Skip to main content

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள்



அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள்
ஞா. குருசாமி,
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர் ரோகித் வெமுலா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்ணைப் பெற்று மருத்துவப் படிப்பை எதிர்நோக்கி இருந்த அனிதா என ஆராய்ச்சிலும் கல்வியிலும் தனித்திறன் பெற்ற திறமைசாலிகளை அரசு எந்திரம் குறிவைத்து தற்கொலைக்கு உள்ளாக்கும் போக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த தேசத்தில் வருணாசிரமத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் சதிக்கொடுமை ஒன்றும் புதியதல்ல. ஏகலைவர் காலம் தொடங்கி நடத்து வருகிறது. ஏகலைவர், நந்தர் என்னும் மிக நீண்ட வரிசையில் இன்றைக்கு அனிதாவை இழந்திருக்கிறது இந்த சமுதாயம் என்று மிகவும் மொன்னையான சமாதானத்தைத் தற்காலிகமாகக் கூடத் தேடிக்கொள்ள மனம் மறுக்கிறது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் முக்கியக் கவனம் பெற்ற நிகழ்வு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரிய போராட்டம். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் ஒருங்கிணைந்து களம் கண்டனர். அது தமிழர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போய் உறங்கிக் கிடந்த வீரத்தின் வெளிப்பாடு என்றெல்லாம் பேசப்பட்டது. அந்தளவுக்கு பண்பாடு முக்கியம் என்பதாய் மாட்டுக்காகப் போராடிய சமுதாயம், நீட் தேர்வால் உண்டாகும் பாதிப்பை பேசத் தயங்குவது புதிராக இருக்கிறது. ஆங்காங்கு நீட் தேர்வுக்குத் தடை கோரி கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் பொதுமக்களுக்கான பங்களிப்பு ஜல்லிக்கட்டுக்கு இருந்ததைப் போன்று இல்லை.
ஏற்றத்தாழ்வுக்குக் குறைவில்லாத இந்தத் தேசத்தில் மந்திரிகள், அரசியல்வாதிகள், வருவாய்த் துறையினர், ஆசிரியர்கள், சுமைதூக்குவோர், தூய்மைப்பணியாளர்கள், சமையல்காரர்கள், பிச்சைக்காரர்கள், திருநங்கைகள், பாலியல் தொழிலாளிகள், வேட்டையாடிகள், வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் என பலப்பல தரப்பினருக்கும் ஒவ்வொரு உலகம் இருக்கின்றது. ஒவ்வொரு உலகத்திற்குள்ளும் ஒவ்வொரு சிறு உலகங்கள் இருக்கின்றன. இவர்கள் எல்லோருக்கும் பொருளாதாரத்தில், வாழ்விடச் சூழலில், கல்வியில் எப்போதும் சமத்துவம் இருந்ததில்லை. ஒவ்வொரு உலகமும் இன்னொன்றைச் சார்ந்தோ, சுரண்டியோ வாழ வேண்டிய நிர்பந்தங்கள் சுயநலத்தின் பேரில் வலுவாகக் கட்டப்பட்டுள்ளன.
இந்த உலகங்களின் எதிர்கால அபிலாசைகளுக்காக அவரவர் வசதிகளைப் பொறுத்து வகைவகையாய் பள்ளிகள் உருவாக்கப்பட்டு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஒரே பள்ளிக்குள்ளும் விதவிதமான கற்பித்தல் முறைகள் வழக்கத்தில் உள்ளன. தேர்வு முடிவுகளிலும் வேறுபாடுகள் ஏராளம். இந்தச் சூழலில் படித்து வருகிறவர்களுக்குத் தேசிய அளவில் பொதுத் தகுதித் தேர்வு நடத்துதல் எந்த வகையிலும் ஏற்புடையதன்று. பத்துத் தலைமுறைகளாகக் கல்விப் பின்புலமுள்ளவருக்கும் முதல் தலைமுறையைச் சார்ந்தவருக்கும் ஒரே மாதிரியான தேர்வை நடத்துதல் துரோகமன்றி வேறெதுவுமில்லை.
அறிவாளிகளாகத் தங்களைக் கருதிக்கொள்கிறவர்கள் மருத்துவப் படிப்பு கிடைக்காவிட்டால் வேறு படிப்பில் சேரலாம் என்று யாருக்குமே தெரியாத, யார் சிந்தனையிலும் உதிக்காத, அறிவுச்சுடர் பிரகாசிக்கும் படியான கருத்தைச் சொல்கிறார்கள். அதிகபட்ச மதிப்பெண் பெற்றவர் கேட்கும் படிப்பை அவர்களுக்கு வழங்குவதில் அரசுக்கு என்ன பிரச்சினை? அவர்களுக்கு மறுக்கப்படும் வாய்ப்பு யாருக்குக் கொடுக்கப்படுகிறது? நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உண்மையிலேயே திறமைசாலிகளா? அவர்களுக்காக வரையறுக்கும் திறமைக்கான அளவுகோள் என்ன? என்பது பற்றியயெல்லாம் மாற்றுப் படிப்பை முன்வைக்கும் அறிவாளிகள் சிந்திப்பதாகத் தெரியவில்லை. இன்னொரு புறம் அரசின் கொள்கை முடிவுகளும் நகை முரணாக இருக்கின்றன.
அரசுதான் பள்ளிகளை நடத்துகிறது. ஆசிரியர்களை நியமிக்கிறது. பாடத்திட்டத்தை வரையறுக்கிறது. வினாத்தாள் தயாரிக்கிறது. தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடுகிறது. அதில் அதிகபட்ச மதிப்பெண் எடுத்தவர், தாம் விரும்பிய படிப்பைக் கேட்கும் போது அதற்கு அவர் தகுதி இல்லை என்றால் அதற்கு ‘அரசுக்குத் தகுதி இல்லை’ என்பது தானே பொருளாக இருக்க முடியும்? நீட் தேர்வு எழுதினாலே மருத்துவப் படிப்பில் சேர முடியுமென்றால் அத்தேர்வைக் கட்டாயமாக்கும் முன் அது குறித்து கற்றலில் பின் தங்கிய, கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு அரசு முறையான வழிகாட்டலைச் செய்யாதது ஏன்? திடீரென புதிய விதியைக் கொண்டு வந்து அதற்கு தயார் ஆகச்சொல்வது மடமை அன்றி வேறென்ன?
ஆட்சியாளர்கள் மக்களுக்கானவர்கள் என்று மக்கள் இன்னும் நம்பிக்கொண்டு இருப்பதுதான் பேரபத்தம். ஆட்சியாளர்கள் எப்போதும் பெரும்பணக்காரர்களின் காவலர்கள், மக்களுக்கானவர்களாகக் காட்டிக்கொள்வதில் தேர்ந்த நடிகர்கள். ஆட்சியையும் பதவியையும் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சியில் சிறிதளவாவது நீட் தேர்வுக்கு எதிராக எடுத்திருந்தால் அனிதாவை இழந்திருக்க வேண்டியிருக்காது. அதிகபட்ச மதிப்பெண் எடுத்த அனைவரும் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பார்கள். ஆனால் ஆட்சியாளர்களுக்கு மருத்துவம், அரசுத்துறைகள், இட ஒதுக்கீடு, சமூகநீதி முதலியன பறிபோவது பற்றிய கவலை கொஞ்சமும் இல்லை. அதற்கான தேவையும் அவர்களுக்கு இருந்ததில்லை. அதனால் தான் வெமுலாவையும் முத்துக்கிருஷ்ணனையும் அனிதாவையும் பலி கொடுக்க வேண்டியிருக்கிறது.
இதையெல்லாம் மிக இயல்பாகக் கடந்து, தேசத்தில் எல்லா மக்களும் செல்வத்தில் சிறந்தோங்கி இருப்பது போலவும் மக்களின் தேவையை மக்களே பார்த்துக்கொள்வதற்கான திராணி அவர்களுக்கு இருப்பதாகவும் அரசுக்கு வேறு வேலை எதுவும் இல்லை என்பதால் சும்மா இருக்க மனம் ஒப்பாமல் குப்பையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. சிலர் அதை ‘தூய்மை பாரதம’; என்கிறார்கள். அவர்கள் சொல்லும் பாரதத்தின் ‘தூய்மை’ எது? என்பது தான் நம் முன் நிற்கும் முக்கியமான கேள்வி. தூய்மை என்பது மனுவின் கோட்பாட்டுக்குள் வராதவர்களைக் கொன்ற பின் ஏற்படுகின்ற தூய்மையா? ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் தேசத்தில் எல்லோரும் சமம் எனக் கூறி ஒற்றைச் சட்டத்தைப் புகுத்தி ஏழைகளைச் சாகடித்த பின் ஏற்படுகின்ற தூய்மையா? மனுஸ்மிருதிக்கு ‘தகுதித்தேர்வு’ என்று புதிய பெயர் சூட்டி வர்ணக் கோட்பாட்டை வலுப்படுத்திய பின் ஏற்படுகின்ற தூய்மையா? பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்த பின் ஏற்படுகின்ற தூய்மையா? கார்ப்பரேட்களுக்கு வேளாண் நிலங்களைத் தரை வார்த்தபின் ஏற்படுகின்ற தூய்மையா? என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

Comments

Popular posts from this blog

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும்

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும் 1933 இல் எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதிய நூல் சதபத பிராமணம். வேதங்கள் , உபநிடதங்கள் ஆகியவற்றின் செய்திகளை விளக்கும் வண்ணம் எதையாவது எழுதும் வழக்கமுடைய ஜம்புநாதன் , யசூர் வேதத்தின் சில பகுதிகளை விளக்கும் முகமாக சதபத பிராமணத்தை எழுதியிருக்கிறார். அதில் 88 விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அவர் ‘ கதைகள் ’ என்கிறார். உண்மையில் அவற்றைக் கதைகள் என்று சொல்வது கூட ரெம்ப அதிகம் தான்.  இந்நூலை அவர் ஹரி ஜனங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே விவரிக்கிறார். நூலில் ருத்திரனின் இயல்புகளை விவரிக்கும் அவர் ‘ ருத்திரனின் குணங்கள் அனைத்தும் ஹரிஜனங்களிடம் உள்ளது ’ என்பதாக அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த ஒப்பீட்டின் வழி அவரது அறிவின் அளவு துலக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி நூல் எதற்காக எழுதப்பட்டிருக்கும் என யோசித்தால் ஹரிஜனங்களை இந்துக்களாகச் சித்திரிப்பதே நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சான்றாக , ருத்திரனுக்கும் ஹரிஜனங்களுக்கும் அவர் சொல்லும் ஒற்றுமைக் காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். உலகம் ...