Skip to main content

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள்



அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள்
ஞா. குருசாமி,
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர் ரோகித் வெமுலா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்ணைப் பெற்று மருத்துவப் படிப்பை எதிர்நோக்கி இருந்த அனிதா என ஆராய்ச்சிலும் கல்வியிலும் தனித்திறன் பெற்ற திறமைசாலிகளை அரசு எந்திரம் குறிவைத்து தற்கொலைக்கு உள்ளாக்கும் போக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த தேசத்தில் வருணாசிரமத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் சதிக்கொடுமை ஒன்றும் புதியதல்ல. ஏகலைவர் காலம் தொடங்கி நடத்து வருகிறது. ஏகலைவர், நந்தர் என்னும் மிக நீண்ட வரிசையில் இன்றைக்கு அனிதாவை இழந்திருக்கிறது இந்த சமுதாயம் என்று மிகவும் மொன்னையான சமாதானத்தைத் தற்காலிகமாகக் கூடத் தேடிக்கொள்ள மனம் மறுக்கிறது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் முக்கியக் கவனம் பெற்ற நிகழ்வு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரிய போராட்டம். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் ஒருங்கிணைந்து களம் கண்டனர். அது தமிழர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போய் உறங்கிக் கிடந்த வீரத்தின் வெளிப்பாடு என்றெல்லாம் பேசப்பட்டது. அந்தளவுக்கு பண்பாடு முக்கியம் என்பதாய் மாட்டுக்காகப் போராடிய சமுதாயம், நீட் தேர்வால் உண்டாகும் பாதிப்பை பேசத் தயங்குவது புதிராக இருக்கிறது. ஆங்காங்கு நீட் தேர்வுக்குத் தடை கோரி கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் பொதுமக்களுக்கான பங்களிப்பு ஜல்லிக்கட்டுக்கு இருந்ததைப் போன்று இல்லை.
ஏற்றத்தாழ்வுக்குக் குறைவில்லாத இந்தத் தேசத்தில் மந்திரிகள், அரசியல்வாதிகள், வருவாய்த் துறையினர், ஆசிரியர்கள், சுமைதூக்குவோர், தூய்மைப்பணியாளர்கள், சமையல்காரர்கள், பிச்சைக்காரர்கள், திருநங்கைகள், பாலியல் தொழிலாளிகள், வேட்டையாடிகள், வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் என பலப்பல தரப்பினருக்கும் ஒவ்வொரு உலகம் இருக்கின்றது. ஒவ்வொரு உலகத்திற்குள்ளும் ஒவ்வொரு சிறு உலகங்கள் இருக்கின்றன. இவர்கள் எல்லோருக்கும் பொருளாதாரத்தில், வாழ்விடச் சூழலில், கல்வியில் எப்போதும் சமத்துவம் இருந்ததில்லை. ஒவ்வொரு உலகமும் இன்னொன்றைச் சார்ந்தோ, சுரண்டியோ வாழ வேண்டிய நிர்பந்தங்கள் சுயநலத்தின் பேரில் வலுவாகக் கட்டப்பட்டுள்ளன.
இந்த உலகங்களின் எதிர்கால அபிலாசைகளுக்காக அவரவர் வசதிகளைப் பொறுத்து வகைவகையாய் பள்ளிகள் உருவாக்கப்பட்டு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஒரே பள்ளிக்குள்ளும் விதவிதமான கற்பித்தல் முறைகள் வழக்கத்தில் உள்ளன. தேர்வு முடிவுகளிலும் வேறுபாடுகள் ஏராளம். இந்தச் சூழலில் படித்து வருகிறவர்களுக்குத் தேசிய அளவில் பொதுத் தகுதித் தேர்வு நடத்துதல் எந்த வகையிலும் ஏற்புடையதன்று. பத்துத் தலைமுறைகளாகக் கல்விப் பின்புலமுள்ளவருக்கும் முதல் தலைமுறையைச் சார்ந்தவருக்கும் ஒரே மாதிரியான தேர்வை நடத்துதல் துரோகமன்றி வேறெதுவுமில்லை.
அறிவாளிகளாகத் தங்களைக் கருதிக்கொள்கிறவர்கள் மருத்துவப் படிப்பு கிடைக்காவிட்டால் வேறு படிப்பில் சேரலாம் என்று யாருக்குமே தெரியாத, யார் சிந்தனையிலும் உதிக்காத, அறிவுச்சுடர் பிரகாசிக்கும் படியான கருத்தைச் சொல்கிறார்கள். அதிகபட்ச மதிப்பெண் பெற்றவர் கேட்கும் படிப்பை அவர்களுக்கு வழங்குவதில் அரசுக்கு என்ன பிரச்சினை? அவர்களுக்கு மறுக்கப்படும் வாய்ப்பு யாருக்குக் கொடுக்கப்படுகிறது? நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உண்மையிலேயே திறமைசாலிகளா? அவர்களுக்காக வரையறுக்கும் திறமைக்கான அளவுகோள் என்ன? என்பது பற்றியயெல்லாம் மாற்றுப் படிப்பை முன்வைக்கும் அறிவாளிகள் சிந்திப்பதாகத் தெரியவில்லை. இன்னொரு புறம் அரசின் கொள்கை முடிவுகளும் நகை முரணாக இருக்கின்றன.
அரசுதான் பள்ளிகளை நடத்துகிறது. ஆசிரியர்களை நியமிக்கிறது. பாடத்திட்டத்தை வரையறுக்கிறது. வினாத்தாள் தயாரிக்கிறது. தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடுகிறது. அதில் அதிகபட்ச மதிப்பெண் எடுத்தவர், தாம் விரும்பிய படிப்பைக் கேட்கும் போது அதற்கு அவர் தகுதி இல்லை என்றால் அதற்கு ‘அரசுக்குத் தகுதி இல்லை’ என்பது தானே பொருளாக இருக்க முடியும்? நீட் தேர்வு எழுதினாலே மருத்துவப் படிப்பில் சேர முடியுமென்றால் அத்தேர்வைக் கட்டாயமாக்கும் முன் அது குறித்து கற்றலில் பின் தங்கிய, கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு அரசு முறையான வழிகாட்டலைச் செய்யாதது ஏன்? திடீரென புதிய விதியைக் கொண்டு வந்து அதற்கு தயார் ஆகச்சொல்வது மடமை அன்றி வேறென்ன?
ஆட்சியாளர்கள் மக்களுக்கானவர்கள் என்று மக்கள் இன்னும் நம்பிக்கொண்டு இருப்பதுதான் பேரபத்தம். ஆட்சியாளர்கள் எப்போதும் பெரும்பணக்காரர்களின் காவலர்கள், மக்களுக்கானவர்களாகக் காட்டிக்கொள்வதில் தேர்ந்த நடிகர்கள். ஆட்சியையும் பதவியையும் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சியில் சிறிதளவாவது நீட் தேர்வுக்கு எதிராக எடுத்திருந்தால் அனிதாவை இழந்திருக்க வேண்டியிருக்காது. அதிகபட்ச மதிப்பெண் எடுத்த அனைவரும் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பார்கள். ஆனால் ஆட்சியாளர்களுக்கு மருத்துவம், அரசுத்துறைகள், இட ஒதுக்கீடு, சமூகநீதி முதலியன பறிபோவது பற்றிய கவலை கொஞ்சமும் இல்லை. அதற்கான தேவையும் அவர்களுக்கு இருந்ததில்லை. அதனால் தான் வெமுலாவையும் முத்துக்கிருஷ்ணனையும் அனிதாவையும் பலி கொடுக்க வேண்டியிருக்கிறது.
இதையெல்லாம் மிக இயல்பாகக் கடந்து, தேசத்தில் எல்லா மக்களும் செல்வத்தில் சிறந்தோங்கி இருப்பது போலவும் மக்களின் தேவையை மக்களே பார்த்துக்கொள்வதற்கான திராணி அவர்களுக்கு இருப்பதாகவும் அரசுக்கு வேறு வேலை எதுவும் இல்லை என்பதால் சும்மா இருக்க மனம் ஒப்பாமல் குப்பையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. சிலர் அதை ‘தூய்மை பாரதம’; என்கிறார்கள். அவர்கள் சொல்லும் பாரதத்தின் ‘தூய்மை’ எது? என்பது தான் நம் முன் நிற்கும் முக்கியமான கேள்வி. தூய்மை என்பது மனுவின் கோட்பாட்டுக்குள் வராதவர்களைக் கொன்ற பின் ஏற்படுகின்ற தூய்மையா? ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் தேசத்தில் எல்லோரும் சமம் எனக் கூறி ஒற்றைச் சட்டத்தைப் புகுத்தி ஏழைகளைச் சாகடித்த பின் ஏற்படுகின்ற தூய்மையா? மனுஸ்மிருதிக்கு ‘தகுதித்தேர்வு’ என்று புதிய பெயர் சூட்டி வர்ணக் கோட்பாட்டை வலுப்படுத்திய பின் ஏற்படுகின்ற தூய்மையா? பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்த பின் ஏற்படுகின்ற தூய்மையா? கார்ப்பரேட்களுக்கு வேளாண் நிலங்களைத் தரை வார்த்தபின் ஏற்படுகின்ற தூய்மையா? என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

தத்துவங்கள் குறித்த உரையரங்கம்

  தத்துவங்கள் குறித்த உரையரங்கம் கோவை பீளமேட்டில் ‘ பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வு மையம் ’ தத்துவ அறிமுகக் கூட்டம் ஒன்றை 2026 மே 29 அன்று நடத்தியது . அதன் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தார் . பெரியாரியம் குறித்து   கு . ராமகிருஷ்ணன் பேசினார். இணைய வழியில் கலந்துகொண்ட   தியாகு மார்க்சியம் குறித்துப் பேசினர் .  நான் அம்பேத்கரியம் பேசினேன் . அம்பேத்கரை எப்படி வாசிக்கத் தொடங்குவது என்பதில் தொடங்கி கூட்டுச் சிந்தனையில் அம்பேத்கரின் அவசியத்தை வலியுறுத்துவதாக எனது உரையை அமைத்துக் கொண்டேன் . மனநிறைவான நிகழ்வாக அமைந்தது . சிறிய அளவிலான கூட்டம் என்றாலும் ஒருசிலரைத் தவிர அனைவரும் பார்வையற்றவர்களே . அவர்களோடு பேசிய தருணங்கள் நாம் பார்த்திராத உலகத்தைக் காட்டின . ஒருவர் ‘ மாற்றுத்திறனில்  21 வகை உள்ளதாக அரசு வரையறுத்து இருக்கிறது . எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கருதுவது மாற வேண்டும் ’ என்றார் . ‘ நடக்க இயலாதவர்களையும் எங்களையும் எப்படி ஒன்றாகக் கருத முடியும் ’ என்ற கேள்வியில் உறுதியாக இருந்தார் . ‘ நடக்க இயலாதவர் தன்னால் இயல்பாகத் தனித்துச் ...

இராணிப்பேட்டை அமுதாவும் அதிபர் டிரம்ப்பும்

கடந்த 2026  ஜனவரி 09 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம் ,  பொன்னேரியில் முதல் அமைச்சர் கலந்துகொண்ட ‘ உங்க கனவ சொல்லுங்க ’ நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கனவைச் சொல்ல அழைக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கம் ஒன்றியம் , கரிவேடு ஊராட்சி , சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவரும் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் கங்கையம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவின் ஊக்குநருமான எம் . அமுதா தனது கனவைச் சொன்னார் .  பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு கடனுதவிகளைப் பெற்று மாவு அரைக்கும் எந்திரந்தின் மூலம் வருமானம் ஈட்டி வரும் அமுதா எஸ்சி / எஸ்டி மக்களுக்கு மானியக் கடன் கிடைப்பதாகவும் தங்களுக்கு நேரடிக் கடன் மட்டுமே கிடைப்பதாகவும் குறைபட்டுக் கொண்டார் . அவர் பேச்சில் இருந்த முக்கியமான விஷயம் ‘ எஸ்சி எஸ்டிக்கெல்லாம் குடுத்தா நாங்க எங்க போறது ’ என்கிற அழுத்தம் தான் . அவரது தேவையைக் கேட்டுப் பெறுவதில் அவருக்கு உரிமை உண்டு . ஆனால் ‘ எஸ்சி எஸ்டிகளுக்குக் கிடைக்கிறது எங்களுக்குக் கிடைக்கவில்லை ’ என்கிற ஒப்பீடு சரியானதல்ல . தவிர , இதை அவரது தனிப்பட்ட கருத்து என்பதை விட கூட்டுச் சமூகத்தின் மனநிலை என்பதற்கு அ...