Skip to main content

தலித் நில அபகரிப்பும் சர்வே கோப்புகளைத் தேடியலையும் ரியல் எஸ்டேட் அதிபர்களும்

தலித் நில அபகரிப்பும் சர்வே கோப்புகளைத் தேடியலையும் ரியல் எஸ்டேட் அதிபர்களும்
ஞா.குருசாமி

அதிகாரத்தை நோக்கிய பயணம் குருதி வாடையுடையது. அதன் வழி நெடுக மோசடிகளைக் காணமுடியும். பசி உணர்வைப் போல மிக எதார்த்தமான ஒன்றாக அதிகாரத்திற்கான இயங்கியல் வௌ;வேறு வடிவங்களில் மனிதனுக்குள் இருந்து வந்திருக்கிறது. சமூக அதிகாரம் குடும்ப அதிகாரம் எனப்பட்டவை ஈர்ப்பு மையங்களாக தகவமைக்கப்பட்டு அதைக் கைப்பற்ற மேற்கொண்ட நடவடிக்கைகளை வரலாறு எனச் சொல்லி நம்மை நம்ப வைத்திருக்கிறார்கள். சமூக அதிகாரத்தின் உற்பத்தி களமாக நிலமும், குடும்ப அதிகாரத்தின் உற்பத்திக் களமாக பெண்ணும் இருப்பதை நாம் அவதானிக்கமுடியும். இன்று நிலங்களை வாங்கிக் குவிக்கும் வினைகளுக்குப் பின்னால் உருவாகும் அதிகார மையம் தலித்துகளுக்கான பழைய தடைகளைத் திடப்படுத்துவதாகவோ, வீரியமுடைய புதிய தடையை ஏற்படுத்துவதாகவோ அமையக் கூடும்.
நிலவுடைமையிலான காலம் தொடங்கி இன்று வரை சமூக அதிகாரம் நிலவுடைமையாளர்களிடம் இருந்து வருவதற்குக் காரணம் அவர்களின் நில அனுபோகம் தான். நிலம் × நிலமின்மை என்னும் முரண் கருத்துருவாக்கங்கள் இயல்பாகவே ஆண்டான் × அடிமை என்பதை உடன் உருவாக்கிக் கொள்கிறது. இது தொடர்ந்து நிலமற்றவர்கள் நிலம் உள்ளவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தி நிலமற்றவர்களை மௌனியாக்கி வருகிறது. தலித்துகளுக்கு நிலவுடைமையாளர்களின் நேரடியான செயல்பாடுகளினால் ஏற்படும் கொடுமைகளை விட அவர்கள் மௌனியாக்கப்படுவதன் மூலம் ஏற்படும் கொடுமைகள் வலிகள் நிரம்பியவை. இது சத்தமில்லமால் சாகடிக்கும் தன்மையை ஒத்ததாகும்.
கடந்த நாற்பது ஆண்டுகளில் சூடு பிடித்த ரியல் எஸ்டேட் தொழில் இன்றைக்கு மிகுந்த வருமானம் ஈட்டும் தொழிலாக மாறியிருக்கிறது. உள்;ர் தொலைக்காட்சி சேனல்களின் விளம்பரத் தீனியாக ரியல் எஸ்டேட் விளம்பரங்களே வலம் வருகின்றன. ரியல் எஸ்டேட் அதிபர்கள் சிலரும் தொலைக்காட்சி சேனலை நடத்துகின்றனர். ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அதிகாரி, வட்டாச்சியர், சார்பதிவாளர், பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து எழுத்தர் என ஒரு கூட்டமே சத்தமில்லாமல் வேலை செய்து கொண்டு இருக்கிறது. அதற்காக லட்சங்கள் கைமாறுகின்றன. நிலங்களின் விற்பனை பரப்பு அரசுப்பணியில் இருக்கும் நடுத்தர மக்களை நோக்கியும், கொள்முதல் பரப்பு தலித்துகளையும் சிறுநிலவுடைமையாளர்களை நோக்கியுமே விரிகிறது. மாநில, மாவட்ட நிர்வாகங்களில,; பள்ளி, கல்லூரிகளில் புதிதாக பணி வாய்ப்;புப் பெற்ற, பணி செய்து கொண்டிருக்கிறவர்களின் தொலைபேசி எண்கள், பணிபுரியும் இடம், பெறுகின்ற சம்பள விபரம் ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு உரியவரோடு தொடர்பு கொள்கிறார்கள். மதி மயங்கப் பேசி, இலவசமாகக் காரில் அழைத்துச் சென்று வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்து விற்பனையைச் செய்து வாழ்நாள் கடனாளியா மாற்றி விடுகிறார்கள். தலித்துகளின் நிலங்கள் கிராம நிர்வாக அரிகாரி மூலம் வட்டாச்சியருக்கு அடையாளம் காட்டப்படுகிறது. அடுத்த கட்ட வேலையை வட்டாச்சியர் பார்த்துக்கொள்கிறார். நிலத்தின் வரலாறு தலித்துகளுக்கு எதிரானதாக புனையப்பட்டு அவர்கள் துரத்தப்படுகின்றனர். ரியல் எஸ்டேட் அதிபர்களின் பணபலத்திற்கும், ஆள்பலத்திற்கும், நீதிமன்றங்களின் இழுத்தடிப்புகளுக்கும் பயந்து தலித்துகள் தன்னுடைய நிலங்களை இழந்து வருகிறார்கள். மாவட்ட, மாநில இணைப்புச் சாலைகளை ஒட்டிய வீடுகளுக்கு இருக்கும் குறைந்த பட்ச நிரந்தரம் கூட தலித் குடியிருப்பு நிலங்களுக்கு இல்லாத நிலையை வலிந்து உருவாக்குகிறார்கள்.
தலித் குடியிருப்புகளை ஒட்டியுள்ள சாதி இந்துகளின் விளை நிலங்கள் மனையடி நிலங்களாக மாறி பல ஆண்டுகள் ஆகியும் விளையேற்றம் காணவில்லை. இது போதிய விற்பனையையும் எட்டவில்லை என்ற குற்றச்சாட்டு சாதி இந்துகளால் முன்வைக்கப்படுகிறது. தலித் குடியிருப்புகளை ஒட்டி தன் வீட்டை அமைத்துக்கொள்வதில் சாதி இந்துகள் விரும்புவதில்லை. இதனால் தலித்துகள் தானாகவே தங்கள் குடியிப்புகளை காலி செய்கின்ற அளவுக்கு தொல்லைகள் கொடுக்கப்படுகின்றன. மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மாடக்குளம் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதியைச் சுற்றியிருந்த விளைநிலங்கள் சமீப காலம் வரை விளைபோகமால் இருந்து இப்பொழுது வேறு வழியின்றி தலித்துகளுக்கே விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து, தண்ணீர் வசதியுள்ள கிராமப்பகுதிகளில் தலித் குடியிருப்புகளை ஒட்டிய நிலங்களை வாங்கி வீட்டடி நிலங்களாக மாற்றுமுன் முதல் வேலையாக தலித் குடியிருப்புகளைப் பிரித்து தார்ச்சாலை அமைக்கிறார்கள். தீண்டாமைச் சுவர்கள் கண்ணுக்குத் தெரிகிற அளவுக்கு தீண்டாமை தார்ச்சாலைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை என்கிற நுட்பத்தைச் சாதி இந்துகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
இந்திராகாந்தி நினைவு குடியிருப்புத் திட்டம், பசுமை வீடுகள் திட்டம் முதலியவற்றினால் பயன்பெறும் தலித்துகள் தங்களது வீடுகளைக் கட்டி முடிப்பதற்குள் குறைந்தபட்சம் இரண்டு லட்சங்களுக்காவது கடனாளியாகிறார்கள். இதைத் தனியார் நிதி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு நிலவேட்டையில் இறங்குகின்றன. நிதியுதவி செய்வதாகக் கூறிக்கொண்டு தானே முன்வரும் நிதிநிறுவனங்கள் வீட்டுப் பட்டாவை வாங்கிக்கொண்டு நிதி வழங்குகின்றன. ஐந்து வருடத் தவனைக் காலத்தில் இரண்டு லட்சத்திற்கு இரண்டு லட்சம் வட்டி கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் தலித்துகள், கடனை அடைக்கமுடியாமல் இறுதியில் நிதிநிறுவனத்திடமே தங்கள் வீடுகளை விற்றுவிடுகின்ற அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அப்படி விற்கப்படும் வீடுகள் ஏலத்தின் மூலம் உள்;ர் சாதி இந்துகளுக்குக் கைமாறுகின்றன.
தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இதுவரை சராசரியாக 12 வீடுகள் வரை அபகரிக்கப்பட்டு இருக்கின்றன. ஆண்டுதோறும் 800 இல் இருந்து 1200 ஹெக்டர் வரை அரசு பயன்பாட்டுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இதில் வேளாண்மை நிலங்கள் 700 இல் இருந்து 1000 ஹெக்டர் வரையிலும், குடியிருப்பு நிலங்கள் 300 இல் இருந்து 500 ஹெக்டர் வரையிலும் கையகப்படுத்தப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புறம்போக்கு நிலங்கள் 200 இல் இருந்து 300 ஹெக்டர் வரை ஆண்டுதோறும் அரசுப் பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்படுகின்றன. இதில் வேளாண்நிலங்களில் சராசரியாக 600.5 ஹெக்டர் நிலங்களும், குடியிருப்பு நிலங்கள் 175.25 ஹெக்டர் நிலங்களும் தலித் நிலங்களாக இருக்கின்றன. சாதி இந்துகளின் நிலங்களை விட தலித்துகளின் நிலங்களைக் கையகப்படுத்துவதில் அரசு எப்போதுமே தீவிர முனைப்பு காட்டுகிறது. இதற்குக் காரணம் என்னவெனில் நிலங்களைக் கையகப்படுத்தும் போது சாதி இந்துகளின் அளவுக்கு தலித்துகள் எதிர்வினை ஆற்றுவதில்லை. சிலபொழுது எதிர்வினை ஆற்றினாலும் தலித்துகளை எளிதாக சமரசம் செய்து விட முடிகிறது என்று வெளிப்படையாகவே அரசு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சிருக்கிறது. நான்குவழிச் சாலை அமைப்பதற்கு மட்டும் தமிழகத்தில் தலித்துகளின் வேளாண்மை நிலங்கள் சுமார் 380 ஹெக்டர் நிலங்களும், குடியிருப்பு நிலங்கள் சுமார் 120 ஹெக்டர் நிலங்களும் கையப்படுத்தப்பட்டு இருக்கின்றன. தலித் அல்லாதோரின்; வேளாண்மை, குடியிருப்பு நிலங்கள் இரண்டிலுமாக சுமார் 900 ஹெக்டர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஒப்பீட்டளவில் சாதி இந்துகளின் நிலங்களை விட தலித்துகளின் நிலங்கள் குறைவு என்றாலும் வாழ்க்கை தரம், பொருளாதாரம், கல்வி ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும் போது தலித்துகள் தங்கள் தகுதிக்கு அதிகமாகவே இழந்திருக்கிறார்கள். குடியிருப்பு நிலங்களை அபகரிக்க முடியாத சூழல்களை உருவாக்கி தலித்துகள் சுய வலிமையை கட்டமைக்கும் போது தான் கொள்ளையடித்தல், தீ வைத்தல் போன்றவை நிகழ்கின்றன. இதற்கு ஊடகக் கவனம் பெற்ற தர்மபுரி, மரக்காணம் கலவரங்கள் சமீபத்திய உதாரணங்கள். அக்கனாபுரம் காலனி போன்ற ஊடக்கக் கவனம் பெறாத கொள்ளையடிப்புகள் ஏராளம்.
ரியல் எஸ்டேட் அதிபர்களின் கொள்முதல் இலக்குகள் தலித் நிலங்களைப் பொறுத்த வரை 99 விழுக்காடு வேளாண்மை நிலங்களை நோக்கியதாகவே இருக்கிறது. சில கோடிகளை கையில் வைத்திருக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் சமீன்தாரின் வாரிசுகளாவோ, வெளிநாடுகளில் தொழில் செய்யும் தமிழர்களின் எஜென்டுகளாகவோ, அரசியல்வாதிகளின் பினாமிகளாகவோ இருக்கிறார்கள். சர்வே கோப்புகளுக்காக நாள்தோறும் வட்டாச்சியர் அலுவலகம் ஒவ்வொன்றுக்கும் குறைந்த பட்சம் மூன்று கார்களாவது வந்து செல்வதாகக் கூறுகின்றனர். வருவாய் கிராமங்களின் எல்லைகள், நிலவுரிமையாளர்களின் பெயர்கள், அவர்களின் சாதிகள், வில்லங்க விபரங்கள், அரசின் விலை நிர்ணயம். சர்வே எண்கள் பற்றிய விவரங்கள் முதலியவற்றை வட்டாச்சியர் அலுவலகங்களை விட ரியல் எஸ்டேட் அலுவலகங்கள் கணினி மயமாக்கி நிர்வகித்து வருகின்றன. சர்வே கோப்புகளை வைத்துக் கொண்டு நிலங்களை சாலையை ஒட்டியுள்ளவை, கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளை ஒட்டியவை, நீர்வசதி மற்றும் செழிப்பானவை, மாநகராட்சி எல்லைக்குள் வருபவை, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் வருபவை, கிராம பஞ்சாயத்து எல்லைக்குள் வருபவை என்ற ஏழு பிரிவுகளாக வகைப்படுத்திக் கொள்கின்றனர். மேலும் அவற்றை வேளாண்மை செய்யப்படுபவை, தரிசு நிலங்கள், வேளாண்மைக்கு உதவாத உப்புநிலங்கள் என்றும் வகைப்படுத்துகின்றனர். மாநகராட்சி எல்லைக்குள் சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை ஒட்டிய வேளாண்மை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் நிலங்கள் ~கிரேடு ஒன்| எனப் பெயரிடப்பட்டு உச்சபட்ட விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம பஞ்சாயத்து எல்லைக்குள் வரும் உப்புநிலங்கள் ~கிரேடு செவன்| எனப் பெயரிடப்பட்டு சில ஆயிரங்களுக்குள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
குறிப்பிட்ட நபரின் நிலத்தைக் கொள்முதல் செய்வதற்கு முன்னால் அவரை சரிக்கட்டி இடைத்தரகராகச் செயல்படுவதற்கு தகுதியான நபரைத் தேர்வு செய்கின்றனர். நிலங்களை அபகரிப்பதில் இடைத்தரகர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. தலித் நிலங்களைப் பொறுத்தமட்டில் மாநகராட்சி எல்லைக்குள் வரும் நிலங்களைக் கொள்முதல் செய்வதற்கும், கிராம பஞ்சாயத்து எல்லைக்குள் வரும் நிலங்களைக் கொள்முதல் செய்வதற்கும் வேறுவேறு அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். கிராம நிலக்கொள்முதலில் உரிமையாளருக்குச் சொல்லிவிடப்படுகிறது. அலுவலகத்திற்கு வரும் அவர்களிடம் தேநீர், குளிர்பான உபசரிப்போடு பேச்சுகள் தொடங்குகின்றன. சில நேரங்களில் ஆண்டுக் கணக்கில் கூட விட்டு விட்டு பேரங்கள் நடக்கின்றன. ஆசை வார்த்தைகளும் தேவையானால் பயமுறுத்தல்களும் செய்து நிலங்கள் வாங்கப்படுகின்றன. மாநகராட்சி எல்லைக்குள் வரும் தலித் நிலங்களை வாங்குவதற்கு உரிமையாளரின் வீட்டுக்கே சென்று விடுகின்றனர். பேரங்கள் நடக்கும் போது சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. பொறியியல் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகவும், குறிப்பிட்ட நிலவுடைமையாளர் அவர் விற்பனை செய்யவிருக்கும் நிலத்தில் எந்த இடத்தில் விரும்புகிறாரோ அதில் வீடு ஒன்றைக் கட்டிக் கொடுப்பதாகவும், அந்தப் பகுதிக்கு அவருடைய பெயர் வைப்பதாகவும் கூறி நிலம் வாங்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட் அதிபர்கள் பத்திரப் பதிவு நடைபெறும் வரை ஒருவித அணுகுமுறையும், பதிவு நடைபெற்ற பிறகு வேறொரு அணுகுமுறையையும் கையாளுகின்றனர். கல்வியறிவு முழுமையாக கிடைக்கப்பெறாத தலித்துகள் நிலவிற்பனை தொடர்பான சிறு நடவடிக்கைகளைக் கூட அறியாமல், சட்ட பாதுகாப்பு, வழிமுறைகளைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கின்ற காரணத்தினால் ரியல் எஸ்டேட் அதிபர்களின் வேலை மிகவும் சுலபமாக முடிந்து விடுகிறது. சில இடங்களில் தலித் பஞ்சாயத்து தலைவர்களே ரியல் எஸ்டேட் அதிபர்களின் தலித் நில அபகரிப்புக்கு உடந்தையாக இருக்கின்றனர். தலித்துகள் குடியிருப்பு நிலங்கள் வாங்குகிற போது பின்பற்றப்படும் நடைமுறைகள் விரிவானவை. ஊரின் கழிவுநீர் தேங்கும் இடம், சுடுகாடு, இருப்பதிலேயே பள்ளமான இடம் போன்றவைகளே தலித்துகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. சாதி இந்துக்களின் குடியிருப்புக்கு மத்தியில் தலித் வீடுகள் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.
நிலங்களும் நிலங்கள் மூலமான உற்பத்திப் பொருளும் ஓரிடத்தில் குவியும் போது அது அதிகாரத்தை  உற்பத்தி செய்யும் தளமாக வினைப்படும். நிலங்களின் இழப்பு அதிகார இழப்பு என்பதை தலித்துகள் உணரவேண்டிய தேவையை இன்றைக்கு காலம் உருவாக்கிவிட்டிருக்கிறது. நில விற்பனை சாதி இந்துகளிடம் இருந்தாலும் அடுத்த கட்ட நகர்வுக்கான ஏற்பாட்டுச் சுழல்கள் எளிதாக உருவாகி விடுகின்றன அல்லது உருவாக்கப்படுகின்றன. தலித்துகளின் நிகழ்காலமே போராட்டத்திற்கு உரியதாக இருப்பதால் அடுத்த கட்ட நகர்வு சிக்கலானதாகவே இருக்கிறது. இனிவரும் காலங்களில் வேளாண்மை மூலமாக லாபம் ஈட்டல் சாத்தியமில்லாதது என்பதை சாதி இந்துக்கள் உணர்ந்து வேளாண்மையில் இருந்து விடுபட்டு சமீப காலமாக தொழில்துறைக்கு மாறி வருகிறார்கள். வேளாண் நிலங்களை விற்று தொழிலில் முதலீடு செய்கின்றனர் 2001 ஆம் ஆண்டில் சாதி இந்துகள் வேளாண்மையில் 43 விழுக்காட்டினரும் தொழில்துறையில் 27 விழுக்காட்டினரும் இருந்தனர். 2011 ஆம் ஆண்டு புள்ளிவிபரத்தின் படி வேளாண்மையில் 21 விழுக்காட்டினரும் தொழில்துறையில் 47 விழுக்காட்டினரும் இருந்துவருகின்றனர். தலித்துகள் 2001 ஆம் ஆண்டு வேளாண்மையில் 17 விழுக்காட்டினரும், தொழில்துறையில் 3 விழுக்காட்டினரும் இருக்க 2011 ஆம் ஆண்டு கணக்கின் படி வேளாண்மையில் 8 விழுக்காட்டினரும், தொழில்துறையில் 4.7 விழுக்காட்டினரும் இருந்து வருகின்றனர்.
வேளாண்நிலங்கள் பறிபோகும் நிலையில் சமூக அதிகாரத்தை நோக்கிய நகர்வுக்கு தலித்துகள் தொழில்துறைக்கு மாற வேண்டியிருக்கிறது. அதற்கு முன்னதாக தொழில்துறைக்கு ஏதுவான சூழல்களை உருவாக்க வேண்டிய தேவையும் வினைப்பாடுகளும் நிறைய இருக்கின்றன. நிலம் - அரசுப்பணி – அதிகாரம் என்றிருந்த சாதி இந்துகளின் மனோபாவம் இன்று நிலம் - தொழில் - அதிகாரம் என மாறியிருக்கிறது. இட ஒதுக்கீட்டுப் பயனால் தலித்துகளின் கவனம் அரசுப்பணி மீது குவிந்திருக்கும் இன்றைய நிலையில் அவர்கள் நிலம் - தொழில் - அதிகாரம் என்பதிலும் கவனத்தைக் குவிப்பது அடுத்த கட்ட நகர்வுக்கு உதவும். அதற்கும் தலித்துகள் போராடத்தான் வேண்டியிருக்கிறது.

Comments

Popular posts from this blog

அட்டைப்படத்தில் ஆம்ஸ்ட்ராங்

அட்டைப்படத்தில் ஆம்ஸ்ட்ராங் ‘ உயிர் எழுத்து ’ அட்டைப் படத்திற்கு எப்போது மே ஒரு சிறப்பு இருக்கும். பெரும்பாலும் அன்றைய மாதத்தில் பேசுபொருளாக இருக்கும் அரசியல் , சமூக ஆ ளுமைகளின் படங்களைத் தாங்கி வரும். உதாரணமாக , இரோம் ஷர்மிளா தேசிய அளவில் கவனம் பெறத் தொடங்கிய நேரத்தில் அவரது படம் தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் முதன்முதலில் உயிர் எழுத்தில் தான் அட்டைப்படமாக வந்தது. அதன் வழி பலர் இரோம் ஷர்மிளா பற்றி அறியலானார்கள் . ஒருமுறை பிரபஞ்சன் சிகரெட் புகைப்பது போன்ற அட்டைப்படம் உயிர் எழுத்தில் வந்தது . அது தன்னொழுக்கத்தில் கனிந்து சிறந்த சில அறிவுஜீவிகளிடம் புகைச்சலை உண் டாக்கியது. அதற்காக அவர்கள் கண்டபடி அபிநயம் பிடித்து விதவிதமான அடவுகளில் ஆடி முடித்தார்கள் . இப்படி உயிர் எழுத்து அட்டைப்படங்கள் குறித்து நேர் / எதிர் மறையாக நிறைய சொல்ல முடியும். இதுவரை வெளிவந்த அட்டைப் படங்களின் வரிசையை மையப்படுத்தி அ வை பேசிய அரசியல் குறித்தே விரிவான கட்டுரையை எழுதலாம். அந்த வகையில் உயிர் எழுத்து பாராட்டப்பட வேண்டிய சிறு பத்திரிகை . நிற்க.  ரஷ்யாவில் சோசலிச யதார்த்த வாதம் என்ற கோட்பாட்டைப் பிடித்த...

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...