறிவியல் கல்லூரிகளிலும் தற்போது விண்ணப்பம் வாங்கவும், சமர்ப்பிக்கவும் நீண்ட வரிசையைக் காண முடிகிறது. நான்காயிரம் இடங்களைக் கொண்டுள்ள பிரபலமான கலை அறிவியல் கல்லூரிகள் சிலவற்றில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் இருபத்தைந்தாயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
    பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் விழுக்காட்டு அடிப்படையில் தனியார் பள்ளி மாணவர்களில் பெரும்பாலும் ஆயிரத்திற்குக் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் குறைவு. அதே போல அரசுப் பள்ளி மாணவர்களில் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களும் மிகமிகக் குறைவு. இந்த வேறுபாடு பாடவாரியாக இருப்பதும் மறுப்பதற்கில்லை. மாநில முழுவதும் பாடவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த 54 மாணவர்களில் அரசுப் பள்ளியில் பயின்றவர்கள் மூவர் மட்டுமே. கன்டோண்மெண்ட் போர்டு பள்ளிகள் 99.20 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் அரசுப் பள்ளிகளில் குறிப்பாக பழங்குடியினர் பள்ளிகள், நகராட்சி, சமூக நலப் பள்ளிகள், வனத்துறை, ஆதி திராடவிடர் நலத்துறைப் பள்ளிகள் 86 விழுக்காட்டிற்கும் குறைவான தேர்ச்சி விகிதங்களையை பெற்றிருக்கின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையில் மதிப்பெண் பெறுவதிலும் தேர்ச்சி விகிதத்திலும் உள்ள இடைவெளி, தொடர்ந்து இருந்துவரும் விஷயம் தான் என்றாலும் அது தற்பொழுது புதியதொரு கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.
    தனியார் பள்ளியில் படித்து மருத்துவம் கிடைக்காத நிலையில் பொறியியல் விருப்பமில்லாமல் இருக்கும் மாணவர்களின் வரவு கலை அறிவியல் கல்லூரிகளில் அதிகரித்துள்ளதால், அதை மட்டுமே நம்பியிருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு மிகவும் பின்னுக்குத் தள்ளப்படுகின்ற சூழல் உருவாகி வருகிறது. கலை அறிவியல் கல்லூரிகள் நிர்ணயிக்கும் கட்ஆஃப் மதிப்பெண் விகிதம் தனியார் பள்ளி மாணவர்களிடமே இருப்பதால் அவர்களே அதிக வாய்ப்பு பெறுகிறார்கள். அறுநூறுக்கும் எண்ணூறுக்கும் இடைப்பட்ட மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களால் உயர்ந்துள்ள கட்ஆஃப் மதிப்பெண்ணைக் கல்லூரியின் அறிவிப்புப் பலகையில் பார்த்து கூசுகின்றனர். ஐநூறுக்கும் அறுநூறுக்கும் இடைப்பட்ட மதிப்பெண் பெற்ற பின்தங்கிய கிராமப்புற அரசுப்பள்ளி ஏழை மாணவர்கள் உயர்கல்வியை நினைத்துக்கூட பார்க்கமுடியாத நிலை உருவாகி வருகிறது. இதனால் சராசரி மற்றும் சராசரிக்கும் குறைவான மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் நிலை கவனப்படுத்த வேண்டியதாக இருக்கிறது.
           அரசுப் பள்ளி மாணவர்களும் உயர்கல்வி பெற ஏதுவாக குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் அவர்களுக்கென்று இடஒதுக்கீடு செய்ய வேண்டியது அரசின் கடமையாக இருக்கிறது. அது இல்லாத பொழுது தனியார் பள்ளி மாணவர்களின் கலை அறிவியல் கல்லூரிக்கான வரவு அரசுப் பள்ளி மாணவர்களைத் துரத்தியடிக்கும் என்பதே நம் கண்முன் நிற்கும் உண்மை.
      பொறியியலை இலக்காகக் கொண்டவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளை நாடுவதாலும், ஓரிடத்திற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களிடையை போட்டி உருவாகியிருப்பதாலும் பெரும்பாலான சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் இவ்வாண்டு கட்டணங்களை உயர்த்தியுள்ளன. இந்தக் கட்டண உயர்வும் தனியார் பள்ளிகளில் இலட்சங்களைக் கொட்டி படித்தவர்களை விட அரசுப் பள்ளிகளில் இலவசமாகப் படித்துத் தேறிய மாணவர்களைப் பாதிக்கும் காரணியாக மாறியுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு தீர்வு காணாவிடில் அரசுப் பள்ளிகள் மீது இருந்து வரும் குறைந்த பட்ச நம்பிக்கையையும் கொன்றொழிக்கத் துணை போவதாகிவிடும்.

Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ்: தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சி

ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சிவில் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவர் ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் (Hosea Lorenzo Williams). போராட்டக் களத்தில் வெகுஜன உளவியலின் உருவாக்கத் தேவையை நன்கு அறிந்திருந்த அவர் , சமகாலத் தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ளப் பங்களித்து இருக்கிறார் . சர்வதேசிய அளவில் சிவில் உரிமைப் போராட்டக் களத்தின் எதார்த்த முகமாக இன்று அடையாளம் காணப்பட்டிருக்கும் வில்லியம்ஸ் ஜனநாயகம் , அகிம்சை , அரச வன்முறை , ஊடக அரசியல் , வர்க்கம் , இனம் ஆகியவற்றின் சந்திப்பில் உருவாகும் பெரியதொரு அரசியல் கேள்வியை அவர் காலத்தில் தம் வாழ்வனுபவத்தின் வழி எழுப்பியிருந்தார் . தேர்தல் பாதையில் அரசமைக்கும் நாடுகளுக்கான கேள்வி அது . ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் மதநீதியும் அரசியலும் வில்லியம்ஸ் 1926 ஜனவரி 5 ஆம் தேதி , அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் பிறந்தவர் . ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு கல்வி , வேலை , வீடு , வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்த ஜிம் க்ரோ (Jim Crow ) சட்டங்கள் அமலில் இருந்தபோது இளமைப் பருவத்தைக் கடந்தவர் . இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவத்...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...